திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற 14ம் தேதி புஷ்பயாகம் நடப்பதையொட்டி ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரக்கூடிய கார்த்திகை மாதம் திருவோண நட்சத்திரம் அன்று புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது. 15 வது நூற்றாண்டில் இந்த புஷ்பயாகம் ஏழுமலையான் கோயிலில் நடத்தப்பட்டு வந்த நிலையில் காலப்போக்கில் கைவிடப்பட்டது.
பின்னர் திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான் ஸ்ரீவேதாந்த ஜெகநாதச்சாரியலு 1980ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி முதல் மீண்டும் ஏழுமலையான் கோயிலில் புஷ்பயாகத்தை தொடங்கினார்.
அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 13-ந் தேதி ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் புஷ்பயாகத்திற்கான அங்குரார்ப்பணம் நடத்துகின்றனர்.
தொடர்ந்து 14- ந் தேதி சுப்ரபாத சேவை தொடங்கப்பட்டு அர்ச்சனை மற்றும் நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்திகளை கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வருகின்றனர். பின்னர் திருமஞ்சனம் நடத்தப்பட்டு யாகசாலையில் யாகங்கள் நடத்தப்படவுள்ளது.
|