கன்னியாகுமரி தொகுதி வாக்காளர் தோழர்களே!
உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக என்னை நீங்கள் தேர்வு செய்தால், நீண்ட நெடுங்காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் நமது மாவட்டத்தில் சமச்சீரான வளர்ச்சிக்கு கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
[1] பொதுமக்கள் நலம்: • சாதி, மத நல்லிணக்கத்தைப் போற்றுவேன். • ஆபத்தான கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுவேன். மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மரபுசாரா இயற்கை மின்பூங்காக்கள் அமைத்து மக்களின் மின்சாரப் பிரச்சினைக்குத் தீர்வு தேடுவேன். • தனியார் மற்றும் அரசு தாது மணற்கொள்ளையைத் தடுப்பேன். • கல் குவாரிகளை மூடுவதோடு, நில வணிக மாஃபியாக்களை எதிர்ப்பேன். • மலைகளை, மரங்களை அழித்து பெரியக் கட்டிடங்களை நிறுவி அமைக்கப்படும் தனியார் நிறுவனங்களைத் தடுத்து இயற்கை வளம் காப்பேன். • லஞ்ச ஊழலை ஒழிக்க என்னாலியன்ற அனைத்தும் செய்வேன். • பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர், குமரி மாவட்டத்து மலையாள மக்கள் போன்றோருக்கு சமூக நீதி கிடைத்திட உழைப்பேன். நாஞ்சில்நாடு வெள்ளாளர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உதவுவேன். • அக்கம்பக்கம் குழுக்கள் அமைத்து மக்களுக்கு தன்னாட்சி கிடைக்கப் பாடுபடுவேன். • ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக மக்களின் முக்கியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன்.
[2] போக்குவரத்து: • மாவட்டமெங்கும் சாலைகளைச் சீராக்கி, பாதுகாப்பான நடைபாதைகள் அமைத்து, பாதசாரிகளின், வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வேன். • பொதுப் பேருந்துகளின் தரத்தை, பாதுகாப்பை மேம்படுத்துவேன். • மோசமான நிலையில் இருக்கும் சுசீந்திரம் பாலத்திற்கு பதிலாக மாற்றுப் பாலம் அமைப்பேன். • கன்னியாகுமரி-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புக்களை அகற்றி சாலை விரிவாக்கத்துக்கு உதவுவேன். • கன்னியாகுமரி பகுதியில் சிறு விமான தளம் அமைப்பேன். • குமரி ரயில்வேயை மதுரை டிவிஷன் கீழ் கொண்டுவந்து, இருவழி ரயில் பாதை அமைப்பேன். • கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வரை கடல் வழியாக நீர்வழிப் போக்குவரத்துக்கு ஆவன செய்வேன். • காலையிலும், மாலையிலும் பள்ளி மாணவருக்கென சிறப்புப் பேருந்துகள் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இயக்க ஆவன செய்வேன்.
[3] பொதுச் சுகாதாரம், உடல் நலம்: • மாவட்டமெங்கும் இலவசக் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துவேன். • ஒலி மாசை முற்றிலுமாகத் தடை செய்வேன். • நெகிழிப் பைகள், நெகிழிப் பொருட்களை ஒழிப்பேன். • குப்பைகள் சேகரித்தல், திடக்கழிவு மேலாண்மைக்கான ஏற்பாடுகள் செய்வேன். • தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, ரசாயனங்களைப் பிரித்தெடுத்து, வினியோக அமைப்புகளை திருத்தியமைத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகிப்பேன். ஏழைகளுக்கு பஞ்சாயத்து அலுவலகங்களில் குடிநீர் வழங்கிட ஆவன செய்வேன். • காற்றை மாசுபடுத்தும் ஆலைகள், தொழிற்சாலைகள் தொடங்குவதைத் தடை செய்வேன். • ஆரம்ப சுகாதார நிலையங்களை, அரசு மருத்துவமனைகளை தரமுயர்த்தி, உயர்தர மருத்துவ சிகிச்சைகள் ஏழை எளியோருக்கும் கிடைக்க ஆவன செய்வேன். • மாவட்டத்தின் மையப் பகுதியில் உயர்தர புற்றுநோய் மருத்துவமனை அமைப்பேன்.
[4] கல்வி, வேலை வாய்ப்பு: • மார்ஷல் நேசமணி பெயரில் குழித்துறைப் பகுதியில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பேன். • திருமதி. லூர்தம்மாள் சைமன் பெயரில் மணக்குடியில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பேன். • திரு. எஸ். துரைசாமி பெயரில் கொட்டில்பாடு பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பேன். • தோழர் ஜீவா பெயரில் பூதப்பாண்டி பகுதியில் விவசாயம், தென்னை, வாழை, ரப்பர், தோட்டக்கலை, வனவளம் போன்ற ஆராய்ச்சிப் பிரிவுகளைக் கொண்ட ஒரு விவசாயக் கல்லூரி தொடங்குவேன். • திரு. தாணுலிங்கனார் பெயரில் மருந்துவாழ் மலைப் பகுதியில் மருத்துவ மூலிகைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பேன். அழிந்து வரும் மூலிகைகளைக் காத்து, பாரம்பரியமிக்க நமது சித்த வைத்தியத்திற்கு புத்துயிரூட்டி, இயற்கை வைத்தியத்தைப் பாதுகாப்பேன். • தியாகி சிதம்பரநாதன் பெயரில் நீண்டகரைப் பகுதியில் சட்டக் கல்லூரி அமைக்க ஆவன செய்வேன். • கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் & திருமதி மதுரம் பெயரில் இசைக் கல்லூரி ஒன்றை நிறுவவும் முற்சிப்பேன். • சதாவதானி செய்குத்தம்பி பாவலர் பெயரில் மாவட்டத்தின் அனைத்து மக்களுக்கும் பயன்படும் உயர்தர நவீன ஆய்வு நூலகம் ஒன்றை அழகியமண்டபம் பகுதியில் அமைப்பேன். • சிறுபான்மையினர் பயன்பெறும் மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் IAS, IPS பயிற்சி மையம் அமைப்பேன். • ஐ.டி. தொழிற்நுட்பப் பூங்கா தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்வேன். • காற்றாலை மின்உற்பத்தி அதிகமாக நடக்கும் ஆரல்வாய்மொழி பகுதியில், மாற்று வழி மின்சாரம் தொடர்பான தொழிற்பேட்டை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பேன்.
[5] மீனவர் நலம்: • கடல் மீதும் கடற்கரை மீதுமுள்ள மீனவ மக்களின் பாரம்பரிய உரிமைகளைக் காப்பேன். • ஆபத்துக்குள்ளாகும் மீனவருக்கு உடனடியாக உதவ கன்னியாகுமரி மற்றும் குளச்சலில் ஹெலிகாப்டர் தளமும், விசைப்படகுத் தளமும் அமைப்பேன். • கடலுணவுத் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்வேன். • ஆங்காங்கே மீன் பதப்படுத்தும், பாதுகாக்கும் நிலையங்கள் அமைப்பேன். • குளச்சல் மீன்பிடித் துறைமுகம் வேகமாக அமைக்க உதவுவேன். • கல்வி, வேலை வாய்ப்பில் மீனவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவேன். • மீன் வளத்துறை வேலைகளில் மீனவர்களுக்கே முன்னுரிமை என்று வலியுறுத்துவேன். • உறுதியற்ற வீடுகளை அகற்றிவிட்டு உறுதியான வீடுகளும், குடியிருப்புகளும் கட்டித் தருவேன். • குமரி மீனவர்களிடம் கேரள அரசு ஆண்டுதோறும் வசூலிக்கும் ரூ. 60,000 சேமநிதியை நீக்கக் கோருவேன்.
[6] விவசாயிகள் நலம்: • விவசாயத்தைக் காத்து உணவு உற்பத்தியைப் பெருக்குவேன். • விவசாயிகளின் விளை பொருட்களை நகரின் மையப்பகுதிகளில் சந்தைப்படுத்த ஏற்பாடு செய்வேன். • விளை நிலங்களை வீட்டு நிலங்களாக, தொழிற்பேட்டைகளாக மாற்றுவதைத் தடுப்பேன். • தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பட்டா விளைநிலங்களையும், குடியிருப்புப் பகுதிகளையும் தனியார் காடுகள் என்று வகைப்படுத்துவதை ரத்து செய்வேன். • 2006 வன உரிமைச் சட்டம் காணி மக்கள் போன்ற ஆதிவாசிகளுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கும் நில உரிமைகளை மீட்டுத் தருவேன். • கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயப் பகுதிகளையும் பட்டா நிலங்களையும் பாதுகாப்பேன். விவசாய நிலங்கள் விலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்படுவதைத் தடுப்பேன். • ஆகாயத் தாமரைகளை அகற்றி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துவேன். • மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆழப்படுத்துவேன். • முடங்கிக் கிடக்கும் நெய்யாறு இடதுகரை கால்வாய்க்குப் பதிலாக சிற்றாறு-II நீர்த்தேக்கத்திலிருந்து புதிய கால்வாய் அமைப்பேன். • திருப்பதிசாரம் விவசாய விரிவாக்க மையத்தை பாரம்பரிய விதைகளைக் காக்கும், இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையமாக மாற்றுவேன். மரபணு மாற்ற விதைகளைக் கடுமையாக எதிர்ப்பேன். • தேன் உற்பத்தி செய்யும் தொழிலை உயர்த்தும் விதமாக, மார்த்தாண்டத்தில் தேன் ஆராய்ச்சி நிலையம் அமைப்பேன். • ரப்பர் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை களியல் பகுதியில் அமைத்து, ரப்பருக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து, ரப்பர் விவசாயிகளைக் காப்பேன். • தோவாளையில் மலர் ஏற்றுமதி மையம் அமைப்பேன்.
[7] வர்த்தகர், தொழிலாளர், பெண்கள் நலம்: • சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைத் தடுப்பேன். • கட்டிடத் தொழிலாளர்கள் நலம் பேணும் வாரியம் மற்றும் அவர்களுக்கானப் பள்ளிகள் அமைக்க ஆவன செய்வேன். • வெளிநாடுகளில் வேலை செய்யும் குமரி மாவட்டத்தவர் வசதிக்காக பாஸ்போட் மையம், வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் அரசு நிறுவனத்தின் பிரிவு, அவர்கள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் நாகர்கோவிலில் அமைப்பேன். • அமைப்புசாரா தொழிலாளர் நலம் பேண வழிவகை செய்வேன். • பெண்களுக்கும் சம ஊதியம் கிடைக்க ஆவன செய்வேன். • சுய உதவி குழுக்களிலுள்ள பெண்களுக்கு சிறு தொழில் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு மற்றும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கொள்முதல் நிலையங்கள், விற்பனை மையங்கள் அமைக்க உதவுவேன். • கிராமப்புறப் பெண்களுக்கு கணினிப் பயிற்சி வழங்க ஆவன செய்வேன். • மாற்றுத்திறனாளிகளின் சமூக-பொருளாதார, அரசியல் விடுதலைக்கானப் போராட்டத்தில் அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து உதவுவேன்.
[8] சுற்றுலா மேம்பாடு: • சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி, மக்களுக்கான வசதிகளைப் பெருக்கி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரித்து, சுற்றுலாச் சேவையை விருத்தி செய்வேன். • கன்னியாகுமரி, சொத்தவிளை, திற்பரப்பு போன்ற சுற்றுலாத் தலங்களில் தேர்ச்சி பெற்ற உயிர்காப்போர் (Life Guards) நியமிப்பேன். • கொட்டாரம் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் அமைப்பேன். • குளச்சல் போர் வெற்றித்தூணை இந்திய அரசு வரலாற்றுச் சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பேன்.
என்னைத் தொடர்பு கொள்ள: சுப. உதயகுமார், 42/27 இசங்கன்விளை மணி வீதி, பறக்கை ரோடு சந்திப்பு, கோட்டார், நாகர்கோவில் 629 002, கன்னியாகுமரி மாவட்டம்; Email: spudayakumar@gmail.com; skype: spudayakumar; Facebook: spudayakumaran; Twitter: spudayakumar.
|