|
|||||
பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலகத் தமிழ் நாள்’ ஆகக் கொண்டாட அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம். |
|||||
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளான ஏப்ரல் 29யை உலகத் தமிழ் நாளாக அறிவிக்கத் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்து உலக அளவில் செயல்பட்டு வரும் பல்வேறு தமிழ் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தத் தமிழ் அமைப்புகளின் இணையவழி கருத்தரங்கங்கள் கடந்த 14ம் தேதி நடந்தது.
இதில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்-அமெரிக்கா, கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்-பெங்களூர், இலெமுரியா அறக்கட்டளை-மும்பை, தமிழ் அறக்கட்டளை பெங்களூரு, உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம்-சென்னை, பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம்-பெங்களூரு ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஏப்ரல்-29-ஆம் நாளை 'உலகத் தமிழ் நாள்' ஆக அறிவிக்கவும், சென்னையில் பாரதிதாசன் ஆய்வு மணிமண்டபம் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. அதன்படி இலெமுரியா அறக்கட்டளை மும்பையின் நிறுவனத் தலைவரும், தமிழ் அறக்கட்டளை பெங்களூரின் தலைவருமான சு.குமணராசன் தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில் பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் முன்னிலை வகிக்க, தமிழ் அறக்கட்டளை பெங்களூரின் செயலாளர் அ.தனஞ்செயன் (எ) வெற்றிச்செல்வன் அனைவரையும் வரவேற்றார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், அமெரிக்காவின் ஒருங்கிணைப்பாளர் சு.துரைக்கண்ணன், இக்கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கிப் பேசினார். பாரதிதாசனின் பேரனும், பாரதிதாசன் அறக்கட்டளை-புதுச்சேரியின் நிறுவனத்தலைவருமான கோ.பாரதி, மலேசியாத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நல்லுரையாளர் மன்னர் மன்னர் மருதை, மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத்தலைவர் இரா.திருமாவளவன் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றுக் கருத்துரை வழங்கினார்கள்.
இதைத் தொடர்ந்து, கருத்தரங்கின் நோக்கங்களை விளக்கும் முத்தான மூன்று தீர்மானங்களை முன்மொழிந்து வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை-அமெரிக்காவின் தலைவர் முனைவர் பாலா.சுவாமிநாதன் கருத்துரை வழங்கினார். இந்தத் தீர்மானங்களை முன்மொழிந்து உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநரும், தமிழறிஞருமான பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் விளக்கவுரை ஆற்றினார். இறுதியில், பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம்-பெங்களூரின் இணை ஒருங்கிணைப்பாளர் புலவர் மா.கார்த்தியாயினி நன்றி கூறினார். இக்கருத்தரங்கில், தமிழ் அறிஞர்கள் முன்மொழிந்து, தமிழ் அமைப்புகள் வழிமொழிந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி - ஒன் இண்டியா |
|||||
by Kumar on 25 Apr 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|