பெரும்பேராசிரியர் முனைவர் அ. காமாட்சிநாதன் (1936) ... நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர். என்னைப் போன்ற அவரது மாணவர்கள் எல்லோரும் வியப்படையும் அறிவார்ந்த ஒரு பேராசிரியர். தமிழ் இலக்கியம், தமிழ்மொழி, மொழியியல் துறைகளில் உண்மையில் கரைகண்டவர். தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்ற இவர், கேரளப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் (1964-67) பெற்றார். சங்க இலக்கியங்களில் ஒன்றான நற்றிணையின் மொழிநடையைப் பற்றிய ஆய்வே அவரது முனைவர் பட்ட ஆய்வாகும். பின்னர், 1964-67 ஆம் ஆண்டுகளில் கேரளப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறையில் ஆய்வு உதவியாளராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 1967 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் இணைந்தார்.
1967 முதல் 1997 வரை அங்கேயே பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றார். இடையில் (1974-77) மூன்று ஆண்டுகள் பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியின் தமிழ்முதுகலைத் துறையின் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் , இரண்டு ஆண்டுகள் ( 1994-96) பூனாவிலுள்ள டெக்கான் கல்லூரி மொழியியல் துறையில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ஆங்கிலம், ஜெர்மன், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் திறனுடையவர். தமிழ்மொழி, சமஸ்கிருத மொழிகளுக்கிடையிலுள்ள ஒற்றுமை வேற்றுமைபற்றிய ஒப்பிலக்கண ஆய்வில் பேராசிரியர் மிகச் சிறந்த ஒருவர் ஆவார். இலக்கணப் பேராசிரியர்களான எல்.வி. இராமசாமி ஐயர், பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி ஆகியோரின் இலக்கணப்புலமைபற்றிப் பல கட்டுரைகளைப் பேராசிரியர் எழுதியுள்ளார். ஏராளமான மாணவர்கள் இவரது வழிகாட்டுதலில் எம்ஃபில், முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர். 1967-72 ஆம் ஆண்டுகளில் காமன்வெல்த் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான பேராசிரியர்கள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர்கள் இங்கிலாந்து சென்று வந்துகொண்டிருந்தனர். அப்போது, பேராசிரியர் காமாட்சிநாதனுக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பவில்லை. அதற்குக் காரணம், இங்கிலாந்திலிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வருகைதரும் பேராசிரியர்கள் பேராசிரியர்களாகக் கருதப்பட்டனர்.
ஆனால் இங்கிருந்து இங்கிலாந்து செல்லும் பேராசிரியர்கள் மாணவர்களாகவே அங்கு கருதப்பட்டனர். இதில் உடன்பாடு இல்லாத பேராசிரியர், அங்கு செல்ல விரும்பவில்லை. சங்க இலக்கியங்களுக்கான சொல்லடைவுத் திட்டம் ( Index Verborum of Sangam Classics) என்ற ஒரு ஆய்வுத்திட்டம், மொழிநடையின் அடிப்படையில் சங்க இலக்கியங்களின் காலவரிசை, மொழிப் புவியியல் ( Linguistic Geography) , பேரா. எல்.வி. இராமசாமி ஐயர் எழுதியுள்ள திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணக் கட்டுரைகளின் தொகுப்பு, மொழியியல் வரலாறு போன்ற பல ஆய்வுத்திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். 2381 சங்கல இலக்கியப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதியுதவியுடன் நற்றிணை இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, தேவையான குறிப்புகளுடன் தரும் ஒரு திட்டத்தை முடித்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் பேராசிரியர் வெளியிட்டுள்ளார். நற்றிணைமீது பேராசிரியருக்கு ஈடுபாடு அதிகம் என்ற காரணத்தால் , தனது இல்லத்திற்கே 'நற்றிணை' என்று பெயரிட்டுள்ளார். இந்தோ- ஆரிய மொழிகளில் காணப்படுகிற பிறமொழிச் சொற்கள்பற்றிய ஒரு ஆய்வையும் செய்துள்ளார். நான் 1973-75 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் முதுகலை படிக்கும்போது, எங்களுக்கு " மொழியியல் வரலாறு ( History of Linguisitcs) " பாடம் நடத்தினார். அவருடைய அறிவுத்திறனைக் கண்டு நாங்கள் வியந்துநிற்போம்.
அவருடைய ஆங்கிலமொழிநடை மிகச் சிறப்பானதாக இருக்கும். தமிழ் இலக்கணத்தில் எவ்வளவு புலமை உண்டோ , அவ்வளவு புலமை அவருக்கு ஆங்கிலத்திலும் உண்டு. இவரைப்பற்றி மொழியியல் அறிஞர்கள் காத்ரே, கமில் சுலபில், சி.ஆர். சங்கரன், அ. சிதம்பரம்செட்டியார் போன்றோர் மிகவும் பாராட்டிக் கூறியுள்ளனர். ஒரு தடவை பேரா. வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் தனக்கு வாய்ப்பு இருந்தால், இவரைத் தனது துறையில் பேராசிரியராக நியமிப்பேன் என்று கூறியுள்ளார். தற்போது இவருக்கு 80. இன்றும் மொழியியல் ஆய்வில் தளராமல் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.
|