முனைவர் பா. ஜெய்கணேஷ் ( 1981) ... இவரது புனைப்பெயர் இளமாறன். எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றிவருகிறார். தனது 32 ஆவது வயதில் நெய்வேலிப் புத்தக்கண்காட்சியின் சிறந்த ஆய்வாளர் விருதையும் , 33 ஆவது வயதில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயத்தின் சிறந்த இளம் ஆய்வறிஞர் வளர்தமிழ் விருதையும் ( ரூ.1,50,000 பொற்கிழி), 34 ஆவது வயதில் செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தின் இளம் ஆய்வறிஞருக்கான குடியரசுத் தலைவர் விருதையும் பெற்றுள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரியதாகும். மயிலம் தமிழ்க்கல்லூரியில் பி.லிட். பட்டம்பெற்ற இவர், பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் தமிழில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் (2010) பெற்றுள்ளார். தமிழ் இலக்கண உரை வரலாறு - யாப்பியல் உரைகள் என்ற தலைப்பில் பேராசிரியர். ய. மணிகண்டன் அவர்களின் வழிகாட்டுதலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.
சுவடியியல், பதிப்பியல், செயற்பாட்டுமொழியியல் ஆகியவற்றில் பட்டயச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். இரண்டு ஆண்டுகள் மொழி அறக்கட்டளையில் பேரா. பா.ரா. சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் தமிழ் அகராதித்திட்டத்தில் பணியாற்றினார். பின்னர் சென்னை குருநானக் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றினார். இதுவரை 10 ஆய்வு நூல் வெளியீடுகள் வந்துள்ளன. நான்கு நூல்கள் ( தமிழ் யாப்பிலக்கண உரைவரலாறு, இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம், பதிப்பும் வாசிப்பும், தொல்காப்பியம் -அடைவு -ஆவணம்-வரலாறு ) இவர் தனியே வெளியிட்டவை. தொல்காப்பியப் - பன்முகவாசிப்பு என்ற நூலைப் பதிப்பித்துள்ளார். மேலும் ஐந்து நூல்களுக்கு இணையாசிரியராக இருந்துள்ளார்.
தொல்காப்பிய பதிப்புரைகள் (1847-1950) , தமிழ் இலக்கணப் பதிப்புகள், தமிழ் இலக்கண உரை ஆய்வு வரலாறு என்ற மூன்று நூல்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. 25 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள இவர், 50-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுரை வழங்கியுள்ளார். வல்லினம் என்ற காலாண்டிதழ், மாற்றுவெளி என்ற ஆய்விதழ், புதிய புத்தகம் பேசுது என்ற மாத இதழ் இரண்டிலும் ஆசிரியர் குழுவில் உள்ளார். தமிழ் இலக்கணங்கள் ( குறிப்பாக, தொல்காப்பியம்), தமிழ் யாப்பு இரண்டிலும் இளம் வயதிலேயே மிகச் சிறந்த திறனுடையவராக இவர் விளங்குகிறார். இவர் முதுகலை, முனைவர் படிப்புகளை மேற்கொண்ட தமிழிலக்கியத்துறையின் அருகே அமைந்திருந்த தமிழ்மொழித்துறையின் பேராசிரியராக நான் பணியாற்றியதால், நேரடியாகவே இவரின் புலமையைப் பார்த்திருக்கிறேன். இளம் வயதிலேயே இலக்கணங்களில் ஆர்வமுடைய இவருடைய திறமை கண்டு மகிழ்வடைந்துள்ளேன். இவர் அனைவரிடமும் இனிமையாகப் பழகும் நண்பரும்கூட.
34 வயதிற்குள் மூன்று சிறப்பான விருதுகளைப் பெற்று, பத்துக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களையும் 50 ஆய்வுரைகளையும் தமிழாய்வுலகிற்கு வழங்கியுள்ள முனைவர் ஜெய்கணேஷ் அவர்களை எனது முகநூல் பக்கத்தில் தமிழறிஞர்கள் வரிசையில் அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்வடைகிறேன். மேலும் அவரது ஆய்வுப்பணி சிறக்க எனது வாழ்த்துகள்.