திரு. இரா. அகிலன் ... பத்தாண்டுகளுக்கு மேலாகத் தன்னை சங்க இலக்கியத்திற்கான தரவக உருவாக்கத்தில் (Corpus development) ஈடுபடுத்திக்கொண்டுள்ள இளம் கணினித்தமிழ் ஆய்வாளர் ... நிரலாக்கர். கணினியியல்துறையில் எம்சிஏ , எம் ஃபில் பட்டங்களையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்கைமொழி ஆய்வுப் பட்டயத்தையும் பெற்றுள்ள இவர், தனது கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் மூன்று ஆண்டு காலம் ( 2003-07)
தஞ்சைப் பேராவூரணி நகரிலுள்ள வெங்கடேஸ்வரா கலை , அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.
பின்னர் சில காலம் மைசூர் இந்தியமொழிகள் நடுவண் நிறுவனத்தில் இந்தியமொழிகளுக்கான தேசிய மதிப்பீட்டு மென்பொருள்கள், சோதனைக்கருவிகள் உருவாக்கத் திட்டத்தில் இளநிலை ஆய்வு வளமையராகப் பணியாற்றினார். 2007 -லிருந்து இன்றுவரை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் சங்க இலக்கியத்திற்கான தரவகம் உருவாக்கம், ஆய்வு ஆகிய பணிகளில் முழுமையாக ஈடுபட்டுவருகிறார். செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் மொழித்தொழில்நுட்பப் பிரிவு என்ற ஒரு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அப்பிரிவில் ' இணையவழி உ.வே.சா. செம்மொழித் தமிழ்த் தரவகம்' என்ற ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, இறையனார் களவியல் உட்பட இருபது நூல்களுக்குத் தொடரடைவு ( Concordancer) ஒன்று உருவாக்கப்பட்டு, நிறுவனத்தின் இணையதளத்தில் அளித்துள்ளனர். சங்க இலக்கியச் சொல்லடைவை ( indexing) உருவாக்குவற்கான சொல்லடைவி 1.0. என்னும் மென்பொருள் ஒன்றை உருவாக்குவதிலும் இவர் பெரும்பங்காற்றியுள்ளார். இந்த மென்பொருளைக்கொண்டு, கணினியில் உள்ளீடு செய்யப்படும் தரவகத்திலிருந்து சொல்லடைவைப் பெறலாம்.மேலும் சங்க இலக்கியத் தரவகம், சங்க இலக்கியக் குறியீட்டுத் தரவகம், சங்க இலக்கியங்களுக்கான மென்பொருள் கருவிகள் போன்றவற்றை உருவாக்கும் பணிகளில் ஒரு சிறந்த நிரலாக்கராகத் தனது பங்களிப்பை அளித்துவருகிறார்.
மேற்கூறிய பணிகளின் அடிப்படையில் இதுவரை 11 சர்வதேச அளவிலான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். சங்க இலக்கியக் கணினித்தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகளை மாணவர்களுக்கு 30-க்கும் மேற்பட்ட பயிலரங்குகளில் அளித்துள்ளார். அண்மையில் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உத்தமத்தின் இணைய மாநாட்டில் ' சங்க இலக்கியக் குறியீட்டுத் தரவகம்' என்னும் பொருண்மையில் ஒரு சிறந்த ஆய்வுக்கட்டுரையை வழங்கி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.
பத்தாண்டுகளாகத் தன்னைத் தமிழ்க் கணினிமொழியியல் துறையில் - குறிப்பாக, தரவகமொழியியலில் ( Corpus Linguistics ) - ஈடுபடுத்திக்கொண்டு வருகிற இந்த இளம் தமிழ்க் கணினிமொழியியல் நிரலாக்கரின் பணி சிறக்க வாழ்த்துகள்!
|