|
||||||||
தமிழறிஞர் பேராசிரியை வி. தனலட்சுமி (1975) |
||||||||
தமிழறிஞர் பேராசிரியை வி. தனலட்சுமி (1975) … எனது தொடரில் ஐந்தாவது தலைமுறை வரிசையில் முக முக்கியமான இளம் ஆய்வாளர் . இவர்களைப்போன்ற இளம் ஆய்வாளர்கள் எதிர்காலத்தில் தமிழ் வளர்ச்சி , குறிப்பாகக் கணினித்தமிழ் வளர்ச்சி நல்ல திசையில் நிச்சயமாகச் செல்லும் என்பதை அடையாளம் காட்டும் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்குகிறார்கள். அறிவியலில் ( Nutrition & Dietetics) இளங்கலைப் பட்டமும் , தமிழில் முதுகலை , எம்ஃபில், முனைவர் பட்டங்களையும் பெற்றவர்.
ஆங்கிலத்திலும் ஊடகவியலிலும் முதுகலைப்பட்டங்கள் பெற்றுள்ளார். கணினிமொழியியலில் முனைவர் பட்டம் (2011) பெற்றுள்ளார். இயற்கைமொழி ஆய்வில் (Natural Language Processing – NLP) முதுகலைப் பட்டயம் பெற்றுள்ளார். ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை ஏனாதி ராஜாப்பா கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியபின்னர், கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தின் கணினிமொழியியல் தொடர்பான பிரிவில் தமிழ் முதுநிலை ஆய்வாளராக நான்காண்டுகள் (2007-2011) பணியாற்றியுள்ளார். 2001 முதல் இன்றுவரை எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார். இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழுக்கான கணினிவழி பகுப்பாய்வி ( A Shallow Parser for Tamil) என்ற ஒரு மிக முக்கியமான தலைப்பாகும். அமிர்தா பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றும்போது, அங்கே பணியாற்றுகிற பிற பேராசிரியர்கள், ஆய்வாளர்களோடு இணைந்து பல கணினிமொழியியல் திட்டங்களைத் தமிழுக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, தமிழ்ச் சொற்களைப் பகுபத இலக்கண அடிப்படையில் பகுத்து, அவற்றின் இலக்கண வகைப்பாடுகளைத் தானாகவே காட்டும் மென்பொருள் கருவிகளை உருவாக்கியுள்ளார்.
தமிழ்த்தொடரியல், பொருண்மையியல் , மின்னகராதி போன்ற பிற கணினிசார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தற்போது செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வுநிறுவனத்தின் உதவியோடு பழந்தமிழ் இலக்கியங்களுக்கான உருபன் , தொடர்ப் பகுப்பாய்விகளை ( Dependency Parser for Tamil classical Literature – Kurunthokai ) உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குறுந்தொகைக்கான பணியைத் தற்போது முழுமை செய்துள்ளார். கணினிவழி மொழிபெயர்ப்புக்கான பல ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, கணினிக்கற்றல் ( Machine Learning) என்ற ஒரு வழிமுறையில் கணினிக்கு இலக்கணப் பயிற்சியளித்து, பின்னர் அதுவே தானாகவே சொற்களையும் தொடர்களையும் பகுக்கும் ஒருவகை கணினிமொழியியல் வழிமுறையில் முன்னோடியாகத் திகழும் ஒரு இளம் ஆய்வாளராகச் செயல்பட்டுவருகிறார்.
தேசிய, உலக அளவிலான பல கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுகளை வழங்கியுள்ளார். பல ஆய்விதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘நிலாக்கால நினைவுகள் ‘ என்ற ஒரு கவிதைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவருடைய ஆய்வுகள்பற்றிப் பின்கண்ட கூகில் இணைப்பில் பார்க்கலாம். http://scholar.google.com/citations?hl=en...
தமிழகத்தில் தமிழில் , குறிப்பாகக் கணினித்தமிழில் சிறப்பான இளம் ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழும் முனைவர் வி. தனலட்சுமிக்குத் தனது ஆய்வுகளைத் தொடர நல்ல வாய்ப்புகள் தமிழகத்தில் அமையவேண்டுமென விரும்புகிறேன். இவரது மின்னஞ்சல் முகவரி - dhanagiri@gmail.com
-தெய்வ சுந்தரம் நயினார்
|
||||||||
by Swathi on 20 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|