தேவையானவை : 1. பன்னீர் - 2 கப் 2. சர்க்கரை - 2 கப் 3. தண்ணீர் - 4 கப் 4. குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
மலாய்க்கு : 1. பால் - 2 கப் 2. சர்க்கரை - 2 கப் 3. ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
அலங்கரிக்க : 1. துருவிய பிஸ்தா - 1 டீஸ்பூன் 2. நறுக்கிய பாதாம் - 3 3. குங்குமப்பூ - 1 சிட்டிகை
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பன்னீரை போட்டு, வெதுவெதுப்பான நீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பன்னீரை கொஞ்சம் எடுத்து நீள்வட்ட வடிவில் உருட்டி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
2. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி, கொதிக்கும் போது அதில் சர்க்கரை மற்றும் குங்குமப்பூ சேர்த்து, மிதமான தீயில் பாகு போன்று வந்ததும், நீள்வட்டமாக உருட்டி வைத்துள்ள பன்னீரை மெதுவாக போட்டு, நன்கு கொதிக்க விட வேண்டும்.
3. பிறகு மிதமான தீயில் பாத்திரத்தை பத்து நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். இந்த நேரத்தில் பன்னீரானது மெதுவாக அந்த பாகுவை உறிஞ்சி பெரிதாக மாறும். அப்போது மூடியைத் திறந்து, மீண்டும் கொதிக்க விட வேண்டும். பன்னீரானது மென்மையாக ஸ்பாஞ்ச் போன்று வந்ததும், அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
மலாய் செய்வதற்கு :
1. பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி, மிதமான தீயில் வைத்து, பால் பாதியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும். பாலானது கெட்டியானதும், அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து மீண்டும் இரண்டு நிமிடம் சர்க்கரை கரையும் வரை கொதிக்க விட வேண்டும்.
2. பால் கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு, குளிர வைக்க வேண்டும். அடுத்து அந்த நீள்வட்ட பன்னீரை நடுவில் வெட்டி, அதில் இந்த கெட்டியான பாலை ஊற்றி, நிரப்ப வேண்டும்.
3. பின்னர் அதன் மேல் பிஸ்தா, பாதாம் மற்றும் குங்குமப்பூ சேர்த்து அலங்கரித்தால் சுவையான மலாய் சம் சம் ஸ்வீட் ரெடி!!
|