பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, கர்நாடக முதல்வர் குமாரசாமி முன்னிலையில் தொடங்குகிறது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் கொண்டாடப்படும் தசரா விழா, வரலாற்று சிறப்புமிக்கது. மன்னர் ஆட்சிக் காலத்தில் இருந்தே கொண்டாடப்பட்ட விழாவாகும்.
இந்தியாவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, 1972-ம் ஆண்டு முதலே கர்நாடக அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூருவின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசூரனை வீழ்த்தியதை நினைவுக்கூறும் வகையில் தசரா விழா கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.
ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தசரா விழா 10-ந்தேதி தொடங்கி 19-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த ஆண்டு மழையால் குடகு, தட்சிணகன்னடா ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதால், தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
மைசூரு அருகே சாமுண்டி மலையில் குடிக்கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்வதன் மூலம் தசரா விழாவை இன்போசிஸ் அறக்கட்டளை தலைவியும், எழுத்தாளருமான சுதாமூர்த்தி தொடங்கிவைக்கிறார்.விழாவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜம்புசவாரி ஊர்வலம் 19-ந்தேதி நடக்கிறது. இதில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியை அர்ஜுனா யானை சுமந்தப்படி ஊர்வலமாக மைசூரு அரண்மனையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மண்டபத்தை சென்றடைகிறது. அதன் பிறகு மற்ற யானைகளும், அலங்கார வாகனங்களும் அணிவகுத்து செல்கின்றன.
இந்த ஊர்வலத்தில் குதிரைப்படையினர், போலீசார், பேண்டுவாத்தியக் குழுவினர், நடனக்குழுவினர் உள்பட பல்வேறு கலைக்குழுவினரும் கலந்துகொள்வார்கள்.
இது காணக்.கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதைக் காண கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலத்தினரும், வெளிநாட்டினரும் என சுமார் 5 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மைசூரு நகர் முழுவதும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இரவில் மைசூரு நகர் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
|