|
||||||||
வாசிப்பின் மகத்துவம் சு.வேங்கடேசனின் வேள்பாரி |
||||||||
-உதயபாஸ்கர் நாச்சிமுத்து. வாசிப்பு குறைந்து விட்டது என்ற ஆவலாதிகள் சுற்றிலும் கேட்கின்றன. எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், அமைப்புகள், என்று எல்லோரும் புகார் சொல்லிக்கொண்டிருக்கும் காலம் இது. இந்தக் காலத்தில் தான் அருகில் ஒரு கடல் ஆரவாரமாய் அலையடித்து ஆகோஷித்துக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் அந்தக்கடலில் முக்குளித்து முத்தெடுத்து வருகிறார்கள். ஆனந்தவிகடனில் நூறு வாரமாக வெளிவந்து கொண்டிருக்கும் வேள்பாரி என்ற தொடர் தமிழிலக்கியத்துக்கு மட்டுமல்ல தமிழ்ச்சமூகத்துக்கே மிக முக்கியமான இலக்கிய ஆவணமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான கால இடைவெளியில் ஒரு தொடர் நூறாவது வாரம் வெளியாகிக்கொண்டிருக்கிறது. பத்திரிகையில் மூன்று லட்சம் பேரும், இணையத்தில் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேரும் வேள்பாரியை வாசிக்கிறார்கள். அப்படி என்ன இருக்கிறது வேள்பாரியில்? தொல்தமிழரின் வாழ்வு. தமிழர்கள் இப்போது இருப்பதைப்போலவே எப்போதும் சாதிகளாகப்பிரிந்து கிடந்தார்களா? தமிழர்கள் மதமெனும் மடப்பேய் பிடித்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருந்தார்களா? தமிழர்களின் வாழ்வியல் என்னவாக இருந்தது? தமிழர்களின் அகமும் புறமும் என்னவாக இருந்தது? தமிழர்களின் அறவுணர்வு எப்படி இருந்தது? தமிழர்களின் அரசியல் எப்படி இருந்தது? தமிழர்களின் இயற்கையறிவு எப்படி இருந்தது? தமிழர்களின் வானியல் அறிவு என்னவாக இருந்தது? தமிழர்களின் வீரம் எப்படிப்பட்டது? தமிழர்களின் யுத்தநெறிமுறைகள் எப்படி இருந்தது? தமிழர்களின் காதல் எப்படி இருந்தது? தமிழர்களின் பூகோள அறிவு எப்படி இருந்தது? தமிழர்களின் தாவரவியல் அறிவு எப்படி இருந்தது? தமிழர்களின் விலங்கியல் அறிவு எப்படி இருந்தது? வீரயுக நாயகன் வேள்பாரி எல்லாவற்றுக்கும் பதில் சொல்கிறான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தமிழரின் வாழ்வை மீண்டும் கண்முன்னே நிகழ்த்திக் காட்டும் அற்புதம். இனக்குழு சமூகத்தில் இருந்த ஆதிப்பொதுவுடமை உணர்வை உணர்ச்சிகளாக, உறவுகளாக மாற்றுகிற வல்லமை. அரிதான தொல்லியல் சான்றுகளைத் தவிர முழுக்க முழுக்க இலக்கியச்சான்றுகளை மட்டுமே வைத்து கட்டியெழுப்பியிருக்கிற தமிழர்களின் கோட்டை வேள்பாரி. மார்க்சீய இயங்கியல் நோக்கில் வரலாற்றுப்பொருள் முதல்வாதத்தை புனைவின் வசீகரம் தூவி வாசகர்களை மயக்குகிற சாகசம். பேரரசுகளின் பேராசையில் சீரழிந்த தமிழர்களின் வாழ்க்கை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த செடிகள், கொடிகள், மூலிகைகள், மரங்கள், விலங்குகள், இசைக்கருவிகள், ஆடைகள், ஆபரணங்கள், ஆசைகள் என்று வார்த்தைக்கு வார்த்தை செதுக்கப்பட்டிருக்கிற சித்திரம் வேள்பாரி. வாசிப்பவனை வாசிப்பிலிருந்து விலக்க முடியாதபடிக்கான கவித்துவ நடை. தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள். முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்று பொத்தாம் பொதுவாக ஈகை பற்றியே பொதுப்புத்தியில் தீட்டப்பட்டிருந்த ஒரு வண்ணத்தீற்றல் சு.வெங்கடேசனின் ஆற்றலால் அழிக்கமுடியாத பேரோவியமாக எழுந்து நிற்கிறது. வேள்பாரி வெங்கடேசனுக்குள் புகுந்து கொண்டான். வெங்கடேசன் வேள்பாரியாகிவிட்டார். ஒவ்வொரு வாரமும் அள்ள அள்ளக்குறையாத புதிய உணர்வுகளைத் தந்து கொண்டிருக்கிறான் வேள்பாரி. அமைப்புகளுக்குள் அடைபட்டால் இலக்கியம் வராது என்று பம்மாத்து பண்ணிக்கொண்டு திரியும் இலக்கியவாதிகளுக்கு ஒரு சவாலாக வேள்பாரி இருக்கிறான். ஜெயகாந்தன், மேலாண்மை பொன்னுச்சாமி, சு.வெங்கடேசன், போன்ற எழுத்தாளர்களின் வெகுஜன வாசகப்பரப்பு வாசிப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. வீரயுக நாயகன் வேள்பாரியை மட்டுமல்ல வெங்கடேசனையும் தமிழகமே கொண்டாட வேண்டிய காலம் இது! கொண்டாடுவோம்! |
||||||||
by Swathi on 13 Sep 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|