|
||||||||
தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1 |
||||||||
தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 அறிமுகம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் முனைவர். பா. இறையரசன் அவர்கள் ஆவார். இளமைக்காலத்திலிருந்தே மதுகை தமிழ் மன்றம், தனித்தமிழ் தந்தை மறைமலையடிகள் மன்றம், தமிழ் மாலை மன்றம் போன்ற பல அமைப்புகளை அமைத்தும், தஞ்சாவூர் தமிழ் பேரவை, குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் பேரவை போன்ற அமைப்புகளின் மூலமாகவும் தமிழ் தொண்டாற்றி வருகிறார். தனித்தமிழ், இதழியல், வரலாறு போன்ற தளங்களில் தமிழை வளர்ப்பதோடு, தாய்மொழியோடு தமிழ் மக்கள் பிழைத்திருக்க வேண்டும் என்பதற்காகப் பெரும்பாடு பட்டவர். சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் போன்றவற்றை மக்களுக்குக் கொண்டு செல்வது, பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவருக்கு உதவுவது என்று தமிழின் வழி தமிழர் எழுச்சி பெற அயராது உழைத்து வருகிறார். தினமணி, தினத்தந்தி, கல்கி, ராணி போன்ற பல இதழ்களில் கதை, கவிதை, கட்டுரைகளை எழுதி வருகிறார். தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் பட்டிமன்றங்கள் மற்றும் பல உரைகளை நிகழ்த்தியுள்ளார். 17 நூல்களை இயற்றியுள்ளார். தமிழ் மீது கொண்ட காதலால் ‘சாமிநாதன்’ என்று பெற்றோர் இட்ட பெயரை ‘இறையரசன்’ என மாற்றிக் கொண்டார். தமிழ் மொழி: தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல, இனம் சார்ந்தது, நாடு சார்ந்தது, உலகம் சார்ந்தது. தமிழ் என்றாலே அன்பு, அறம், நேர்மை, உண்மை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது. ஒட்டுமொத்த உலக அறங்களைக் கொண்டது ‘தமிழ்’ என்கிறார் முனைவர் பா. இறையரசன் அவர்கள். இளமைக்காலம்: திருவையாறில் பிறந்த இவர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்ததாகக் குறிப்பிடுகிறார். இவரது தந்தை தமிழ் ஆசிரியராக பணியாற்றியதால் பல்வேறு ஊர்களுக்கு பணிமாறுதல் காரணமாகவும், பல்வேறு உரைகள் நிகழ்த்தவும் செல்வார். தந்தையுடன் தானும் உடன் சென்றதாகக் குறிப்பிடுகிறார் முனைவர் பா. இறையரசன் அவர்கள். பிறகு புதுமுக வகுப்பு (PUC) படித்தார். திருமலர் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் படித்தார். மாநில கல்லூரியில் முதுகலைத் தமிழ் படித்தார். தனிப்பட்ட முறையில் எம்ஃபில் படிப்பையும், முனைவர் பட்ட ஆய்வையும் செய்து முடித்தார். பாரதியாரின் இதழியல்: ‘தென்னாற்காடு மாவட்ட சோழர் கால கல்வெட்டுக்களில் தமிழ்ப்பெயர்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்திருக்கிறார். அதை வைத்து ‘குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர்கள்’ என்ற நூலையும் இயற்றியுள்ளார். மகாகவி பாரதியார் பணியாற்றிய இதழ்களைக் குறித்து இவரது முனைவர் பட்ட ஆய்வு இருந்தது. பாரதியாரைச் சிறந்த கவிஞராக மட்டுமே உலகிற்கு தெரியும். ஆனால் அவரைக் கவிஞராக மாற்றியதே அவர் பணியாற்றிய இதழ்கள் தான் என்கிறார் முனைவர் பா. இறையரசன் அவர்கள். வள்ளலாருக்கு அடுத்து உரைநடையை வளர்த்தவர் பாரதியார். பிறகு தான் திரு.வி.க போன்றோர் உரைநடையை வளர்த்தனர். மிகச்சிறந்த இதழியலை உருவாக்கியவர் பாரதியார். இதழ்களில் புதுமைகளைப் புகுத்தியவர் பாரதியார் என்கிறார் முனைவர் பா. இறையரசன் அவர்கள். களப்பணிகள்: பாரதியாரின் இதழ்கள் நூலாக வெளிவராத காலம் அது. எனவே இவர் முனைவர் பட்ட ஆய்வுக்காகப் பாரதியாரின் இதழ்களைத் தேடி எட்டையாபுரத்திற்கு சென்றார். பாரதியார் பிறந்த வீடு, பாரதியார் அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்குச் சென்று பாரதியாரின் இதழ்களின் நகல்களைக் கண்டறிந்தார். மேலும் புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்த வீடு, ஆவணக்காப்பகம் போன்ற இடங்களுக்கும் சென்று தரவுகளைத் திரட்டியுள்ளார். பல்வேறு நூலகங்களுக்கும் சென்றுள்ளார். பிரான்சு நாட்டிலிருந்த தமிழ் இதழ்களைக் கூட நண்பரின் உதவியால் பெற்றதாகக் குறிப்பிடுகிறார். விடுதலைக்கு முற்பட்ட இதழ்கள் எல்லாவற்றையும் தொகுத்துள்ளார். எழுத்துச் சீர்திருத்த மாநாடு: ஊடகங்கள் எல்லாமே தமிழின் வளர்ச்சிக்காக முழுமையாக செல்கின்றனவா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும் என வருந்துகிறார் பா. இறையரசன் அவர்கள். செம்மொழி, தமிழியக்கம் போன்ற தனித்தமிழ் இதழ்களிலும், ராணி, தினமணி, கல்கி போன்ற இதழ்களிலும் தொடர்ந்து எழுதி பலரின் பாராட்டைப் பெற்றார். சங்க இலக்கியத்திலிருந்து, தமிழ் அறிஞர்கள் வரை பல்வேறு ஆய்வுகளைச் செய்து அவற்றைக் கட்டுரைகளாகவும், தொகுப்புகளாகவும் வெளியிட்டுள்ளார். அவற்றுள் சில வெளிவராமல் உள்ளன என்றும் கூறுகிறார். கணினியில் தமிழ் வர வேண்டும் என்ற நோக்கில் 1986ம் ஆண்டு எழுத்துச்சீர்திருத்த மாநாட்டினை மிகப்பெரிய அளவில் நடத்தியதாகக் குறிப்பிடுகிறார். தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டிலும் இவருடைய பங்களிப்பு மிகப்பெரியது. இவர் வளரும் காலத்திலேயே பல அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும் பல அறிஞர்களைத் தானே நேரில் சென்று பார்த்ததாகவும் கூறுகிறார். அன்றைய தமிழ் அறிஞர்களில் பலர் பிற துறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்களுக்குக் குறைந்தது மூன்று மொழிகள் தெரியும் என்றும் கூறுகிறார். |
||||||||
by Lakshmi G on 14 Apr 2021 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|