|
||||||||
வினைதீர்க்கும் விநாயகனே! |
||||||||
பக்தி மார்க்கத்தில் முதலில் விநாயகரை வழிபட்ட பிறகுதான் மற்ற தெய்வங்களை வணங்குவதற்கு பல அடிப்படைக் காரணங்கள் உள்ளன. விநாயகருக்கு ஞானத்தின் தெய்வம்,தடைகளை அழிப்பவர், வினைகளைத் தீர்ப்பவர்,வெற்றியின் சொரூபம்,அஞ்சாநெஞ்சம் கொண்டவர்,சகலகலாவல்லவன்,அமைதியின் சொரூபம்,பொறுமையின் சிகரம்,விகாரங்களை அழிப்பவர்,பற்றற்ற அன்பானவர், அசைக்க முடியாதவர்,கருணையின் சொரூபம், மாயையை அழிப்பவர் என்றெல்லாம் பெரும்புகழ் உண்டு. இதன் அடிப்டையில் அவர் ஸ்ரீ கணேசன்,கஜமுகன்,லம்போதரன்,விக்னேஸ்வரன் என்றெல்லாம் புகழ்ந்து படப்படுகின்றார். விநாயகனே வினைதீர்பவனே ! என்ற பாடல் வரிப்படி,எக்காரியத்தையும் செய்வதற்கு முன்பு,ஞானமுதல்வனான அவருக்கு வழிபாடு செய்து, அவரின் ஆசீர்வாதங்களையும் ஞானத்தையும் பெறுவதன் மூலம், சகல ஐஸ்வரியங்களையும் வெற்றியையும் அடையலாம் என்ற நம்பிக்கை உண்டு. வெற்றிக்கு அடிப்படை முதலில் ஞானமேயாகும். அறிவுத்திறமை இருக்கும் போது, தன்னம்பிக்கையும் மன உறுதுயும் வளரும்.
அப்போது காரியங்களை ஆற்றும்போது பயம்,குழப்பம் எதுவும் இருக்காது. அமைதியும்,கருணையும் கொண்ட இதயம், ஆசீர்வாதங்களை வழங்குவதன் மூலம் ஆக்ககரமான வகையில் செயல்படும். ஸ்ரீ விநாயகரை பற்றி பல இதிகாசங்கள் உள்ளன. அவரின் பிறப்பினைப்பற்றி கூறுகையில்,பார்வதி ஒரு முறை, தான் ஸ்நானம் செய்யும்போது காவல் இருப்பதற்காக கணேசனை உருவாக்கியதாகவும்,அந்நேரத்தில் அங்கு வந்த சிவனை அவர்எதிர்த்ததனால் சிரசு துண்டிக்கபட்டார் என்றும்,பிறகு பார்வதியின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவரை உயிர்ப்பிக்க அருகில் இருந்த யானையின் தலையை பொருத்தியதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் இது அகந்தையை அழிக்கும்போதுதான், நமது புத்தி தெய்விக நிலையை அடையும் என்பதைப் பிரதிபலிக்கிறது.. அதனால் தான்,கணேசர் தனது தந்தத்தில் ஒன்றை உடைத்து,மகாபாரதக்கதையை எழுதியதாகவும் கூறப்படுகின்றது. தனக்குள் உள்ள திறமைகளை உலகுக்கும் மனிதகுல சேவைக்கும் தியாகம் செய்வதையே உயர்ந்த குறிக்கோளாக நாம் கொள்ள வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. ஸ்ரீ கணேசரின் திருவுருவத்தில் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.
கஜமுகன் என்று போற்றப்படுவதன் அர்த்தம், யானை மிகவும் புத்திக்கூர்மையுடையது என்பதனாலும் ஐங்கரன் என்று கூறும்போது,தும்பிக்கை எனும் "ஐந்தாவது கரம்" எவ்வுளவு துரிதமாகவும் திறமையாகவும் செயல்படுகிறது என்பதை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. இப்படிப்பட்ட திறமைகளை நம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவரின் திருவுருவத்தை இவ்வண்ணம் சித்தரித்துள்ளார். பெரிய தலை உயர்ந்த சிந்தனையையும்,சிறிய கண்கள் கூர்மையான பார்வையையும்,முறம் போன்ற பெரிய காது கவனமாகக் கேட்பதையும்,சிறிய வாய் குறைவாகப் பேசுவதையும்,பெரிய வயிற்றில் அனைத்து பிரச்சனைகளையும் தனக்குள் "ஜீரணித்து" விடிவதால் பிரச்சினைகளை வளரவிடாமல் தீர்த்துவிடுவதையும் அவரின் திருவுருவம் நமக்கு உணதுகின்றது!
|
||||||||
by Swathi on 21 Apr 2014 0 Comments | ||||||||
Tags: Vinai Theerkum Vinayagar Vinayagar விநாயகர் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|