|
|||||
உயிர்மூச்சாம் ஒழுக்கம் காப்போம் ! உலகை மீட்போம் !! |
|||||
( சூழலியல் சார்ந்த உளவியல் கட்டுரை )
"உலகளாவிய நம் ஒழுக்கக்கேடுகளின் பினாமிகள் தான் சுனாமியும்; எய்ட்சும்; ஓசோன் மண்டல ஓட்டைகளும்; உலகம் வெப்பமயமாதலும் என்ற உண்மையை நாம் உணர்ந்துள்ளோமா ? இயற்கையோடு இயைந்து வாழ்வதில் இலக்கணம் படைத்த நம் முன்னோர்கள், ஒழுக்கத்தை உயிரினும் மேலாகப் போற்றினார்கள். நம்மையும் போற்றச் சொன்னார்கள். நாம் ஏற்றுக்கொள்ள மறந்தோம். மனம்போன போக்கில் வாழ்ந்தோம். இம்மையின் செம்மைகள் எல்லாவற்றையும் இன்று முழுமையாக இழந்து நிற்கின்றோம். நம்முடைய புற,- அக, - ஒழுக்கக்கேடுகளால் இன்று ஏற்பட்டிருக்கும் வாழ்க்கைச்சிதைவுகளைச் சீர்தூக்கிப்பார்த்தால் தான் 'எப்படி இருந்த நம்ம இப்படி ஆயிட்டமே !’ என்பது புரியும். இழப்பில் தான் எதனுடைய அருமையும் முழுமையாகத் தெரியும், என்ற அடிப்படையில் நாம் இழந்திருப்பவைகளைச் சுட்டினால்தான், ஒழுக்கத்தின் விழுப்பத்தை உள்ளபடியே உணரமுடியும். தனிமனித ஒழுக்கச்சிதைவின் உச்சகட்டம் தான் இன்று உலகயே உலுக்கிக்கொண்டிருக்கும் எய்ட்ஸ் நோய். சமுதாயக் கூட்டுறவின் உயிர்மூச்சாம் சாதி, மத, மொழி, இன நல்லிணக்கத்தைத் துறந்தோம் ! மனித நேயத்தை மறந்தோம் !! சாதி, மத, இனக்கலவரங்கள் இன்று தலைவிரித்தாடுகின்றன. தன்முனைப்பு, தன்னலப்போக்கால் தனிமனிதனும் நாடுகளும் இயற்கையோடு இயைந்து வாழும் இனிய ஒழுக்கத்தைக் கைவிட்டோம். இயற்கையோடு முரண்பட்டோம்.
அகழ்வாரைத் தாங்கும் பூமியின் பொறுமையை அணுகுண்டு கொண்டு சோதித்தோம். குறுகிய காலத்தில் குபேரர்கள் ஆவதற்கு, சுற்றுப்புறச் சூழல்களைச் சூறையாடினோம். இரசாயன நச்சுக் கலக்காத உணவுப்பொருட்களே இல்லை என்ற சாதனையைப் படைத்தோம். காட்டையெல்லாம் அழித்தோம். நிலத்தடிநீரையெல்லாம் உறிஞ்சித் தள்ளிவிட்டோம். தேவைக்கு அதிகமாக நீரைத் தேக்கினோம். ஆற்றமுடியாமல் இயற்கையன்னை சீற்றம் கொண்டாள். இயற்கைப் பேரழிவு இன்றும் தொடர்கிறது. முழுமையாக மாசுபட்டுக் கிடக்கும் நிலம், நீர், காற்று, ஆகாயம் இனம் புரியாத எத்தனையோ வகையான உடல்நலப் பாதிப்புகளை மனிதகுலத்துக்குப் பரிசளிக்கின்றன. இன்று செய்வதறியாது திகைத்து நிற்கின்றோம். இந்த அவலநிலை மாற என்ன வழி ? ஒரே வழி தான். ஒழுக்கக்கேடுகளை உடனடியாக நிறுத்திவிட்டு, நல்லொழுக்கங்களை நாளும் கடைப்பிடிக்க உறுதியேற்றுச் செயல்படவேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இயற்கை அன்னையின் ஆறாக்காயங்களுக்கு மருந்திட்டு ஆற்றவண்டும். நச்சுப்புகை கக்கும் நாகரிக அசுரர்களின் (ஆலை) கொட்டத்தை அடக்கி, ஓசோன் மண்டலத்தின் ஓட்டைகளை அடைப்போம். சாதிமத இன நல்லிணக்கம் கடைப்பிடித்து மனிதநேயத்துக்கு மதிப்பளிப்போம். இவற்றின் அருமைபெருமைகளை, இளையதலைமுறைக்கு எடுத்துரைப்போம் இவையெல்லாம் நடக்குமா? சாத்தியமா ? என்ற ஐயமும் வியப்பும் நமக்கு ஏற்படுவது இயல்பு தான் இருக்கும் இயற்கை வளங்களைக் காப்பதோடு அவற்றை மென்மேலும் பெருக்கும் நடவடிக்கைகளில் போர்க்கால அடிப்படையில் புயலெனச் செயல்படவேண்டும். இதில் சிறிதளவு பின்னடைவு ஏற்பட்டாலும் இளைய தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்ல எந்த நல்லதும் மிஞ்சாது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்து, இளையதலைமுறைக்கு நல்ல காற்று, ஆரோக்கிய உணவு என தூய்மையான சுற்றுச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய இன்றியமையாத கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது. சுற்றுச்சூழல் சுகாதார விழிப்புணர்வை சுற்றியிருக்கும் அனைவருக்கும் ஏற்படுத்துவோம், அனைவரையும் ஒருங்கிணைத்து அகிலத்தை நம் வாரிசுகள் அச்சமின்றி பாதுகாப்பாய் வாழ்வதற்கேற்ற வளமான பூமியாய் மாற்றுவோம். அந்த இலக்கை விரைவில் அடைய அல்லும்பகலும் அரும்பணியாற்றுவோம். - இரா.வீ.அப்பாத்துரை (appadurai50@gmail.com) |
|||||
by Swathi on 26 Nov 2014 1 Comments | |||||
Tags: Keep Discipline Save World Olukkam Nal olukkam katturai ஒழுக்கம் உலகம் | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|