பொம்மைக்கூட்டில் கையை நுழைத்து பொம்மையை ஆட்டி நிகழ்த்தப்படும் கலை கையுறைப் பாவைத்கூத்து எனப்படும். பொம்மைக் கூட்டில் வலது கையை நுழைத்து, பொம்மையின் இரு கைகளிலும் பெருவிரலையும், நடுவிரலையும் நுழைத்தும், பொம்மையின் தலையில் ஆட்காட்டி விரலை நுழைத்தும் பொம்மையை இயக்குவது இதன் செய்முறையாகும். பொம்மலாட்டக் கலையைப் போன்றே திரைச் சீலையின் மேல்பகுதியிலேயே பொம்மைகள் இயக்கப்படுகின்றன. இக்கலையானது மூன்று தலைமுறைக்கு முற்பட்டது எனத் தெரியவருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறைக்கு வடக்கே உள்ள பகுதிகளில் இக்கலை நிகழ்கிறது. இக்கலையை ஒரு ஆண் மட்டுமே நிகழ்த்துகிறார். இக்கலையை நிகழ்த்துவதற்கென சில நியதிகள் இருப்பதாகத் தெரியவருகிறது. அதாவது கலையை நிகழ்த்துபவர் 30 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும் என்றும் அவர் கலைநிகழ்த்துவதற்கு ஒரு வாரம் விரதம் இருக்க வேண்டும் என்றும் அறியப்படுகிறது.
|