|
|||||
செய்யாறு அருகே 14-ம் நூற்றாண்டு சம்புவராயர் கல்வெட்டு கண்டுபிடிப்பு |
|||||
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சுண்டிவாக்கம் கிராமத்தில் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு 14-ம் நூற்றாண்டு சம்புவராயர் காலத்துக் கல்வெட்டு எனத் தெரிய வந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சுண்டிவாக்கம் கிராமத்தில் விநாயகர் கோயில் முன்பு ஒரு பழமையான கல்வெட்டு உள்ளது.
திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம் குழுவினர் திருவண்ணாமலை மாவட்டத்தில், இதுவரை படிக்கப்படாத கல்வெட்டுகளைப் படித்து ஆவணப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்தக் குழுவைச் சேர்ந்த பாலமுருகன் வழிகாட்டுதலின் பேரில், லோகேஷ் என்பவரால் சுண்டிவாக்கத்தில் உள்ள கல்வெட்டு படியெடுக்கப்பட்டது.
சுண்டிவாக்கம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டை முனைவர் பா. வெங்கடேசன் படித்து, கல்வெட்டில் உள்ள விவரங்களை வெளிப்படுத்தினார். இந்தக் கல்வெட்டு 14-ம் நூற்றாண்டில் செய்யாறு மற்றும் தொண்டை மண்டலம் வட ஆற்காடு பகுதியை ஆட்சி செய்த சம்புவராயர் மன்னர் ராஜ நாராயணன் காலத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது.
கி.பி 12-ம் நூற்றாண்டின் பிற்பகுதி
இந்த கல்வெட்டில், “ஸ்வஸ்தஸ்ரீ ஸகலலோக சக்ரவர்த்தி ஸ்ரீ ராஜ நாராயணன் சம்பூராயர்க்கு யாண்டு பதின் ஏழாவது தை மாதம் அத்திப் பற்று தாழ(ம்) செண்டு பாக்கமவன் ஓட மாராயசத்து மெய்(யூர்) மடத்திலும் எல்லா வரிகளும் நீக்க ஸர்வ மான்ய இறையிலியாக குடுத்தோம்” என்று பொறிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் கோ. திருமாவளவன் தனது ‘சம்புவரையர்’ என்ற நூலில், “கி.பி 12-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து கி.பி. 13-ம் நூற்றாண்டின் இறுதி வரை சோழப் பேரரசின், படைத் தலைவர்களையும் அதையடுத்து, பாண்டியப் பேரரசு, விஜயநகரப் பேரரசு ஆட்சியில் தொடர்ந்து, தொண்டை மண்டலப் பகுதியின் ஆட்சித் தலைவர்களாகவும் சம்புவராயர்கள், தம் மேலாண்மை அரசர் சார்பிலும், வழங்கிய கல்வெட்டுகள் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.
இந்த சம்புவராயர் மன்னர்களின் தலைநகராக விரிஞ்சிபுரமும் பின்னர் காஞ்சிபுரம் இருந்தது. ஆரணி அருகே உள்ள படவேடு சம்பூவராயர்களின் கோட்டை நகரமாக விளங்கியது. ” என்று குறிப்பிடுகிறார்.
ராஜ நாராயணன் சம்புவராயரின்
மேலும், சம்புவராயர் சிறந்த மன்னர்களில், ராஜ நாராயணனும் ஒருவன் என்று குறிப்பிடுகிறார். மேலும், ராஜ நாராயணன் சம்புவராயர் தன்னை ஸ்வஸ்திக், சகலலோக சக்ரவர்த்தி, திரிபுவன சக்ரவர்த்தி என்று கல்வெட்டுகளில் அழைத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.
இதன் மூலம், செய்யாறு அருகே சுண்டிவாக்கம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு, ராஜ நாராயணன் சம்புவராயரால் பொறிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. இந்த கல்வெட்டில், பதின் ஏழாவது தை மாதம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது ராஜ நாராயணன் சம்புவராயரின் 17-வது ஆட்சியாண்டைக் குறிப்பிடுகிறது. இதன் மூலம், ராஜ நாராயணன் சம்புவராயர் கி.பி 1338-ல் ஆட்சி பொறுப்பேற்றார் என்ற கணக்கின்படி, ராஜ நாராயணன் 17-வது ஆட்சி என்றால், இந்த கல்வெட்டு கி.பி 1356-ம் ஆண்டு பொறிக்கப்பட்டது தெளிவாகிறது.
இந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட, சுண்டிவாக்கம் கிராமம் இந்தக் கல்வெட்டில் செண்டுபாக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செண்டுபாக்கம் என்பதே காலப்போக்கில் சுண்டிவாக்கம் என மாறியிருக்கலாம் என்பது கருத முடிகிறது. மேலும், இந்தக் கல்வெட்டு, இந்த ஊர் சர்வ மான்ய இறையிலியாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. |
|||||
by Kumar on 14 Jan 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|