|
||||||||
தமிழ் ஆய்வுலகில் பிற துறை அறிஞர் பெருமக்கள் .... |
||||||||
தமிழ்த்துறையில் பட்டம் பெற்று, அத்துறையில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வதில் வியப்பு இல்லை! ஆனால் வேதியியல், பொறியியல், கணினியியல் போன்ற பிற துறைகளில்... அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் உயர்பட்டங்கள் பெற்று ... மிகப் பெரிய நிறுவனங்களில்... பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்துகொண்டு.... வியக்கத்தக்கவகையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்களில் ஆய்வுகளை மிக ... மிக மிக... ஆழமாக மேற்கொண்டுவருபவர்களின் தமிழ் உணர்வும், தமிழ் ஆய்வும் வியக்க வைக்கின்றன. அவர்கள் முகநூல் பக்கங்களில் முன்வைக்கிற கருத்தாடல்களைப் பார்க்கும்போது, எவ்வளவோ நான் பின்தங்கியுள்ளேன் என்ற ஒரு உணர்வு தோன்றுகிறது.
வேர்ச்சொல் ஆய்வில் பாவாணர், பெருஞ்சித்திரனார், அருளி என்ற வரிசையில் இராம கி ஐயா அவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இவர் துறை வேதிப் பொறியியல்! தமிழ் இலக்கணம், தமிழ்க் கலைச்சொல் ஆக்கம் என்று பல முனைகளில் தமிழ்ப்பணி புரிந்துவரும் செல்வா என்று அன்பாக அழைக்கப்படும் பேரா. செ.இரா. செல்வக்குமார் மின்னணு- மின்னியல் துறையில் கனாடாவில் வாட்டர்லூ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். மதிப்பிற்குரிய ஜெயபாண்டியன் கோட்டாளம் , மணி மணிவண்ணன், நாக இளங்கோவன், இராமசாமி செல்வராசு, வேல்முருகன் சுப்பிரமணியன், சுந்தர் இலட்சுமணன்.... பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இவர்கள் அனைவரும் தற்போது அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் என்று அயல்நாடுகளில் தங்கள் துறை நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
பண்டைத் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் , இன்றைய கணினிமொழியியல் என்று பல தளங்களில் தமிழ்மொழிக்கான குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டுவருகிறார்கள். இவர்களுடைய கருத்தாடல்களில் பங்கேற்க வேண்டுமென்றால்... நமக்கு மிக ஆழமான தமிழ் அறிவு தேவைப்படுகிறது என்பதைப் பல நேரங்களில் நான் உணர்ந்துள்ளேன். ''இவர்கள் என்ன, தமிழில் பட்டம் பெற்றவர்களா, தமிழ்த்துறையைச் சேர்ந்தவர்களா '' என்று நினைத்துவிடக்கூடாது ... அது ஆபத்து!இவர்களைப்பற்றித் தனித்தனியே விரிவாக முகநூலில் பதிவு செய்ய விரும்புகிறேன். விரைவில் அப்பணியை நிறைவேற்றுவேன்.
மேலே நான் குறிப்பிட்டுள்ள அறிஞர்கள் மட்டுமல்ல, என்னுடைய பட்டியலில் பிறதுறைகளைச்சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள் மேலும் பலர் ... இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் இருக்கின்றனர். அவர்களைப்ற்றிய விவரங்களைத் திரட்டிவருகிறேன்.
தமிழ்ப்பணி என்பது தமிழ்ப் புலவர்கள், தமிழ் இலக்கண ஆய்வாளர்கள், தமிழாசிரியர்கள் என்ற நிலை எல்லாம் இன்று மாறிவிட்டது. தமிழ்மொழியின் சிறப்பும், கட்டமைப்பும் மேற்குறிப்பிட்ட பிறதுறை அறிஞர்களை மிகவும் கவர்ந்துவிட்டன. அவர்கள் பிற துறைகளில் பெற்ற ஆய்வுமுறைகளையெல்லாம் ... தமிழுக்கு இன்று செயல்படுத்தி, வியக்கத்தக்கப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். தமிழாய்வுக்கு மிகச் சிறப்பான நிகழ்காலம் தற்போது என்பதில் மிக்க மகிழ்வடைகிறேன். இவர்கள் அனைவருக்கும் தமிழ் ஆய்வுலகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. இவர்களுக்கு நமது வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
-தெய்வ சுந்தரம் நயினார்
|
||||||||
by Swathi on 20 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|