|
|||||
இளையராசாவிடம் எனக்குள்ள கிடுக்கங்களும் வேண்டுகோள்களும்-நாக.இளங்கோவன் |
|||||
அகவை 80 ஆனது. திரை இசையுலகின் அரசராக, இசைநுட்பத்தில் ஞானியாக, அசைக்க முடியாத இசை ஆளுமையாக விளங்குகிறார் இளையராசா.
இசை, மொழி, இளையராசாவின் இசை, பிற இசையமைப்பாளரின் இசை, திரைப்பாடற்கவிஞரின் பாட்டு என்ற இவற்றை நன்கு உணர்ந்தவர்களுக்கு, வைரமுத்தின் பேச்சு ஒரு பொருட்டேயல்ல.
சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம், நாலாயிரம் படித்தவர்களுக்குத் திரை இசை, மொழி என்ற பேச்சுகள் வெறும் வேடிக்கை மட்டுமே. அவை நிற்க:
அகவை பழுநிய இளையராசாவிற்கு எனது கேள்விகள்:
1) இராசா, திரை இசையில் உம்மை விஞ்ச ஆள் இல்லை. உமது இசை காலத்தால் நிலைக்கும்.
இன்னும் எத்தனை நாளைக்கு திரைப்படப் பாட்டையும் பின்னணி இசையையும் மட்டுமே கட்டிக் கொண்டு, பல அரைவேக்காட்டு பட நெறியாளரொடு வாழ்க்கையை ஓட்டுவீர்கள் ?
2) தமிழ்த்திரையிசைத் துறையில் இனி சாதிக்க உங்களுக்கு ஏதுமில்லை. 80 வயதாகியும் அதை ஏன் இன்னும் கட்டிக் கொண்டழுகிறீர்கள்? குப்பைப் படங்களையும் பார்த்து இசையமைக்க வேண்டியது உங்களின் தொழில் நெறி ஆகலாம். ஆனால் வாழ்க்கை நெறிக்கு இந்தக் குப்பைப் படங்கள் தேவையா?
3) இசைத்தமிழாய் பண் முதிர்ந்த தமிழ் இலக்கியங்களை, பத்தி இலக்கியங்களை, சந்த இலக்கியங்களை நீங்கள் உணர்ந்தவர்தானே?
4) இந்த அகவையில் திரை இசையில் முட்டி மோதிக்கொண்டு கிடப்பதைவிட, ஏன் நீங்கள் இசைத்தமிழ் இலக்கியங்களைப் பாடியும் இசையமைத்தும் வைக்கக் கூடாது?
5) 2004 இல் செகத்து காசுபருடன் இணைந்து திருவாசகத்தின் வெகுசில பதிகங்களுக்கு இசையமைத்துப் பாடவும் செய்தீர்கள்.
அதில் ஏகப்பட்டப் பிழைகள். பெரியவர்கள் பலர் உங்களை முகத்துதிக்காகப் பாராட்டினர். விவரம் புரியாத அப்பாவிகள் பலர் பாராட்டினர். ஆனாலும் பிழைகள் பிழைகள்தானே. தங்களின் திருவாசக இசையைப் பற்றி 2004 இல் அடியேன் எழுதிய வண்ணனை இதோ: (இதைத் தங்களுக்கும் அனுப்பியிருந்தேன்.)
அருமையான குரலையும் இசைவளத்தையும் உடைய நீங்கள் ஏன் முழுத் திருவாசகத்தையும் மக்களிசையில், தமிழிசையில் கொண்டு வரக்கூடாது?
6) தளபதி படத்தில், "குனித்த புருவமும்... " என்ற அப்பரடிகளின் பாட்டையும், தாரை தப்பட்டையில் "பாருருவாய பிறப்பற வேண்டும்...." என்ற திருவாசகப் பாட்டையும் இசைத்த உங்களின் இசைக்கு ஈடு இணை உண்டா?
குணா படத்தில், "நாயகி நான்முகி...", "இணை கொண்டு இளகி..." என்ற அபிராமி அந்தாதிப் பாடல்களுக்கு இணை உண்டா?
ஏன் நீங்கள் மீதியிருக்கும் எண்ணற்ற திருமுறை, நாலாயிரம், அபியந்தாதி, திருப்புகழ் போன்ற பத்தி இலக்கியங்களைப் பாடக்கூடாது?
7) நாவிலும், விரல்களிலும் கலைமகள் வீற்றிருக்கும் நீங்கள், அப்பரின் போற்றித் திருத்தாண்டகம், மாணிக்க வாசகரின் போற்றித் திருவகவல், திருச்சதகம் ஆகிய மூன்றைப் பாடினாலே அவை மிகச் சிறந்த தமிழ் வழிபாட்டுக்கு அடிகோலும்.
ஏன் நீங்கள் இதைச் செய்யக் கூடாது?
நீங்கள் ஆயிரம் இசைத்தும் பாடியும் இருந்தாலும், டி.எம்.சௌந்திரராசன் பாடிய "முத்தைத் தரு பத்தி.." என்ற திருப்புகழ்ப் பாட்டு வரலாற்றில் நிலைத்து விட்டது.
உங்களின் திருப்புகழ்கள் எங்கே?
"மணியே, மணியின் ஒளியே.." என்ற டி.ம்.சௌ பாடிய பாடலை அறியாதோர் இல்லை. "நாயகி, நான்முகி...." என்று நீங்கள் குணா படத்திற்கு இசைத்திருந்தாலும், அபிராமியந்தாதியின் "மணியே மணியின் ஒளியே...." என்ற டி.எம்.சௌ இன் குரலுக்கும் அவ்விசைக்கும் இருக்கும் பரப்பு உங்களின் இசைப்புக்கு இல்லை.
ஏன் நீங்கள் வெறும் நூறே பாடல்கள் கொண்ட அபியந்தாதியைப் பாடி இசைக்கக் கூடாது?
9) ஓதுவார்களும், சிவாச்சாரியர்களும் ஓரங்கட்டப்பட்ட நிலையில், மக்களிசையில், உயர்ந்த தேவாரங்களையும், செறிந்த சத்தி பாடல்களையும், நாகளிக்கும் நாலாயிரத்தையும், ஊர் புகழும் திருப்புகழையும் உம்மைவிட யார் முழுவதும் பாடி, இசைத்துக் கொண்டு வரமுடியும்?
10) அண்மைக்கால வள்ளலாரின் பாடல்களை, பாம்பன் சாமிகளின் பாடல்களை மக்களிசையில் மிக அருமையாகப் பாடி இசைத்து வெளியிட்டிருக்கிறார்கள். இடைக்கால பத்தி இலக்கியங்களை உங்களை விட யார் சிறப்பாக இசைக்க முடியும்?
11) அன்னக்கிளியும், ஆயிரந்தாமரை மொட்டுகளும், அந்திமழைப் பொழிவும் சிறந்த பாடல்களும், இசையுமாகும். ஆனால் அவை இன்னொரு கவிஞர், இன்னொரு இசை மேதையின் பாடலில், இசையில், தலைமுறை மாற்றங்களில் மறைந்து போகக் கூடும்.
ஆனால், இசையே தமிழாக, தமிழே இசையாக 1500 ஆண்டுக்கு மேலாக நிலைத்துப் போன தமிழ்ப் பத்தி இலக்கியங்களை நீங்கள் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்பது எமது அன்பு வேண்டுகோள்.
தமிழ்ப் பத்தி இலக்கியங்கள், "மிகப்பெரும் தமிழியக்கம்". அந்தத் தமிழை இசையுங்கள் இராசா அவர்களே.
கூடவே சங்கப் பாடல்களையும் காப்பியங்களையும் பாடி வையுங்கள்.
80 பழுநி, கலைமகளோடு திருமகளும் சேர்ந்திருக்கும் நீங்களும், கங்கை அமரன் உள்ளிட்ட உங்களின் குடும்பத்தினரும் தமிழ்ப் பத்தி இலக்கியங்களை தமிழ்நாட்டில் மணக்கச் செய்ய வேண்டும்.
திரையிசையை விட்டு வெளியேறுங்கள். அது ஆன்மாவை வழுக்கி விழச்செய்யும் பாசம்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
30/04/2024
|
|||||
by Swathi on 01 May 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|