முனைவர் லோ.ரா. பிரேம்குமார் ( 1983) ... 32 வயது இளைஞர்... இளங்கலையில் இயற்பியல் படித்த இவர், பின்னர் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் மொழியியலில் முதுகலைப்பட்டம், எம் ஃபில் பட்டம், முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றார். தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். எம் பில் பட்ட ஆய்விற்கு ஸ்ரீபிரியாவின் கவிதைகளின் மொழிநடையை ஆய்வுசெய்தவர், தனது முனைவர் பட்ட ஆய்விற்குத் தொடக்கப் பள்ளி நிலையில் வெளிவந்துள்ள தமிழ்ப் பாடநூல்களைப்பற்றிய மதிப்பீட்டை மேற்கொண்டார். சௌராஷ்டிரா மொழியிலும் பேச்சுத்திறன் பெற்றவர். கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் திறன் பெற்றவர். 2008 ஆண்டு முதல் 2010 ஆண்டுவரை ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறையில் இந்திய மொழிகளுக்கான இயந்திர மொழிபெயர்ப்பு ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். குறிப்பாக, அதற்குத் தேவையான உருபன் பகுப்பாய்விகளை உருவாக்குவதில் முனைந்தார்.
2010 ஆம் ஆண்டு மைசூர் இந்தியமொழிகள் நடுவண் நிறுவனத்தில் இந்தியமொழிகளுக்கான தரவு உருவாக்க மையத்தில் பணியில் சேர்ந்தார். அங்கே எழுத்து, பேச்சுத் தரவுகளைச் சேகரித்து, அவற்றிற்கான மொழியியல் குறிப்புகளைத் தானே தரும் மொழிக் கருவிகளை உருவாக்குவதில் முனைந்துள்ளார். இந்த ஆய்வு தமிழ்மொழி சார்ந்த பல மொழித்தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்க மிகவும் உதவும். அங்கேயே முதுநிலை ஆய்வாளராகத் தற்போது பணியாற்றிவருகிறார். அந்த மையத்தின் சார்பாக நாடெங்கும் நடைபெறும் பயிலரங்குகளில் இயற்கைமொழி ஆய்வுபற்றிய பயிற்சிகளை ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் அளித்துவருகிறார். தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
தரவகத்தின் அடிப்படையில் தமிழ்மொழி கற்பித்தலுக்குத் தேவையான பல ஆய்வுகளை அளித்துள்ளார். தேசிய அளவில் கணினி மொழியியல், மொழித்தொழில்நுட்பம் தொடர்பான ஏராளமான கருத்தரங்குகள், பயிலரங்குகளில் பங்கேற்று, பல ஆய்வுகளை அளித்துள்ளார். தரவக மொழியாய்வு, இயந்திரமொழிபெயர்ப்பு, தமிழ்மொழி பயிற்றுவித்தல் ஆகிய துறைகளில் முனைப்பாகச் செயல்படுகிற இவர், தமிழ்க் கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பத் துறையில் நன்கு வளர்ந்துவருகிற ஒரு ஆய்வாளராகத் திகழ்கிறார்.
கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பத்தில் இளைஞர்களுக்கு முறையான பயிற்சியளித்து, தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளவும் மைசூர் இந்தியமொழிகள் நடுவண் நிறுவனம் உதவிவருவது பாராட்டுதலுக்குரியது. அப்பணிகளின் தலைவராகச் செயல்பட்டுவருகிற பேரா. ல. இராமமூர்த்தியும் பாராட்டுக்குரியவர். அவருடைய வழிகாட்டுதலில் தமிழ் இளைஞர்கள் பலர் கணினிமொழியியல் துறையில் இன்று வளர்ந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|