வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெற போவதாக இந்தியாவின் நச்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் பி,சி.சி.ஐ.,க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் என அழைக்கப்படும், சச்சின் டெண்டுல்கர், இதுவரை, 198 டெஸ்ட் போட்டி, மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 50,009 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் "சதத்தில் சதம்' , ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதம் அடித்த வீரர், அதிக போட்டிகள் விளையாடிய வீரர் என சாதனைகளில் பல சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்த சச்சின், டெஸ்ட் போட்டிகளில் இருந்து எப்போது விடைபெறுவார் என "சஸ்பென்ஸ்' நீடித்து வந்தது. இதனிடையே, இவர் தனது 200 டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சச்சின் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு குறித்து, பி,சி.சி.ஐ.,க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, ஓய்வு பெறுவதற்கான நேரம் என்பதை நான் இதயப்பூர்வமாக உணர்கிறேன் . இதனை அறிவிப்பதற்கு எனக்கு அனுமதி அளித்தமைக்கு நன்றி. இது வரை எனக்கு துணையாகவும், பலமாகவும் இருந்த பி.சி.சி.ஐ., மற்றும் ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் அளித்த ஆதரவே எனக்கு பலமாக இருந்து வந்தது. கடந்த காலத்தில் கனவுகளுடன் இந்திய அணிக்காக உழைத்தேன். 24 ஆண்டுகள் ஆடியது எனக்கு கவுரவமாக கருதுகிறேன். 11 வயது முதல் கிரிக்கெட் ஆடி வந்துள்ளேன். கிரிக்கெட் இல்லாத வாழ்வை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. தற்போது, சொந்த மண்ணில் எனது 200வது டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளதை எதிர்பார்த்துள்ளேன். அன்று முதல் கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறேன்,'' என சச்சின் பி,சி.சி.ஐ.,க்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
|