புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்நூலகத்தில், தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் நேயர்களுக்கும் பயன்படக் கூடிய தமிழ்க் கலைக் களஞ்சியங்கள், பல்கலைக்கழகங்களின் வெளியீடுகள், பல்சமய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், இந்திய பேரிதிகாசங்களான வால்மீகி ராமாயணம், மகாபாரதம் மற்றும் கம்பன், இளங்கோவடிகள், பாரதி, பாரதிதாசன் உள்ளிட்டோரின் படைப்புகள், பல்வேறு பதிப்புகள், ஆய்வு நூல்களின் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. 250 ஆண்டுகளுக்கு முன் 1756-ம் ஆண்டு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம், பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பிய முதல் பதிப்பு, பல்வேறு கிடைப்பதற்கரிய பதிப்புகள், கம்பராமாயணத்தின் 10-க்கும் மேற்பட்ட பதிப்புகள் என பல முதல் பதிப்பு நூல்கள் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் இங்கு உள்ளன. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கூழங்கை தம்பிரான் எழுதிய நன்னூல் உரையை ஜெர்மனியில் கண்ட தாமோதரன் என்பவர், அந்த நூலை அச்சுப் பிரதிகள் இல்லாத காரணத்தினால் அதை கைப்பட எழுதி வெளியிட்ட புத்தகமும் இந்த காப்பகத்தில் உள்ளது.
நூலக முகவரி
பல்லடம் மாணிக்கம்,
தமிழ்நூல் காப்பகம்,
சேலம் நெடுஞ்சாலை,
விருத்தாசலம் – 606001:
செல்பேசி: 9443042344.
பல்லடம் மாணிக்கம் ஐயாவின் தமிழ் வாழ்க்கை
கோவையை அடுத்த பல்லடத்திற்கு அருகில் உள்ள சிற்றூரில் சாமியப்பா, வள்ளியம்மா ஆகியோரின் மகனாக 23.11.1936 இல் பிறந்தவர். சிற்றூரில் தொடக்கக் கல்வியை முடித்து,பல்லடத்தில் உயர்நிலைக் கல்வி கற்றவர். புலவர் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்(1962). ஆயிரம் பூ என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டவர். இந்நூல் பாவேந்தர்,கா.அப்பாத்துரையார் வாழ்த்துப் பெற்ற நூல். சென்னையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
1962 முதல் 1975 வரை இத் தமிழாசிரியர் பணி நீடித்தது. 1972 இல் விருத்தாசலத்தில் திலகவதி அம்மாவைத் திருமணம் செய்துகொண்டு இரண்டு மக்கட் செல்வங்களைப் பெற்றார். தேவி திரைப்படத்தில் திரைப்பாடல்கள் எழுதிப் புகழ்பெற்றவர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தத்துவக் கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கில் சிறப்புடையன. இசைமேதை தட்சணாமூர்த்தி அவர்கள் இப்படத்திற்கு இசையமைப்பாளர். இப்படத்திற்குத் துணை இசையமைப்பாளராக விளங்கியவர் திரு.சேகர்(இசையமைப்பாளர் இரகுமான் அவர்களின் தந்தையார்). டி.எம்.சௌந்தரராசன் பல பாடல்களைப் பாடினார். இப்படத்தில் சோ நடித்துள்ளார். இப்படப் பாடல்கள், இலங்கை, சிங்கப்பூர் வானொலிகளில் அடிக்கடி ஒலிபரப்பப்படுவது உண்டு. தேவி தேவி உன்னைத்தேடி அலைகிறேன்... தித்திக்கும் முத்தமிழே... என்னும் பாடல்கள் சிறப்புடையன. நடிகர்கள் ம.கோ.இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்), சிவாசி கணேசன், இயக்குநர் சிறீதர் உள்ளிட்டவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.
தமிழாசிரியர் பணியை விடுத்து விருத்தாசலத்தில் செங்கல் சூளை, வேளாண்மைத் தொழிலில் ஈடுப்பட்டவர். படித்த காலத்தில் நல்ல நூல்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அதன் பிறகு தாம் படித்த நூல்களைப் பாதுகாக்கும் எண்ணம் உண்டானது. அதன் பிறகு பலருக்கும் பயன்படப் பாதுகாப்போமே என நினைத்துப் பல நூல்களை வாங்கத் தொடங்கினார். நண்பர்கள் தங்களிடம் உள்ள முதன்மையான நூல்கள், ஆய்வேடுகளை வழங்கினர் இவ்வகையில் இந்த நூலகம் இன்று இலட்சக்கணக்கான அறிவுச் செல்வங்களைத் தாங்கி நிற்கின்றது.
பழமலை நாதரையும் அருள்மிகு கொளஞ்சியப்பரையும் வழிபடச் செல்வோர் தமிழ் நூலகத்தையும் பார்த்து வரலாம்.பேருந்து,தொடர்வண்டி இந்த ஊருக்கு உள்ளது. தொடர்பு முகவரி பல்லடம் மாணிக்கம் அவர்கள் தமிழ்நூல் காப்பகம், சேலம் நெடுஞ்சாலை, தமிழ்நகர்,விருத்தாசலம்-606 001 செல்பேசி: + 91 9443042344 தொலைபேசி : + 91 4143 231611 + 91 4143 230411
நன்றி - http://muelangovan.blogspot.com/