பழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 21ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திர நாள், தமிழ்க்கடவுள் எனப் போற்றப்படும் முருகப் பெருமானுக்கு உகந்த தினம் ஆகும். அறுபடைவீடுகள் மட்டுமின்றி, எல்லா முருகப் பெருமான் ஆலயங்களிலும், பங்குனி உத்திர நாள் பெருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது.
அறுபடை வீடுகளில் ஒன்றான, திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
வள்ளி - தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தின் முன்பு மத்தளம் உள்ளிட்ட வாத்திய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து சூரியன், வளர்பிறை நிலவு, மயில், வேல், சேவல் மற்றும் பூஜைப் பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடி, பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க ஏற்றப்பட்டது.
சாமி சப்பரத்தில் பட்டக்காரர் மண்டபத்தில் எழுந்தருளினார். இரவில், சன்னதி வீதி, கிரிவீதிகளில் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
20-ந் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் இரவு 7.45 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனி உத்திர தேரோட்டம் 21ம் தேதி நடக்க உள்ளது. பங்குனி உத்திர நாளின் முதலாம் நாளிலேயே பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர்.
இதே போல் இதர அறுபடைவீடுகள் முருகன் ஆலயங்களிலும் பங்குனி உத்திரப் பெருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
|