மகளிர் மன்றம்:
புதிய மக்களவையில் இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். முதல் நாடாளுமன்றத் தேர்தலில் (1952) 5 சதவிகித (22 பேர்) பெண்களும், 1977 தேர்தலில் 4 சதவிகித (19 பேர்) பெண்களும், 2009 தேர்தலில் 10.7 (59 பேர் ) சதவிகித பெண்களும் இடம் பெற்றனர். தற்போது 11.3 சதவிகிதம் (61 பேர்) இடம் பெற்றுள்ளனர்.
குபேரர்கள் கிளப்:
இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 எம்.பி.க்களில் 449 பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து மதிப்பை உடையவர்கள். 2009 தேர்தலில் 58 சதவிகிதமாகவும், 2004 தேர்தலில் 30 சதவிகிதமாகவும் இருந்த கோடீஸ்வரர்களின் சதவிகிதம் இப்போது 82 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒஎஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்களில் பலர் 50 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளனர். 16-ஆவது மக்களவையில் மிகப் பெரிய கோடீஸ்வரர் எம்.பி.யாக விளங்குபவர், தெலுங்கு தேசக் கட்சியின் ஜெயதேவ் கல்லா. குண்டூர் தொகுதி எம்.பி.யான இவருடைய சொத்து மதிப்பு 683 கோடி ரூபாய்.
எம்.பி.க்கள் ஜாக்கிரதை:
மொத்த எம்.பி.க்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (34 சதவிகிதம்) கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள். பாஜகவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கிரிமினல் வழக்குகளை சந்திப்பவர்கள். 5-இல் ஒரு பகுதியினர் மிக மோசமான கிரிமினல் வழக்குகளை சந்திப்பவர்கள். கிரிமினல் வழக்குகளை சந்திப்பவர்களின் எண்ணிக்கை 2004 தேர்தலில் 30 சதவிகிதமாகவும், 2009 தேர்தலில் 24 சதவிகிதமாகவும் இருந்தது.
படிக்காத மேதைகள் பலர்:
உயர்நிலைப்பள்ளி தேர்வைக் கூட முடிக்காதவர்கள் 13 சதவிகிதம் பேர். 75 சதவிகிதம் பேர் பட்டதாரிகள். ஆய்வுப் பட்டம் பெற்றவர்கள் 6 சதவிகிதம் பேர்.
இஸ்லாமியர்கள் குறைவு:
இந்த மக்களவையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வெறும் 22 பேர் மட்டுமே தற்போது மக்களவைக்கு செல்கின்றனர். 1952 தேர்தலில் 25 பேரும், 1980 தேர்தலில் 49 பேரும், 2004 தேர்தலில் 35 பேரும் மக்களவையில் இடம் பெற்றனர்.
விவசாயிகள் அதிகம்:
மொத்த உறுப்பினர்களில் 27 சதவிகிதம் பேர், விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். 20 சதவிகிதம் பேர் தொழிலதிபர்கள்.
நன்றி - புதிய தலைமுறை.