புதுடெல்லி: டெல்லி முதலமைச்சராக வருகின்ற 28 ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்கிறார்.
டெல்லி சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் 70 தொகுதிகளில் 28 இடங்களை பிடித்த ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. நாளை முதல்வராக கெஜ்ரிவால் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்து. ஆனால், ஆளுநரிடம் இருந்து முறையான அழைப்பு வரவில்லை, அதனால் பதவி ஏற்புக்கு வாய்ப்பில்லை என்று கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று மதியம் 12.45 மணிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். அவரது அனுமதி கடிதத்தை மத்திய உள்துறை உடனடியாக டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.இதையடுத்து, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் வருகின்ற 28 ஆம் தேதி (சனிக்கிழமை) பகல் 12.30 மணியளவில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். அவரது அமைச்சரவையில் முதற்கட்டமாக 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என கூறப்படுகிறது.
|