இன்றைய தமிழ் இலக்கணத்தில் பல சிக்கல்கள் தமிழ் நீடிக்கின்றன. இச்சிக்கல்களுக்கு இன்றைய தமிழ்மொழி ஆய்வாளர்கள் விடைகாணவேண்டும்.
விதிவிலக்குக்கள் என்று எளிமையாகக் கூறி, நம்மை நாமே அமைதிப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அது சரியில்லை. என்னைப்பொறுத்தமட்டில் ''விதிவிலக்கு'' என்பது இன்று நம்மால் அவற்றை விளக்கத் தேவையான விதிகளைக் கண்டறிய இயலவில்லை என்றே கொள்ளவேண்டும்.
அறிவியல் வளர்ச்சிப்படி ... (The Structure of Scientific Revolution - Thomas Khun) ஒரு கட்டத்தில் அறிவியலாளர்களால் விளக்க இயலாதவையெல்லாம் பொது விதிகளுக்கு ''விதிவிலக்காக'' புறமாக வைக்கப்படுகின்றன. ஆனால் அடுத்து வருகிற ஒரு அறிவியலாளர் முன்வைக்கிற ''பொதுவிதிகளில்'' முன்கூறப்பட்ட ''விதிவிலக்குக்களும்'' விளக்கமுடியும் என்று கூறும்போது, அறிவியல் வளர்ச்சி ஏற்படுகிறது.
இதுபோன்றதுதான் இலக்கணமும்! இதை தமிழ் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். ''இலக்கணப்போலி'' ''விதிவிலக்கு'' என்ற தொடர்களைப் ''பயன்படுத்தி'', அடுத்த கட்ட ஆய்வுக்குச் செல்லாமல் நின்றுவிடக்கூடாது.
வகுப்பறையில் ஒரு மாணவர் சிக்கலான வினா ஒன்றை எழுப்பினால், ஆசிரியர் அவனைப் பார்த்து ''இதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் ! அதிகப் பிரசங்கியாக இருக்காதே! நான் செல்வதைக் கேள்'' என்று உட்காரவைத்துவிடலாம்! ஆனால் கணினியுடன் இதுபோன்று நாம் சொன்னால், அது கேட்காது! ''விடை சொல்லிவிட்டுப் போ '' என்றுதான் கூறும்!
மேலும் எந்தவொரு மொழியும் - உயிரோட்டமுள்ள மொழியாக இருந்தால் - தொடர்ந்து மாறிக்கொண்டும் வளர்ந்துகொண்டுதானே இருக்கும்.; கருத்துப் புலப்படுத்தத் தேவைகளும் வளர்ந்துகொண்டுதானே இருக்கும். அதனால் புதிய இலக்கணக்கூறுகளும் தோன்றத்தானே செய்யும். அவற்றை எவ்வாறு முந்தைய இலக்கணங்கள்கொண்டு விளக்கமுடியும்?
குறிப்பாக, இன்றைய கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழும் இடம்பெற வேண்டுமானால், இலக்கணமாற்றங்களையும் வளர்ச்சிகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
தமிழ்க் கணினிமொழியியலில் ஈடுபடும்போது இலக்கணத்தில் பல வினாக்கள் எழுகின்றன! கணினியானது '' எனக்குத் தெளிவான விதிகளைக் கொடு'' என்று நம்மைக் கேட்கிறது! அதனிடம் '' விதிவிலக்கு என்று கொண்டு அமைதியாகிவிடு'' என்று நாம் கூறிவிடமுடியாது! இதன் பயன்.... இலக்கணத்தை மேலும் ஆழமாக நாம் ஆராய ... இலக்கணத்தெளிவு பெற ... நாம்''தூண்டப்படுகிறோம்''! இது நல்லதுதானே!
தமிழில் சொல்திருத்தி, சந்தித்திருத்தி, தொடரிலக்கணத் திருத்தி என்றெல்லாம் உருவாக்கவேண்டும் என்றால், தெளிவான தமிழ் இலக்கணம் நமக்குத் தேவை!
-
தெய்வ சுந்தரம் நயினார்
வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களுக்கு ''முற்காலம்'' என்பதை ''முன் + காலம்'' என்று கற்றுக்கொடுத்து, அதற்கான விதியாக ''முன் - முற்'' என்பதைக் கூறுகிறார் என்று கொள்வோம். பின்னர் மாணவர் ''முன் + பணம்'' என்பதை ''முற்பணம்'' என்று எழுதினால், ஆசிரியர் அதைத் தவறு என்று கூறுவாரா? சரியென்று கூறுவாரா?
-
-
-
Ramasamy Kandasamy
தெய்வ சுந்தரம் நயினார் என்னைப் பொறுத்தவரை முற்பணம் என்பதை ஏற்க முடியவில்லை.Acceptability is an important factor in grammar.இது போன்ற தரவுகளை விரிவாகத் திரட்டிப் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்.வினையெனப்படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங்காலை காலமொடு தோன்றும் என்னும் தொல்காப்பிய விதி ஒரு பொது விதி.இதற்கு விதிவிலக்கு என்பதே இல்லை.விதிவிலக்கு உள்ளவை பல. இவற்றிற்குத் துணை விதிகளை உருவாக்க வேண்டும்.
-
தெய்வ சுந்தரம் நயினார்
நன்றி பேராசிரியர் அவர்களே. ஒரு தொடர் இலக்கணவிதிகளுக்கு ஏற்ப அமைந்திருந்தாலும், அத்துடன் அம்மொழியைப் பேசும் சமுதாயமும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். Colourless green ideas sleep furiously - இது இலக்கணப்படி சரியாக இருந்தாலும் பயனரால் இத்தொடரின் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே தொடர் தவறு. இங்குத்தான் acceptability செயல்படுகிறது.அதாவது இலக்கணத்தோடு ஏற்புடைமையும் இருக்கவேண்டும். ஆனால் முற்பணம் என்பதில் இலக்கணம் சரியாகவே இருக்கிறது. கருத்திலும் தவறு இல்லை. ஆனால் வழக்கத்தில் இல்லை. அவ்வளவுதான். அதற்காக இத்தொடரைத் தவறு என்று கூறமுடியாது. இந்தச்சொல் தமிழ்ச்சமுதாயத்தில் தற்போதைய உருவாக்கம். ஆனால் முற்பகல், முற்போக்கு போன்றவை நிலவுவதால், முற்பணம் என்பதில் தவறு இல்லை. ஆனால் பழக்கத்தில் - வழக்கத்தில் - விதியை ஏதோ காரணங்களுக்காகச் செயல்படுத்தப்படாமல் உருவாகிய சொல் இந்தச் சொல் - முன்பணம். இந்த எடுத்துக்காட்டை மேலே கூறியுள்ள ஆங்கிலத்தொடர்தொடர்பான கருத்துடன் ஒப்பிடமுடியாது. இலக்கணமும் சரி. கருத்தும் சரி. இரண்டும் இச்சொல்லில் சரியே. அப்படியிருக்க நாம் ஏன் இதை ஏற்றுக்கொள்ளாமல் - விதியைப் பயன்படுத்தாமல் இருக்கிறோம்? இதுதான் இங்கு வினா! இவ்வாறு அனுமதிக்கத் தொடங்கினால், விதிகளுக்குப் புறம்பான சொற்களையெல்லாம் , ''ஏற்புடைமை'' என்ற பெயரில் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள். இதற்கு எல்லையே இருக்காது! இலக்கணமே தேவை இல்லை என்று ஆகிவிடும்.
-
முத்தையா சுப்பிரமணி
முன்பணம் என்பது இலக்கணப்படி முற்பணம் எனலாமெனினும் முன்பணம் என்றே சொல்கிறோம்.
முற்பணம் என்பதைத்தொடர்ந்து சொல்லிவந்தால், முப்பணம் எனத்திரியும். முன்பணம் என்பது திரியாயியல்பினது. ஒரு விதிக்கு உறழ்ச்சி ஏற்படுவதற்கு காரணமுண்டு. பொருளுணர்ச்சியே உரைகல்.
-
வேந்தன் அரசு
முன்+பணம் =முன்ப்பணம் என்றுதான் எழுதணும்.
முன்பணம் = munBanam.
எண்பது,ஒன்பது எனும் சொற்களில் 'ப'கரம் = ba
-
செயபாண்டியன் கோட்டாளம்
முன் + கால் = முன்னங்கால். முற்கால் என்று சொல்வதில்லை. ஒலியியலின்படி ஆராய்ந்தால், முன்காலம், முற்காலம், முன்னங்காலம் ஆகிய எதிலும் பிழையிருக்காது. முற்காலம் என்று சொல்வது சமூகத்தில் நிலைத்துவிட்டது. இது ஒரு சமூக வழக்கேற்பு (convention). அவ்வளவுதான்.
-
வேல்முருகன் சுப்பிரமணியன்
முற்காலம் என்ற சொல்லை எதிர்கொள்ளும்போது ன் + கா = ற்கா என்ற விதியை வகுப்பதிலே பிழை இருக்கிறது.
// ஐயா, இது விளங்கவில்லை.
வேற்றுமைத்தொகையில் அப்படிதான் ஆகும்
பொன் + கோவில் = பொற்கோவில்
அடிப்படையில் பேராசிரியர் தெய்வ சுந்தரம் நயினார் காணும் இந்த வேறுபாடு வேற்றுமைப்புணர்ச்சிக்கும் அல்வழிப்புண்ர்ச்சிக்கும் இடையேயான வேறுபாடேயாகும் என்பது என் கருத்து!
முன்மை + பணம் = முன்பணம் (பண்புத்தொகைப்புணர்ச்சி)
முன் + காலம் = முற்காலம். (முன் என்பது பெயர்ச்சொல் .. முன்னில் இருந்த காலம் என்பதன் தொகை எனலாம்..)
முன் + பணம் = முற்பணமேயாகும்! இதன் பொருள் முன்பணமாகாது. முன்பணம் என்பது பண்புத்தொகை. முற்பணம் என்பது வேற்றுமைத்தொகை!
-
-
வேல்முருகன் சுப்பிரமணியன்
ஓ புரிகிறது! அதாவது விதிகள் முதலில் எழுத்தைப்பொறுத்தவையல்ல. சொல்லின் வகையையும் புணர்ச்சிவகையையும் பொறுத்தவை, [பின்னர் எழுத்தைப்பொறுக்கலாம்]. சும்மா, எழுத்தைவைத்துமட்டும் புணர்ச்சிவிதிகளின் வெளிப்பாட்டை வகுக்கமுடியாது என்கிறீர்கள் சரியா?
அதாவது, முற்காலம் சரியென்றால் முன்பணம் பிழையானது (முற்பணம் என்றுதான் வரும்) என்கிற முடிவு பிழையானது!
-
செயபாண்டியன் கோட்டாளம்
ஆம்! ஆனால் சொல்வகையைப்பொறுத்து விதிகளை எழுதவியலாத இடங்களும் இருக்கின்றன. மாங்காய், மாவங்காய், மாக்காய்; புளிங்காய், புளியங்காய், புளிக்காய்; பலாங்காய், பலாவங்காய், பலாக்காய், ஆகியவற்றில் எது சரி, எது தவறு என்று எவ்வாறு முடிவுசெய்வது? இவற்றுளொன்றை தேர்ந…
-
வேல்முருகன் சுப்பிரமணியன்
ஆம்! சிலவற்றை தனிச்சொற்களாக ஏற்றுக்கொண்டு கடக்கவேண்டும். அது இலக்கணப்படுத்தலுக்கு எதிரான செயல் இல்லை. நீங்கள் சொல்வதுபோன்று வழக்காறு என்று எடுத்துக்கொண்டு கடக்கமுடியும்.
எங்கு பொதுமைக்கான இடம் இருக்கிறதோ அங்குதான் இலக்கணம் தேவை. இல்லை என்றாலும் கவலை…
-
-
-
தெய்வ சுந்தரம் நயினார்
தொல்காப்பியர் முதலில் தமிழின் எழுத்துக்கள் (ஒலியன்கள் - Phonemes) பற்றிப் பொதுவாகப் பேசுகிறார்.
அடுத்து, அந்த எழுத்துக்கள் சொல்லில் பயின்றுவரும்போது, எந்த எழுத்துக்கள் சொல் முதலில் வரும் , இறுதியில் வரும் (ஒரு சொல்லின் முதல் அசையில் - Linguistic Syllable - தொடக்கமாக - Onset- அல்லது உச்சியாக - Peak - எந்த எழுத்து வரலாம், சொல்லின் இறுதி அசையில் எந்த எழுத்து அசை உச்சியாக - Peak - அல்லது ஒடுக்கமாக - Coda) வரலாம் என்பதைக் கூறுகிறார்.
அதுபோன்று சொல்லில் இடையில் எந்த மெய் எழுத்தோடு எந்த மெய் எழுத்தோடு அடுத்தடுத்து வரும் (Phonotactics - மெய்மயக்கம்) என்பதைக் கூறுகிறார்கள். அதாவது ஒரு அசையின் இறுதி மெய் எந்த எழுத்தாக இருந்தால், அதற்கு அடுத்த அசையின் அசையின் முதல் எழுத்து எதுவாக இருக்கவேண்டும் என்பதை விளக்குகிறார். இந்த அடிப்படையே தமிழ் இலக்கணத்தின் உடம்படுமெய் கோட்பாட்டிற்கு அடிப்படையாகும்.
அதற்கு அடுத்து மேற்கூறிய எழுத்துக்களின் பிறப்பாக்கம்பற்றிப் (Phonetics) பேசுகிறார்.
அதற்கு அடுத்த இயல்களில் எழுத்துக்கள் தொடர்களில் பயின்றுவரும்போது, சொற்களுக்கு இடையில் நிலவும் தொடர்பை விளக்குவதற்காகப் பயின்றுவரும் சந்தி அல்லது புணர்ச்சிபற்றிப் பேசுகிறார். மேலும் இரண்டு சொற்கள் இணைந்துவரும் தொகைகளிலும் புணர்ச்சியின் செயல்பாடுபற்றிக் கூறுகிறார்.
நிலைமொழியின் இறுதி எழுத்து , வருமொழியின் முதல் எழுத்து ஆகியவற்றின் அடிப்படையிலும் நிலைமொழியின் இலக்கணவகைப்பாடு, வருமொழியின் இலக்கணவகைப்பாடு ( Parts-of-Speech / Word Class Category) ஆகியவற்றின் அடிப்படையிலும் தொடரில் அமையும் பெயர்களுக்கும் அத்தொடரில் வருகிற வினைகளுக்கும் இடையில் உள்ள தொடரியல் உறவுகள் (Syntactics relations) அடிப்படையிலும் - அல்வழி , வேற்றுமை உறவுகளையும் - கணக்கில் கொண்டு புணர்ச்சியை விளக்குகிறார்.
ஆங்காங்கே சொற்களின் பொருண்மைக்கும் (Semantics) பங்கு உண்டு என்பதைக் கூறிச் செல்கிறார். அந்தச் சொற்களை இனம் கண்டு கூறுகிறார். இவ்வாறு எழுத்து, மெய்மயக்கம், சொல் வகைப்பாடு, தொடரியல் உறவு, பொருண்மையியல் அடிப்படை ஆகியவை எல்லாம் எவ்வாறு புணர்ச்சியில் பங்குகொள்கின்றன என்பதை விளக்குகிறார். இதில் மொழிசைக்கும் (Linguistic Syllable) முக்கியப் பங்கு உண்டு என்றாலும் அதை நேரடியாகச் சொல்லாமல், மெய்மயக்கங்களிலேயே அடக்கிக்கொள்கிறார்.
எனவே புணர்ச்சி என்பது ஒரு தொடர் அல்லது சொல்லின் பல்வேறு பண்புகளை அடிப்படையாகக்க கொண்டது என்பதைத் தெறிவுபடுத்துகிறார். வெறும் எழுத்து அடிப்படையைமட்டும் சார்ந்தது இல்லை புணர்ச்சி என்பதைத் தொல்காப்பியர் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். மிகவும் வியக்கத்தக்க இலக்கணத் தெளிவு தொல்காப்பியருக்கு என்பது இதிலிருந்து நமக்குத் தெரியவருகிறது.
-
Krishna Reddy Anban
தெய்வ சுந்தரம் நயினார் தொல்காப்பியர் ஆழ்ந்தகன்றநுண்ணியர் என்பதை நன்கு விளக்கியிருக்கிறீர்கள்.இவ்வகையான நுண்மாண்நுழைபுலம் இருந்தால் மட்டுமே நீங்கள் எழுப்பியுள்ள புணர்ச்சி வேறுபாடுகள் போன்றவற்றைப் புரிந்து கொள்ளவும் விளக்கவும் முடியும். மேலோட்டமான மொழியறிவு போதாது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
-தெய்வ சுந்தரம் நயினார்
|