திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியை சிறப்பாக செய்து முடிப்பதற்காக காவல் துறையினர், சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் நவம்பர் 23-ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலின் மூலவர் சன்னிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகின்றன. இந்தத் திருவிழா பாதுகாப்புப் பணியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டி, காவல் துறையினர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு திருவண்ணாமலை நகர டிஎஸ்பி அண்ணாதுரை, பயிற்சி டிஎஸ்பி தங்கராமன், தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட போலீசார் மகா தீபம் ஏற்றும் 2,668 அடி உயர மலை மீது ஏறிச் சென்றனர்.
பின்னர், அங்குள்ள அண்ணாமலையார் பாதத்துக்கு சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து, அவர்கள் கீழே இறங்கி வந்து பாதுகாப்புப் பணிக்கான முதல்கட்டப் பணிகளைத் தொடங்கினர்.
|