|
||||||||
நாட்டு மாடுகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? |
||||||||
எல்லா வகை மாடுகளும் மனிதனுக்குப் பால் கொடுக்கிறது; விவசாயத்தில் பயன்படுகிறது. அப்படியிருக்க நாட்டு மாடுகளின் மீது மட்டும் நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்.. ஒருவேளை உங்களுக்கு இப்படிக் கேட்கத் தோன்றலாம்!
இந்தப் பதிவு, கலப்பின மாடுகளுக்கும் நாட்டு மாடுகளுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாக்குகிறது!
“சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு; பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு?!” இந்தப் பாடல் வரிகள் வெறும் கவி நயத்தின் பொருட்டு எழுதப்பட்ட வரிகளல்ல.
உண்மையில் மாடுகள் மனிதனுக்கு வழங்கும் நன்மைக்கு பொன் கொடுத்தாலும் ஈடாகாதுதான்! அதை உணர்ந்த நம் முன்னோர்கள், மாடுகளுக்கென தை மாதம் இரண்டாம் நாளில் மாட்டுப் பொங்கலிட்டு கொண்டாடி வந்துள்ளனர்.
ஆனால், ‘மாடு’ என்ற வார்த்தை அனைத்து ரக மாடுகளையும் ஒரே தரத்திற்குள் அடக்கிவிடுவதாகிறது. உண்மையில், நீங்கள் பார்க்கும் பெரும்பாலான மாடுகள் நம் நாட்டைச் சேர்ந்தவையே அல்ல. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான நாட்டு மாடுகள் உள்ளன. காங்கேயம் மாடு, பர்கூர் செம்மரை மாடு, பாலமலை மாடு, ஆலம்பாடி மாடு, பெரம்பலூர் மொட்டை மாடு, மணப்பாரை மாடு, தொண்டைப் பசு, புங்கனூர் குட்டை என பல்வேறு இனங்கள் உண்டு.
மயிலை (சாம்பல் நிறம்) காரி (கருப்பு நிறம்) வெள்ளை, செவலை (மர நிறம்) எனப் பல நிறங்கள் மாடுகளுக்கு உண்டு.
இதுபோன்ற நம் நாட்டு மாடுகள் அரிதாகிவிடும் அளவிற்கு ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன், ப்ரீசியன், ரெட்டேன் போன்ற கலப்பின ரகங்கள் தற்போது அதிகரித்துவிட்டன.
நாட்டு மாடுகள் இனம் கிட்டத்தட்ட அழியும் தருவாயில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது! இது நம் நாட்டு மாடுகளைக் காக்க வேண்டிய தருணமாகும்.
நாட்டு மாடுகளை ஏன் காக்க வேண்டும்?
எப்படி மக்கள் தொகைப் பெருக்கம் இரசாயன விவசாயத்திற்கு காரணமாகச் சொல்லப்பட்டதோ அதே காரணம்தான் இந்த கலப்பின மாடுகளின் வரவிற்கும் சொல்லப்பட்டது. ‘இத்தனை கோடி பேருக்கு பால் உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் நாட்டு மாடுகளால் தரமுடியாது, கலப்பின மாடுகள்தான் தரமுடியும்’ என்று கூறி கலப்பினங்களை இங்குக் கொண்டு வந்தார்கள். அதனால் பால் உற்பத்தி என்னவோ அதிகரிக்கத்தான் செய்தது; அதை உட்கொள்ளும் மனிதர்கள்தான் அதனால் பலவித நோய்களுக்கும் குறைபாடுகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.
நம் நாட்டுப்பசுக்கள் கொடுக்கும் பால் A2 பால் என அழைக்கப்படுகின்றது. கலப்பின பசுக்கள் கொடுக்கும் பால் A1 வகை என்கிறார்கள். நாட்டு மாடுகள் மிகவும் சத்துடைய A2 புரதம் உடையவை. கலப்பின மாட்டுப் பாலான A1 வகையில் சர்க்கரை நோய், ஹார்மோன்-மரபின கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் விளைவிக்கக் கூடிய தன்மைகள் உள்ளன.
இவற்றை உணர்ந்த பல வெளிநாடுகள் A1 பால் மற்றும் A2 பால் எனப் பிரித்து விற்கத் துவங்கியுள்ளன. நாம் அதனை அறியாமல் இன்னும் பாக்கெட் பால்களை வாங்கி உட்கொண்டு வருகிறோம். இதனால் பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய், விரைவில் பூப்பெய்துதல் போன்ற பிரச்சனைகள் விளைவதோடு, ஆண்களுக்கும் ஹார்மோன்கள் சார்ந்த பல பிரச்சனைகள் உண்டாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டு மாடுகள் நல்கும் நன்மைகள்!
நாட்டுப் பசுவின் சாணத்தில் மட்டும்தான் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் நிறைந்து காணப்படுவதால், அதன் எரு, மண்வளத்தைப் பெருக்கி உயிர்ச் சூழலை காக்கும் என இயற்கை வேளாண் வல்லுநர்கள் கூறுகின்றனர். இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தும் திரு.நம்மாழ்வார் மற்றும் சுபாஷ் பாலேக்கர் போன்றோர்கள் நாட்டுப் பசுக்கள், நடமாடும் இயற்கை உர தொழிற்சாலைகள் என்பதை வலியுறுத்துகின்றனர்.
இயற்கை வேளாண்மையில் முக்கிய பங்கு வகிக்கும் இடு பொருளான ‘பஞ்சகாவியம்’, நாட்டுப் பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது. மேலும் நாட்டுப் பசுவின் சாணத்திலிருந்துதான் நம் முன்னோர்கள் விபூதியைத் தயாரித்தனர்.
இத்தனை நன்மைகளையும் நமக்கு வழங்கும் நமது நாட்டு மாடுகள் இனம் எதிர்காலத்தில் நம் சந்ததிகளின் முன் நடமாடுமா அல்லது புத்தகத்திலும் புகைப்படத்திலும் மட்டுமே பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் அழிந்துபோகுமா என்பது தற்போதுள்ள நம் கையில்தான் உள்ளது.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாம் இயற்கை விவசாயத்திற்குத் திரும்புவதும், நாட்டு மாடுகளை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதும்தான்!
தற்போது சிக்கிம் மாநிலம் இயற்கை வேளாண்மையை முழுமையாக மேற்கொண்ட மாநிலமாக அரசு அறிவித்துள்ளதை ஒரு முன்னுதாரணமகக் கொண்டு, நம் நாடு முழுவதும் இயற்கையின் பாதைக்கு திரும்ப முயற்சிகள் மேற்கொள்வது மிக அவசியமாகும்.
நன்றி : ஈஷா விவசாய இயக்கம்.
|
||||||||
by Swathi on 25 Feb 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|