திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் புரட்டாசி மாதத்தில் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கருடன் உருவம் வரையப்பட்ட மஞ்சள் நிற கொடி ஏற்றப்பட்டது. தலைமை அர்ச்சகர் தங்க கொடி மரத்தில் வேணுகோபாலதீட்சிதர் தலைமையில், ஆகம ஆலோசகர் சுந்தரவதன பட்டாச்சாரியார் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
முதல்நாள் நிகழ்வுகள் நேற்று (13-ந் தேதி) நடந்தன. முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சுமந்து வந்து சமர்ப்பித்தார். ரங்கநாதர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2019ம் ஆண்டுக்கான தேவஸ்தானம் சார்பில் அச்சடிக்கப்பட்ட டைரி, காலண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து இரவில், பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் திருவீதி உலாவாக வந்தார். எண்ணற்ற பக்தர்கள் " கோலிந்தா, கோவிந்தா" என முழக்கமிட்டனர்.
2ம் நாளான இன்று (14ம்தேதி) இரவில் அன்னவாகனத்தில் உலா வருகிறார். இதேபோல் 3ம் நாளான நாளை (15ம்தேதி) சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும், 4ம்நாள் (16ம்தேதி) கல்பவிருட்ச வாகனத்திலும், இரவில் சர்வ பூபாள வாகனத்திலும்5ம்நாள் (17ம்தேதி) மோகினி அவதாரத்திலும் வலம் வருகிறார். அன்றிரவு முக்கிய நிகழ்வான கருடசேவை உற்சவம் நடக்கிறது.
6ம் நாள் (18ம்தேதி) அனுமந்த வாகனத்திலும், அன்று மாலை தங்க ரதத்திலும், கஜவாகனத்திலும் உலா வருகின்றார்.
7ம் நாள் (19ம்தேதி) காலை சூரிய பிரபை, இரவு சந்திரபிரபை வாகனத்திலும், 8ம்நாளான (20ம் தேதி) ரத உற்சவமும், அன்றிரவு அஸ்வ (குதிரை) வாகனத்திலும் உலா நடக்கிறது.
9ம்நாள் (21ம்தேதி) காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. அடுத்து வரும் பிரம்மோற்சவம் நவராத்திரி பிரம்மோற்சவம் ஆகும். வருகிற அக்டோபர் 10ம் தேதி தொடங்கும் நவராத்திரி பிரம்மோற்சவம், 18ம்தேதி வரை நடக்கிறது.
பிரம்மோற்சவத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். திருமலை முழுவதுமே பக்தர் பெருக்கால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
|