'தப்பு'என்னும் இசைக்கருவியினை இசைத்து ஆடப்படும் ஆட்டம் என்பதால் தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது. இக்கலையினைப் ‘பறையாட்டம்’ என்றும் அழைப்பர். இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் கோவில் நிகழ்ச்சிகளிலும், வாழ்க்கை வட்டச் சடங்குகளிலும், அரசியல் பிரசாரங்களிலும் தப்பாட்டம் நிகழ்த்தப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் வழக்கிலிருந்தாலும் தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இதனை நிகழ்த்தி வருகின்றனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், கல்லூரி மாணவர்களும் இக்கலையினைப் பயின்று நிகழ்த்தி வருகின்றனர், ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலையினைத் தற்போது பெண்களும் பயின்று ஆடுகின்றனர்.
|