இன்று சாலை விபத்தில் உயிரிழந்த மத்திய அமைச்சர் திரு. கோபிநாத் முண்டே அவர்களின் குடும்பத்திற்கும், கட்சியினருக்கும் லோக் சத்தா கட்சி தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. இந்த சம்பவம், நமக்கு 2011-இல் சட்டமன்ற உறுப்பினராக பதிவி ஏற்க சென்னை செல்லும் வழியில் அமைச்சர் மரியம் பிச்சை அவர்கள் விபத்தில் மரணமடைந்தததையும், 2012-ஆம் ஆண்டு சாலை விபத்தில் பலியான சட்டமன்ற உறுப்பினர்திரு. முத்துக்குமரன் அவர்களையும் நினைவுபடுத்துகிறது.
உலக அளவில் இந்தியாவில் தான் விபத்தினால் ஏற்படும் மரணங்கள் அதிகம் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஏ.டி.எஸ்.ஐ அறிக்கையின் படி 2003 முதல் 2012 வரை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்துள்ளது. 2002-ஐ காட்டிலும் 2012-ஆம் ஆண்டு விபத்துகள் 51.8% அதிகரித்து 2012-இல் மட்டுமே 394982 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
பெரும்பாலான நேரங்களில் விபத்துக்கள் அரசாங்கத்தின் பிரச்சனைகளாக பார்க்கப்படுவதில்லை. ஊடகங்களும் பொதுமக்களும் விபத்துக்களை அரசாங்க பிரச்சனையாக அணுக வேண்டும். நாம் தீவிரவாதத்தை காட்டிலும் விபத்துக்களில் அதிக உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் வருடத்திற்கு சாலை விபத்துகளில் மட்டுமே ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கு அதிகமாக பொருள் இழப்பு ஏற்படுவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்தியாவை போன்ற ஒரு வளரும் நாட்டுக்கு இது மிகப்பெரிய இழப்பாகும்.
ஓர் அமைச்சர் மற்றும் ஓர் சட்டமன்ற உறுப்பினர்ஆகியோர் விபத்துக்களில் இறந்த பின்னரும் தமிழக அரசு இந்த பிரச்சனையை பொருட்படுத்தவில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகாவது மத்திய அரசும் மாநில அரசும் விபத்து பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்.
|