|
||||||||
அமெரிக்காவில் தமிழிசையும், இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் உதவியும்: இரா.பொற்செழியன் |
||||||||
அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை: தங்கள் கல்வி, பணி, தொழில் மேம்பாட்டுக்காக அமெரிக்க மண்ணில் பல தமிழர்கள் குடியேறினார்கள். அவர்களுள் சென்ற நூற்றாண்டின் தமிழ் மறுமலர்ச்சி ஏற்றச் சிந்தனைகளை, பள்ளி, கல்லூரிப் பருவத்தில் மனதில் ஏற்றுக்கொண்ட பலரும் அடங்குவர். தனிவாழ்க்கை முன்னேற்றத்திற்காக நாடு பெயர்ந்தாலும், தாங்கள் வளர்ந்த பொழுது தங்களது மனதில் ஆழப்பதிந்த தமிழின எழுச்சி, முன்னேற்றம் குறித்த சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கத் திட்டமிடவும், செயல்படவும் தொடங்கப் பட்டதே அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை. அதன் பெரு நோக்கங்களுள் தலையானவை தமிழ் மொழி,தமிழர் மேம்பாடு, நலிந்த தமிழர்கள் மேம்பாடு, நலிந்த கலைவடிவங்களுக்கு உதவி, நலிந்த தமிழிசை வடிவ மீட்சி, இவற்றை அமெரிக்க மண்ணில் நிலை பெறச்செய்ய களப்பணிகள் ஆகியவை. பேரவையில் தமிழிசை: அதில் குறிப்பாகத் தமிழ் விழாக்களில் ஒவ்வொரு வருடமும் தலை சிறந்த பாரம்பரிய இசைக்கலைஞர்களை அழைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த தமிழ்க் கீர்த்தனைகளையும், பாடல்கள்களையும் பாடச் செய்து முழுமையான தமிழிசை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அறிமுகம்: 2003 &ஆம் ஆண்டு உண்மைக் கலைஞர்களைக் கொண்டு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் பங்கேற்பில் நடத்தப்பட்ட “நந்தன் கதை” எனும் புதின நாடகத்தில் நந்தனாராக அமெரிக்க வந்தார் ஆத்மநாதன் அய்யா அவர்கள். அவரின் இயல்பான இசைத் தோற்றமும், குரலில் இருந்த உறுதியான மிடுக்கும், தெளிந்த தமிழ் உச்சரிப்புடன் தமிழிசையைக் கேட்டவர்களுக்கு புதியதோர் தமிழிசை உணர்வு பெருகி தங்கள் தமிழ் வேட்கையுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. பின்னர் 2011 சார்லஸ்டன் பேரவைத் தமிழ் விழாவில் தமிழிசை நிகழ்ச்சி நடத்தி அனைவரையும் இசையால் மகிழ்வித்தார். அவ்வருடம் தமிழ்/தமிழர் பெருமை போற்றும் இனிமைத் தமிழ் மொழி எனும் குறுந்தகடை பேரவையின் வெளியீடாக அமெரிக்காவில் வளர்ந்த குழந்தைகளை வைத்தே பாடவைத்து வெளியிட்டார். அதன் பயனாய் அமெரிக்கக் தமிழ்க் குழந்தைகள் பாடி, தமிழ்/தமிழர் பெருமை போற்றும்நான்கு குறுந்தகடுகள் இதுவரை வெளியாகியுள்ளன. அவ்வருடம் முதல் பல அமெரிக்க மாணவர்களுக்குத் தமிழிசை கற்றுக்கொடுக்கிறார்.பலருக்கும் தமிழ் மொழியிலேயே இசையின் அடிப்படைப் பாடங்களையும் கீர்த்தனை களையும் கற்றுக்கொடுத்து அண்ணாமலை அரசர் காண நினைத்த தனித் தமிழிசை மரபை ஏற்படுத்தி உள்ளார். 2012 பால்டிமோர் தமிழ் விழாவில் அமெரிக்கக் குழந்தைகள் பாடும் முதல் தமிழிசை விழாவை வித்தூன்றி, வடிவமைத்து, சிறப்பாக நடத்தப் பெரிதும் உதவினார். அய்யாவின் மூலம் அமெரிக்காவில் தமிழிசைப் பயிர் மிகச் சிறப்பாக வளர்கிறது என்பதில் ஐயமில்லை. இசை கற்பிக்கும் இனிய பாங்கு: செவ்விசை என்பது எளிமையில் கற்க இயலாது எனவும், அதற்கான தனித்திறன்கள் படைத்தோர் மட்டுமே கற்க இயலும் என்ற எண்ணமே தமிழர்களுக்கு உள்ளது.இதை மாற்றும் விதமாய், இசை என்பது எல்லாருக்கும் உரித்தானது.விரும்புவோர் அனைவரும் ஆர்வமும்,முறையான பயிற்சி யும்இருந்தால் இசை விற்பன்னராகலாம் என நம்பிக்கையூட்டி, குழந்தைகள் முதல் பெரியோர் வரை பலரைப் பாடகர்களாக உருவாக்கியுள்ளார். தமிழ் சமூகத்தின் இசைக்கடமையும், இலக்கும்: ஆத்மநாதன்அய்யா அவர்கள் தன்னலம் கருதாமல் இசை கற்பவர்களுக்கு ஏற்றாற்போல் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக,இலாப நோக்கமின்றி இசை ஆசிரியப்பணியைச் செவ்வனே செய்து வருகிறார்.இவ்வாறு தமிழிசை வளர்க்கும் பெரு நோக்குடன் இருக்கும் இசை வல்லுனர்களை பயன்படுத்திக்கொண்டு, பெருமளவில் இசை கற்போர், கடல் போலப் பெருகவேண்டும்.செவ்வியல் சார்ந்த தமிழிசை என்பதை பெருமை மிகு அடையாளமாக அனைத்துக் குழந்தைகளும் கற்கின்ற நிலை வேண்டும்.இதனால் தமிழ் பாரம்பரிய இசையை இரசிக்கும் ஒரு மேம்பட்ட பெரும் சமூகமாக தமிழ்ச்சமூகம் மாறவேண்டும்.செவ்வியல் இசையையை பெருமளவில் போற்றுவதன் மூலம் ஒரு நல்ல இணக்கமான சமூகமாக நாம் உயர வாய்ப்புள்ளது.அவ்வாறு நல்ல தமிழிசைப் பயிரை அமெரிக்க தமிழர்கள் வளர்ப்பது போல் தமிழகத்தில் ஒரு தமிழிசை எழுச்சி வரவேண்டுமாயின் இதுவே நல்ல தருணம். தமிழிசை வளரவில்லை, மக்களுக்கு ஆர்வமில்லை போன்ற குறைபாடுகளைப் பேசிக்கொண்டிராமல், இந்த விழாக்கள் மூலம் தமிழிசை பாடுபவர்களை பெருக்கவேண்டும். தமிழிசை இரசிகர்களை, கேட்பவர்களை உருவாக்கவேண்டும். தமிழிசையை ஆதரித்துப் போற்றும் அமைப்புக்களை உருவாக்கவேண்டும்.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் தமிழிசை விழாக்கள் எடுப்பதை அந்தந்த ஊரிலுள்ள இசை ஆர்வலர்களும், தமிழார்வலர்களும், புரவலர்களும் கடமையாய்க் கருதி நிகழ்த்த வேண்டும்.இதை வடிவமைக்கவும்,வழிமுறைகளை வகுத்து சிறப்பான முறையில் தமிழிசை விழாக்கள் வெற்றிபெற ஆத்மநாதன் அய்யா போன்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அனைவரின் கடமை. அதற்கான ஒரு முன்னோட்டமாக, தமிழகத்தில் தமிழிசைக்கான அடித்தளமாக அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இந்த விழா அமையவேண்டுமென விழைகிறோம். அமெரிக்காவில் தமிழிசை பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து தமிழகத்தின் பல ஊர்களில் நடைபெறும் தமிழிசை விழாக்களில் கலந்துகொள்வதால் இசையின் மூலம் அமெரிக்க, தமிழக தமிழ் இளையோரிடையே ஒரு நட்புறவுப் பாலம் உருவாக வாய்ப் புள்ளது.ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நம் பண்ணிசை மீண்டும் செழித்து வளர்ந்து எளிமையான மக்களின் வாழ்விலும் ஒரு அங்கமாக மாறும் என்பதில் ஐயமில்லை! வாழ்க தமிழ் நெறி! வளர்க தமிழிசை! |
||||||||
by Swathi on 28 Jan 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|