|
|||||
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): |
|||||
கேள்வி: இட ஒதுக்கீடு ஏன்?
பதில்: பல்லாயிரம் ஆண்டுகளாக கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் ஒடுக்கப்பட்ட / வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகம் சமநிலையை அடையவும், சமமாக மதிக்கப்படவும் உருவாக்கப்பட்டதே இட ஒதுக்கீடு ஆகும்.
கேள்வி: இட ஒதுக்கீடு மூலம் தமிழகம் எவ்வாறு பயன்பெற்று உள்ளது?
பதில்: தமிழகத்தில் உள்ள 2 கோடி குடும்பங்களில், சுமார் 20 லட்சம் குடும்பங்கள் அரசுத்துறையில் வேலை செய்பவர்கள். பத்தில் ஒரு குடும்பம் இட ஒதுக்கீடு மூலம் பயன்பெற்று உள்ளது. அதுமட்டுமல்லாமல், பல லட்சம் மாணவர்கள் கல்லூரியில் இட ஒதுக்கீடு மூலம் பயன்பெற்று பல தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
கேள்வி: எத்தனை சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது?
பதில்: 50 சதவிகிதத்திற்குள் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. ஆனால், தமிழகம் மட்டும் சிறப்பு சட்டம் மூலம் 69 சதவிகிதம் பெற்றுள்ளது. அதில், SC – 15%, SCA – 3%, ST – 1%, MBC – 20%, BC – 26.5%, BCM – 3.5% என பல்வேறு பிரிவுகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 31 சதவிகிதத்தில் FC மட்டுமல்லாமல், அனைவரும் போட்டியிடும் பொது பட்டியல் (Open Category) என வைத்துள்ளனர்.
கேள்வி: ஒருவர் அவருக்கான சமூகம் சார்ந்த (BC, MBC, SC, etc) ஒதுக்கீட்டில் போட்டியிடாமல், பொது பட்டியலில் (Open Category) ஏன் போட்டியிட வேண்டும்?
பதில்: மறுபடியும் சொல்கிறோம். பொது பட்டியல் என்பது அனைவரும் போட்டியிடும் இடம். நல்ல மதிப்பெண் பெற்ற ஒருவர் பொது பட்டியலில் போட்டியிடும்போது, இவரது சமூகம் சார்ந்த ஒதுக்கீடு, அவர் சமூகத்தை சார்ந்த மற்றொரு மாணவருக்கு சென்று சேரும். அதனால் தான், முதலில் பொது பட்டியலில் கலந்தாய்வு நடக்கும்.
கேள்வி: இட ஒதுக்கீடு பெற்ற குடும்பமே மறுபடியும் மறுபடியும் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனரே?
பதில்: இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல. இது அவர்களுக்கான உரிமை. பொது பட்டியலில் பட்டியலில் அதிக அளவில் போட்டியிடும் பட்சத்தில், சமூகம் சார்ந்த ஒதுக்கீடு பெறுபவர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
கேள்வி: SC அல்லது ST இல் குறைவான மதிப்பெண் பெற்றவர் கல்லூரியில் சேர்கின்றனரே?
பதில்: குறைவான மதிப்பெண் என்று எண்ண வேண்டாம். அவரது சமூகத்தில் எடுத்த அதிகபட்ச மதிப்பெண் அவ்வளவு தான். அதனால் தான், அதை கட் ஆப் என நிர்ணயம் செய்துள்ளனர்.
கேள்வி: சமூக அடிப்படையில் அல்லாமல், பொருளாதார அடிப்படையில் கொண்டு வந்தால் பலரும் பலனடைவார்களே?
பதில்: இந்திய அரசியல் சாசனத்தின் படி, சமூக அடிப்படையில் பின் தங்கியவர்கள் மட்டுமே இட ஒதுக்கீடு பெற முடியும் என மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒரு வேளை பொருளாதார அடிப்படையில் என சட்டம் கொண்டு வந்தாலும் நடைமுறை படுத்துவதில் அதிக அளவில் சிக்கல்கள் உள்ளன. லஞ்சம் கொடுத்தால் விருப்பப்படி வருமான சான்று கிடைக்கும் காலத்தில் பொருளாதார முறை சாத்தியமில்லை. அதுமட்டுமல்லாமல், ஜாதிப்பற்று மிக்க நமது சமுதாயத்தில், எவர் ஒருவரும் தன்னுடைய ஜாதியை போலியாக மாற்ற விரும்ப மாட்டார்கள். அதனால், சமூக அடிப்படையில் தொடர்வதே நலம்.
கேள்வி: இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீடு தொடர வேண்டும்?
பதில்: எப்போது மக்கள் மனதில் இருந்து ஜாதி என்பது முற்றிலும் விலகி, அனைவரையும் சமமாக மதித்தல், ஆணவக் கொலைகள் இல்லாத சமுதாயம் எப்போது உருவாகிறதோ அதுவரை இந்த வகையான இட ஒதுக்கீடு தொடர வேண்டும்.
கேள்வி: சமூகம் சார்ந்த இட ஒதுக்கீடு அளித்து கொண்டு இருந்தால், ஜாதி எப்படி ஒழியும்?
பதில்: ஜாதி சான்றிதழை கிழித்து போட்டு விட்டால், ஜாதி அழிந்து விடும் என்பது அறியாமை மட்டுமே. 2000 ஆண்டுகளாக அழிக்க முடியாத ஜாதியை, சுதந்திரம் பெற்ற பின் உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ஒழித்து விட்டால் ஜாதி அழிந்து விடும் என்பது அறியாமை மட்டுமல்ல. அது ஒருவித மனநோய் எனவும் வைத்து கொள்ளலாம். ஜாதி பாகுபாடுகளை களைய அரசு நினைத்தால் மட்டும் போதாது. மக்களிடம் உளவியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு ஆசிரியர்கள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள், சினிமா என அனைவரும் உறுதுணையாக இருந்து தொடர்ந்து பாடுபட வேண்டும்.
கேள்வி: வெளிநாடுகளில் இட ஒதுக்கீடு இல்லாததால் தான், அவர்கள் முன்னேறி உள்ளனர். நமது நாட்டிலும் இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டும்.
பதில்: தவறான கூற்று. வெளிநாடுகளில் கறுப்பர்கள் வெள்ளையர்கள் என்று பாகுபாடு உள்ளதால், அங்கு நிற அடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ளது. ஒரு சமூகம் மட்டுமே வளர்வது வீக்கம். அனைவரும் முன்னேற வேண்டும் என்றால், எதனால் மக்கள் பிரிந்து உள்ளனரோ, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பது தான் சரியான வாதமாக இருக்கும். வெளிநாடு முன்னேற முக்கிய காரணம். லஞ்சம் ஊழல் அற்ற அரசாங்கம், அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் நல்ல குடிமக்கள்.
கேள்வி: இட ஒதுக்கீடு பலரை சென்றடைய என்ன செய்யலாம்?
பதில்: அரசுத்துறையின் பயன் பெறுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆகவே, இட ஒதுக்கீட்டை தனியார்துறைகளிலும் அமல்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஜாதிவாரி கணக்கெடுப்பு செய்து, அனைத்து ஜாதிகளின் சதவிகித அடிப்படையில் இட ஒதுக்கீடு முழுவதையும் பிரித்து கொடுத்தால், இட ஒதுக்கீட்டின் பலன் பலரை சென்று சேரும்.
கேள்வி: இட ஒதுக்கீட்டை நீர்த்து போக செய்யும் விஷயங்கள் என்னென்ன?
பதில்: கிரீமிலேயர் அடிப்படையில் மத்திய அரசு பணிகள் பூர்த்தி செய்யபடுகின்றன. சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் நுழைவு தேர்வு என்பதும் சமூக நீதியை நீர்த்து போக செய்யும் வேலைகளே. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கிடையாது என சமீபத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் இதற்கு உதாரணம். இன்னும் பல வருங்காலத்தில் இதுபோன்று வந்து கொண்டே இருக்கும். அதில் இருந்து காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
கேள்வி: நான் ஜாதியற்றவன் என்ற நிலைபாட்டை எடுக்க முடியுமா?
பதில்: தமிழக கல்வித்துறை 1970 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின் படி, பள்ளி கல்லூரி சான்றதழில் ஜாதி மதம் குறிப்பிட வேண்டியதில்லை. இவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது.
கேள்வி: வெவ்வேறு ஜாதி சார்ந்தவர் திருமணம் செய்யும்போது பிறக்கும் குழந்தைக்கு என்ன ஜாதி என குறிப்பிட வேண்டும்?
பதில்: அரசின் உத்தரவுப்படி, தந்தை அல்லது தாயின் ஜாதியை குறிப்பிட்டு சான்றிதழ் பெற்று கொள்ளலாம்.
மேலே குறிப்பிட பட்டுள்ள கேள்விகளும் பதில்களும் நண்பர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. இதனை கடந்து வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் கேட்கலாம்.
நன்றி,
இளையதலைமுறை
WhatsApp: 9962265231
|
|||||
by Swathi on 04 Dec 2018 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|