எலியும் பூனையும் விளையாட்டில் பங்கு பெறுவோர் வட்டமாக நின்று கொள்ள வேண்டும். அவர்களில் ஒருவர் எலியாகவும் ஒருவர் பூனையாகவும் நடிக்க வேண்டும். எலியாக நடிப்பவர் வட்டத்திற்கு உள்ளேயும் பூனையாக நடிப்பவர் வட்டத்திற்கு வெளியேயும் இருக்க வேண்டும். இப்பொழுது பூனை, "எலி என்னா செய்யுது?" என்ற வினாவோடு பாடலைத் தொடங்கும். அதற்கு வட்டத்தில் நிற்போர் "தூங்குது"என்று பதில் கூற வேண்டும். மீண்டும் "எலி என்னா செய்யுது?" என்று பூனை கேட்கும். தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும். எலியின் செயல்களுக்கு ஏற்ப வட்டத்தில் உள்ளோர் "எழுந்திரிக்கிது, பல் தேய்க்கிது, சாப்பிடுது, சட்டை போடுது" என்று பதில் கூறிக் கொண்டே வரவேண்டும். கடைசியாக "வெளியே வரப் பாக்குது" என்று கூறியவுடன் பூனை எலியைப் பிடிக்கத் தயாராகிவிடும். பூனை வட்டத்திற்கு உள்ளே வந்துவிட்டால் எலி வெளியே ஓடி விடும். பூனை வெளியே வந்தால் எலி வட்டத்திற்குள் ஓடிவிடும். வட்டத்தில் நிற்போர் எலிக்கு ஆதரவாகச் செயல்படுவர். அதையும் மீறிப் பூனை எலியைப் பிடித்துவிட்டால் ஆட்டம் முடிந்துவிடும். பின் வேறு இருவர் எலியும் பூனையுமாக மாறி விளையாட்டைத் தொடருவர். யார் திறமையானவர் எலியா? பூனையா? - என்று பலம் பார்ப்பதும், சிறியோரின் நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதும் இந்த விளையாட்டின் அடிப்படையாகும். என்ன ! கார்ட்டூன் தொலைக்காட்சியில் டாம் அண்டு ஜெர்ரி (Tom & Jerry) பார்ப்பதைப்போல் இருக்கிறதா? இந்த எலியும் பூனையும் விளையாட்டே Tom & Jerry என்று உறுதியாகக் கூறலாம்.
|