தோலில் வரையப்பட்ட வண்ணப்படங்களை விளக்கின் ஒளியில், திரைச்சீலையில் பொருத்தி இயக்கிப் பேசிக் கலை நிகழ்த்துவது தோல்பாவைக் கூத்து. தோலில் கதைப் பாத்திரப் பாவைகளை உருவாக்கி நிறம் கொடுத்து விளக்கொளி நிழலில் அசைத்து நிகழ்ச்சியை நடத்துவதால் இக்கலை தோல்பாவைக் கூத்து எனப்படுகிறது. பாவைக் கூத்து எனப் பொதுவாக அழைக்கப்படும் இக்கலை தோல்பாவைக் கூத்து, தோல்பாவை நிழல் கூத்து, நிழலாட்டம், தோல் பொம்மலாட்டம் என வெவ்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இக்கலையானது இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகம், கேரளம், ஒரிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நிகழ்த்தப்படுகிறது. தமிழகத்தில் மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நிகழ்கிறது. இக்கலையானது இன்றைய நிலையில் நலிந்து கொண்டே வருகின்ற கலையாக மாறிவருகிறது.
|