கடந்த 2010–ம் ஆண்டு ரஸ்யாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன் ஷிப் போட்டியில், இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரரும், ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றவருமான சுசில்குமார் கலந்து கொண்டு இறுதி போட்டியில் வென்று தங்கப்பதக்கம் வென்றார். உலக மல்யுத்த போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும்.
இந்த நிலையில் 2010 உலக மல்யுத்த சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் தோற்க என்னிடம் பேரம் சிலர் பேசியதாக சுசில்குமார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, உலக மல்யுத்த சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டிக்காக நான் தயாராகி கொண்டிருந்த போது சிலர் வந்தனர். அவர்கள் என்னிடம் பேச வேண்டும் என்றனர். இறுதிப்போட்டியில் நான் தோற்க வேண்டும் என்றும் அதற்காக சில கோடி ரூபாய்கள் தருவதாக ஆசை காட்டினர். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்தப்போட்டி ரஷியாவில் நடந்ததால் இறுதிப் போட்டியில் அவர்களின் வீரர் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினர். ஒரு மல்யுத்த வீரருக்கு அவர்கள் சொன்ன பணம் அதிகமானது. ஆனால் அதற்கு நான் ஆசைப்படவில்லை. பணம் எனக்கு ஒரு பொருட்டல்ல. அவர்களின் பேரத்துக்கு மறுத்து இறுதிப்போட்டியில் கவனம் செலுத்தி தங்கம் வென்றேன் என அவர் தெரிவித்தார்.
|