தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று பகுதி உள்ளன. இதில் பொருளதிகாரத்தில் உள்ள மரபியல் பகுதியில் விளக்கப்பட்டுள்ள விலங்குகளைப்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் முதுகெலும்பற்றவை, முதுகெலும்புள்ளவை என்று இரண்டு வகைப்படும். மரபியலில் விலங்குகளின் இளமை பெயர்கள், ஆண்பாற் பெயர்கள், பெண்பாற் பெயர்களை மிக அழகாக விளக்கியுள்ளார்.
விலங்குகளின் இளமைப்பெயர்கள்
பலவிதமான விலங்குகளின் இளமைப்பெயர்கள் பலவாகும். அது பார்ப்பு, பிள்ளை, குட்டி, பறழ், குருளை, மறி, கன்று, குழவி என்று பல இளமைப்பெயர்களை பல விலங்குகளுக்குரியது என்று கூறியுள்ளார்.
பார்ப்பு - பிள்ளை:
பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை (548) தவழ்பவை தாமும் அவற்றோரன்ன (549)
இதில் பார்ப்பும், பிள்ளை என்ற பெயர்கள் பறவைகள், ஊர்வனவற்றின் இளமைப்பெயராகும் என்கிறார்.
குட்டி:
மூங்கா வெருகெலி மூவரி யணிலொ டாங்கவை நான்குங் குட்டிக்குரிய (550)
கீரிப்பிள்ளை, பெருகு, எலி, அணில் என்பவற்றின் இளமைக்கு குட்டியென்று கூறற்கு உரியனவாம்.
கோடுவாழ் குரங்குக் குட்டி கூறுப (557)
குரங்குகள் மரங்களில் கிளைகளுக்கிடையே தாவிச் செல்லும் தன்மையுடையது. அதைத் தான் கிளைகளில் வாழும் குரங்கின் இளமையையும் குட்டி என்று கூறுவர்.
குருளை:
நாயே பன்றி புலி முயல் நான்கும் ஆயுங் காலைக் குருளை யென்ப (552)
நாய், பன்றி, புலி, முயல் ஆகிய நான்கும் குருளை யென்று கூறப்பெறும். நரியையும் குருளை என்று கூறப்பெறும் என்கிறார்.
மறி:
ஆடுங் குதிரையும் நவ்வியும் உழையும் ஓடும் புல்வாய் உளப்பட மறியே (556)
ஆடு, குதிரை, புள்ளிமான் ஆகியவற்றின் இளமையை மறி யென்றும் கூறப்பெறும்.
கன்று:
யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானோ டைந்தும் கன்றெனற் குரிய (559)
யானை, குதிரை, கழுதை, மான் ஆகியவற்றின் இளமைகளுக்கு கன்று என்று பெயரையும் பெறுதற்கு உரியன. எருமையும் கன்று என்று வழங்குபவர்.
குழவி:
யானை, எருமை, கடமாவும், குரங்கு ஆகியவற்றின் இளமையை குழவி என்கிறார் (563, 564, 565)
மேற்கூறிய பல விலங்குகளின் பல இளமை பெயர்கள் கூறப்பட்டுள்ளது. அந்தகாலத்திலே விலங்குகள் இளமையாக இருக்கும் போது அதற்கென்று தனி பெயர் இருப்பது தெரிகிறது.
ஆண்பாற் பெயர்கள்:
விலங்குகளிலும் ஆண்பால், பெண்பால் என்று வேறுபாடு இருக்கிறது. இதை தொல்காப்பியர் காலத்திலே இந்த பெயர் வேறுபாட்டை விளக்கியுள்ளார். ஆண் விலங்குகளுக்கு களிறு, ஒருத்தல், ஏறு, போத்து, இரலை, கலை, சேவல் என்று பல பெயர்கள் உண்டு என்று உதாரணத்துடன் விளக்கியுள்ளார்.
களிறு:
வேழக் குரித்தே விதந்துகளி றேன்றல் (579) கேழற் கண்ணும் கழவரையின்றே (580)
யானைக்கு, பன்றிக்கு ஆண்பாலைக் களிறு என்று கூறப்பட்டது.
ஒருத்தல்:
புல்வாய் புலிபுழை மரையே கவரி சொல்லிய கராமோ டொருத்தல் ஒன்றும் (581)
புல்வாய், புலி, மரை, கவரிமான், கரடி (கராம்) ஆகியவற்றின் ஆணிற்கு ஒருத்தல் என்ற பெயர் பெறும்.
வார்கோட்டியானையும் பன்றியும் அன்ன (582)
ஆண் யானைக்கு தான் நீண்ட கொம்பு உள்ளதை அறிந்து, நீண்ட கொம்புடைய யானையும், பன்றியும் ஒருத்தல் என்கிறார்.
எருமையின் ஆணையும் ஒருத்தல் என்றார் (583)
எருமையின் ஆணினையும் ஒருத்தல் என்று கூறினார்.
ஏறு:
பன்றி புல்வாய் உழையே கவரி என்றிவை நான்கும் ஏறென்ற்குரிய (584)
பன்றியும், புல்வாய், உழை, கவரிக்கு ஏறு என்று ஆணுக்கு கூறுவர்.
எருமையும், மரையும் ஆணுக்கு ஏறு என்பர் (585) கடல் வாழ் சுறாவும் ஏறெனப்படுமே (586)
சுறாவானது ஒரு மீனினம். இது கடலில் வாழும் என்பதை அறிந்து கடல்வாழ் சுறாவின் ஆணிற்கு ஏறு என்கிறார்.
போத்து:
எருமை, புலி, மரை, மான் ஆகியவற்றின் (587) ஆணுக்கு போத்து என்றும், நீர் வாழ் சாதியும் அதுபெறற் குரிய (588) நீர்வாழ் உயிர்களுள் முதலையின் ஆணும் போத்து என்றும் கூறுவர்.
இரலை, கலை:
இரலையும், கலையும் புல்வாய்க்குரிய (590)
மானின் ஆணிற்கு இரலை, கலை என்றும் பெயர்.
மோத்தை: ஆட்டின் ஆணிற்கு மோத்தை என்றும் (592)
சேவல்: சேவற் பெயர்க் கொடை சிறகொடு சிவணும் மாயிருந் தூவி மயிலலங்கடையே (593)
ஆண் மயிலுக்கு அழகிய தூவி இருப்பதை நன்றாக உணர்ந்து, அழகிய பெரிய தூவிகளையுடைய மயில் அல்லாத மற்ற பறவைகளின் ஆணுக்கு சேவல் என்று மிக அழகாக விளக்கியுள்ளார்.
பெண்பாற் பெயர்கள்:
விலங்குகளின் பெண்பாலிற்கும் சில குறிப்பிட்ட பெயரான பிடி, பெட்டை, பேடை, பெடை, அளகு, பிணை, பிணவு, நாகு, மூடு, கடமை, பாட்டி, மந்தி போன்றவைகளை விலங்குகளின் உதாரணத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
1. பிடி:
பிடியென் பெண்பெயர் யானை மேற்றே (596)
பிடி என்னும் பெண்பெயர் பெண் யானையை குறிக்கும்.
2. பெட்டை:
ஒட்டகங்குதிரை, கழுதை மரையிவை பெட்டை யென்னும் பெயர்க்கொடைக்குரிய (597)
ஒட்டகம், குதிரை, கழுதை, மரை ஆகியவற்றின் பெண்ணுக்கு பெட்டை என்றும் பெயர் பெறும்.
3. பேடை, பெட்டை:
இவை பெரும்பாலும் பறவைக்கே வரும்.
4. அளகு: கோழி கூகை யாயிரண் டல்லவை சூழுங் காலை அளகெனல் அமையா (600)
கோழி, கூகை இரண்டை தவிர மற்றவை அளகு என்று கூறப்பெறாது, அளகு என்றும் பெயர் பெண் மயிலுக்கும் உண்டு.
5. பிணை: புல்வாய், கவரிமான் ஆகியவற்றின் பெண்ணுக்கு பிணை என்ற பெயர் வழங்கும் (602)
6. பிணவு: பன்றி புல்வாய் நாயென மூன்றும் ஒன்றிய என்ப பிணவென் பெயர்க்கொடை (603)
பன்றி, புல்வாய், நாய் ஆகியவற்றின் பெண்ணிற்கு பிணவு என்று பெயர்.
7. ஆ: பெற்றமும் எருமையும் மரையும் ஆவே (605)
எருமையும், மரையின் பெண்ணிற்கு ஆ ஆகும்.
8. நாகு: எருமையும் மரையும் பெற்றமும் நாகே (607) எருமை, மரையின் பெண்ணிற்கு நாகு என்று பெயர். நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே (608) நீரில் வாழும் சங்கு இனமும் (நந்தும்) நத்தையின் பெண்ணிற்கும் நாகு என்று பெயர்.
9. மூடு, கடமை:
ஆட்டின் பெண்பாலுக்கு மூடு, கடமை என்று பெயர்.
10. மந்தி:
குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி
குரங்கும், முசு, ஊகம் இவற்றின் பெண் பெயர் மந்தியாகும்.
தொல்காப்பியத்தில் உள்ள மரபியலில் மிக அழகாக விலங்குகள் பற்றி ஆராய்ந்து, விளக்கியுள்ளார். உயிர்களை அதனுடைய தன்மையை வைத்து அதை ஆறு வகையாக பிரித்துள்ளார். மற்றும் விலங்குகளுக்கும் இளமையில் அதற்தெற்று தனி பெயர் உண்டு என்றும், ஆண், பெண் என்ற இருபாலுக்கு வெவ்வேறு பெயர் உண்டு என்பதை மிக அழகாக விவரித்துள்ளார். இந்தப் பெயர் விலங்குகளுக்கு விலங்கு மாறுபட்டு இருப்பதை மிக அருமையாக விவரித்துள்ளார். தொல்காப்பியமானது ஒரு சிறப்பான காப்பியமாகும்.
|