கிராமத்திற்கு ஒரு இளைஞர் படித்து சுய முன்னேற்றம் அடைந்தால் தமிழக கிராமங்கள் தன்னிறைவு அடைந்த கிராமங்களாக உருவாகும். கிராம வளர்ச்சியே மாநில வளர்ச்சி, ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் இன்று பெரும்பாலான இளைஞர்களின் கனவு படித்து, வேலைக்கு சென்று பொருளாதார முன்னேற்றம் பெற்றபிறகு தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று சுருங்கி தன் பெற்றோர் செய்யும் பாரம்பரிய விவசாயம் போன்றவைகளை நிறுத்தி அதை வீட்டு மனைகளாக்கத் துடிக்கும் இடைத்தரகர்களுக்கு விற்றுவிட்டு, பெற்றோரை நகரத்திற்கு நகர்த்தும் வேலையை செய்வதை பெரும்பாலும் காணமுடிகிறது. அதில் மிகக்குறைந்த அளவில் சமூக சிந்தனை உள்ள இளைஞர்களே வாழ்வின் எந்த உயரத்திற்கு சென்றாலும், பொருளாதார ஏற்றம் பெற்றாலும், அமெரிக்கா சென்று குடியேறினாலும் தான் பிறந்த கிராமத்தை, தன்னை ஏற்றிய ஏணியை மறந்துவிடாமல் தொடர்ந்து ஏதாவது கிராமங்களுக்கு செய்யவேண்டும் என்று துடிப்புடன் இயங்கிவருகிறார்கள். அவர்களால்தான் அந்த கிராமத்திற்கு பெருமை.. கவிஞர் வைரமுத்து கிராமம் குறித்த தன் கவிதையில் குறிப்பிடும்போது , தன் மடியில் தவழ்ந்து உருவான குழந்தைகள் இறக்கை முளைத்து பறந்து இந்த பிரபஞ்சத்தில் பல திசைகளில் சென்று திரும்ப வந்து தனக்கு ஏதாவது செய்வார்கள் என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு கிராமமும் காத்திருப்பதாக உணர்ச்சியுடன் குறிப்பிடுவார்.
அதற்கு உதாரணமாக மதுரை அருகில் ஆண்டிச்சியூரணி என்ற ஊரில் பிறந்த இளங்கோ சந்திரன் என்ற இளைஞர் மதுரையில் படித்து, அமெரிக்காவில் வசித்தாலும், தன் கிராமத்திற்கு தொடர்ந்து ஏதாவது செய்து வருகிறார். அந்த வகையில் 2014-ல் இந்தியா சென்றபோது தன் நண்பர்களுடன் இணைந்து தன் தொடர்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு.வி. பொன்ராஜ் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஜி.ஆறுமுகம் ஆகியோரை தன் கிராமத்திற்கு அழைத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவக் குழுவை வரவழைத்து தன் கிராமத்து மக்களுக்கு இலவச மருத்துவப் முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். மேலும் "மரம் மதுரை" அமைப்பின் உதவியுடன் 100 மரக்கன்றுகளை நடுதல், கிராமப்புற இளைஞர்களுக்கு கல்வி விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் விழா சிறப்பு விருந்தினர் திரு.வி.பொன்ராஜ் அவர்கள் மாணவர்களுடன் பேசவும்,கலந்துரையாடவும் ஏற்பாடு செய்திருந்தார். இது குறித்து குறிப்பிடுகையில் திரு.இளங்கோ அவர்கள் இதற்கு தன் அமெரிக்க நண்பர்களான திரு.விஜய் மற்றும் திரு.ராஜேந்திரன் ஆகியோரும் தன் கிராமத்தை சேர்ந்த நண்பர்களும் மிகவும் உறுதுணையாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.
இதுபோன்ற இளைஞர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் கிடைத்துவிட்டால், கிராமங்கள் தன்னிறைவு அடைவதும் அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு கிராமங்களின் பல தேவைகள் சரிசெய்யப்படும்.
வாழ்த்துக்கள் இளங்கோ..
|