முழு முதற்கடவுளான விநாயகரின் பிறந்தநாளே விநாயகர் சதுர்த்தியாக, ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியன்று கொண்டாடப்படுகின்றது.
இதனை முன்னிட்டு விநாயகர் கோயில்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு வீதி முனைகளிலும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. மூன்றாம் நாள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். எல்லா நாடுகளிலும் கொண்டாடப்படும் விழாவாகப் பிரசித்தி பெற்று வருகின்றது.
விநாயகருக்கென்றே அமைந்த தனி ஆலயம், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனித் தேரில் விநாயகர் பவனி வருவார்.
இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி தேர்ப்பவனி இன்று (செப்டம்பர் 12) நடைபெற உள்ளது. கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் ஒவ்வொரு நாளும் வெள்ளி வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலாவும் நடைபெற்று வருகிறது.
இன்று மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மூலவர் விநாயகருக்கு செய்யப்படும் சந்தனக்காப்பு அலங்கார தரிசனம் இரவு வரை நடைபெறுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவின் கடைசிநாளான நாளை தீர்த்தவாரி உற்சவமும், இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
|