நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன.
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா 10ம் தேதி தொடங்கியது. இந்த விழாவின் 9 வது நாள் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
விழாவின் 10வது நாள் விஜயதசமி ஆகும். இதையொட்டி, விழா நடக்கும் 9 நாட்களிலும் வீடுகளில் கொலு வைப்பது வழக்கத்தில் உள்ளது. முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை வேண்டியும் வழிபாடுகள் நடப்பது வழக்கம்.
நவராத்திரியின்போது பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவராத்திரியின் முக்கிய அம்சமே, கொலு வைப்பது ஆகும்.
3 முதல் 9 படிகள் என அவரவர் வசதிக்கு ஏற்ற படி அமைத்து, கொலு பொம்மைகளை அலங்கரிப்பார்கள். இதையொட்டி தற்போது கொலு பொம்மைகள் விற்பனை தொடங்கி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலின் வடிவீஸ்வரம், கோட்டார், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை கடைகள் சாலையோரம் அமைக்கப்பட்டு உள்ளன.
கடைகளிலும் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. தசாவதாரம், திருமணம், அறுபடை வீடு, அஷ்டலஷ்மி, ஆண்டாள் திருமஞ்சனம், கிருஷ்ண லீலை, சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி, விஸ்வரூபம், வளைகாப்பு செட் பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் என வகை வகையான கொலு பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.
மண்ணாலான சிலைகள் மட்டுமின்றி, சார்ட் பேப்பர், காகிதக் கூழ், பிளாஸ்ட் ஆப் பாரிஸ் ஆகியவற்றில் செய்யப்பட்ட சிலைகளும் உள்ளன. பொம்மைகள் ரூ.50 ல் இருந்து வ ரூ.2000 வரை உள்ளன. செட் பொம்மைகள் ரூ.500 தொடங்கி விற்பனைக்கு உள்ளன.
|