சென்னை நகரத்தில் மட்டுமே குறிப்பாக வடசென்னையில் பெரிதும் வழக்கிலுள்ள கலை கானாப்பாட்டு. சென்னை நகரிலுள்ள குப்பங்களில் வாழும் மக்கள் இக்கலையை நிகழ்த்துகின்றனர். இக்கலைக்குரிய முக்கிய இசைக்கருவி டோலக். மேலும் தகரடப்பா, குடம் போன்று கையில் கிடைக்கும் பொருட்களில் தாளமிட்டுக் கொண்டே பாட்டுகளைப் பாடுவது இக்கலைஞர்களின் வழக்கம். சென்னை நகரிலுள்ள பல கல்லூரி மாணவர்கள் கானாப் பாட்டுக்களைப் புதிது புதிதாகக் கட்டிப் பாடுகின்றனர். பொது மேடைகளில் கானாப்பாட்டு பாடும் வழக்கமும் தற்போது காணப்படுகிறது. தமிழ்த் திரைப்படங்களில் கானாப் பாட்டு இடம் பெறத் தொடங்கி இன்று அது செல்வாக்கும் அடைந்து வருகிறது.
|