நாடகத்துறைப் பேராசிரியர்... நாடகத்துறையில் தனக்கென்று ஒரு தனித்துவச் சிறப்பை ஈட்டியவர்.. திரைத்துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்திவருபவர்... முற்போக்குச் சிந்தனையாளர்... தனிமனித வாழ்க்கையிலும் சமூகச் செயல்பாடுகளிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கிறவர்... தனது கொள்கைகளையும் நேர்மையையும் பாதிக்கிற எவ்வித விட்டுக்கொடுப்பையும் எப்போதும் செய்துகொள்ளாதவர்... இவர்தான் பேராசிரியர் மு. இராமசாமி அவர்கள்!
இவர் முதுகலைத் தமிழ் படிப்பில் (1971-73) பாளையங்கோட்டை தூயசவேரியர் கல்லூரியில் என்னுடைய வகுப்புத்தோழர் ... மதுரைப் பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி மறைந்த பெரும்பேராசிரியர் மு. முத்துச்சண்முகனார் அவர்களின் உருவாக்கம்
பாளையங்கோட்டை தூயசவேரியர் கல்லூரியில் தமிழ் முதுகலை (1971-1973) படிப்பிலிருந்து எங்களது நட்பு தொடங்கி, தற்போது 45 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. . மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேரா. முத்துச்சண்முகம் அவர்களிடம் முனைவர் பட்ட ஆய்வுக்கு நான் விண்ணப்பிப்பதற்குத் துணையாக என்னுடன் வந்தார். என்னைவிட மதிப்பெண் அவருக்கு அதிகம் . எனவே மு.ரா. வையே விண்ணப்பிக்கும்படி பேராசிரியர் கூறினார். எனக்கு இடம் கிடைக்காதே என்பதற்காக வேண்டாம் என்று மறுத்த அவரைக் கட்டாயப்படுத்தி, பேராசிரியரிடம் இணையச் சொன்னேன். பின்னர் மு.ரா. பேராசிரியரின் செல்லப்பிள்ளை ஆனார்.
தோற்பாவைக்கூத்தில் முனைவர் பட்டம்.. நாட்டுப்புறவியல், நாடகக்கலை இரண்டிலும் இன்று தலைசிறந்த பேராசிரியர் ... நடிகரும்கூட. அநீதியையோ அநியாயத்தையோ கண்டுவிட்டால், பொங்கி எழுவார். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய அவர் பின்னர் தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறையின் தலைவரானார். நிஜநாடக இயக்கக்குழுவைத் தோற்றுவித்து, இன்றுவரை நடத்திவருகிறார். முற்போக்குச் சிந்தனையாளர். அவரது துணைவியார் மறைந்த பேரா. திருமதி செண்பகம் அவர்கள் சிறந்த ஒப்பிலக்கிய ஆய்வாளர்.