|
||||||||
தொல்காப்பியரின் புணர்ச்சிபற்றிய கோட்பாடுகள் |
||||||||
தொல்காப்பியர் முதலில் தமிழின் எழுத்துக்கள் (ஒலியன்கள் - Phonemes) பற்றிப் பொதுவாகப் பேசுகிறார் (''நூன்மரபு'').
அடுத்து, அந்த எழுத்துக்கள் சொல்லில் பயின்றுவரும்போது, எந்த எழுத்துக்கள் சொல் முதலில் வரும் , இறுதியில் வரும் (ஒரு சொல்லின் முதல் அசையில் - Linguistic Syllable - தொடக்கமாக - Onset- அல்லது உச்சியாக - Peak - எந்த எழுத்து வரலாம், சொல்லின் இறுதி அசையில் எந்த எழுத்து அசை உச்சியாக - Peak - அல்லது ஒடுக்கமாக - Coda வரலாம்) என்பதைக் கூறுகிறார் .
அதுபோன்று சொல்லில் இடையில் எந்த மெய் எழுத்தோடு எந்த மெய் எழுத்து அடுத்து வரும் (Phonotactics - மெய்மயக்கம்) என்பதைக் கூறுகிறார். அதாவது ஒரு அசையின் இறுதி மெய் எந்த எழுத்தாக இருந்தால், அதற்கு அடுத்த அசையின் அசையின் முதல் எழுத்து எதுவாக இருக்கவேண்டும் என்பதை விளக்குகிறார். இந்த அடிப்படையே தமிழ் இலக்கணத்தின் உடம்படுமெய் கோட்பாட்டிற்கு அடிப்படையாகும் (''மொழிமரபு'') . தமிழின் மெய்மயக்க விதிகளைப் ''பாதுகாக்கும் பணி'' புணர்ச்சிக்கு உள்ளதை என்பதையும் இங்கு நாம் உணரவேண்டும்.
அதற்கு அடுத்து மேற்கூறிய எழுத்துக்களின் பிறப்பாக்கம்பற்றிப் (Phonetics) பேசுகிறார் (''பிறப்பியல்'') . மெய்மயக்கங்கள், பிற புணர்ச்சி விதிகள் ஆகியவற்றிற்கு மிக அடிப்படையானது எழுத்துக்களின் பிறப்பு இயக்கம்.
அதற்கு அடுத்த இயல்களில் எழுத்துக்கள் தொடர்களில் பயின்றுவரும்போது, சொற்களுக்கு இடையில் நிலவும் தொடர்பை விளக்குவதற்காகப் பயின்றுவரும் சந்தி அல்லது புணர்ச்சிபற்றிப் பேசுகிறார். மேலும் இரண்டு சொற்கள் இணைந்துவரும் தொகைகளிலும் புணர்ச்சியின் செயல்பாடுபற்றிக் கூறுகிறார்.
நிலைமொழியின் இறுதி எழுத்து , வருமொழியின் முதல் எழுத்து ஆகியவற்றின் அடிப்படையிலும் நிலைமொழியின் இலக்கணவகைப்பாடு, வருமொழியின் இலக்கணவகைப்பாடு ( Parts-of-Speech / Word Class Category) ஆகியவற்றின் அடிப்படையிலும் விளக்குகிறார்.( ''புணரியல் - குற்றியலுகரப் புணரியல்'')
தொடரில் அமையும் பெயர்களுக்கும் அத்தொடரில் வருகிற வினைகளுக்கும் இடையில் உள்ள தொடரியல் உறவுகள் (Syntactics relations) அடிப்படையையும் - அல்வழி , வேற்றுமை உறவுகளையும் - கணக்கில் கொண்டு புணர்ச்சியை விளக்குகிறார்.
ஆங்காங்கே சொற்களின் பொருண்மைக்கும் (Semantics) பங்கு உண்டு என்பதைக் கூறிச் செல்கிறார். அந்தச் சொற்களை இனம் கண்டு கூறுகிறார்.
இவ்வாறு எழுத்து, மெய்மயக்கம், சொல் வகைப்பாடு, தொடரியல் உறவு, பொருண்மையியல் அடிப்படை ஆகியவை எல்லாம் எவ்வாறு புணர்ச்சியில் பங்குகொள்கின்றன என்பதை விளக்குகிறார்.
இதில் மொழியசைக்கும் (Linguistic Syllable) முக்கியப் பங்கு உண்டு என்றாலும் அதை நேரடியாகச் சொல்லாமல், மெய்மயக்கங்களிலேயே அடக்கிக்கொள்கிறார்.
எனவே புணர்ச்சி என்பது ஒரு தொடர் அல்லது சொல்லின் பல்வேறு பண்புகளை அடிப்படையாகக் கொண்டது என்பதைத் தெளிவுபடுத்துகிறார். வெறும் எழுத்து அடிப்படையைமட்டும் சார்ந்தது இல்லை புணர்ச்சி என்பதைத் தொல்காப்பியர் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். மிகவும் வியக்கத்தக்க இலக்கணத் தெளிவு தொல்காப்பியருக்கு என்பது இதிலிருந்து நமக்குத் தெரியவருகிறது.
தொல்காப்பியரின் இந்த ஆய்வுமுறையும் இயல் வைப்பும் நம்மை வியக்கவைக்கிறது.
-தெய்வ சுந்தரம் நயினார்
|
||||||||
by Swathi on 20 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|