|
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மருத்துவர் கே.இளவரசன் |
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மருத்துவர் கே.இளவரசன் டெல்லியில் பணி: இந்தியத் தலைநகர் புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் தமிழர் ஒருவர் சித்த மருத்துவராக பணிபுரிவது தமிழர்களின் பெருமைகளில் தலையாயது ஆகும். இத்தகைய பெருமையைத் தந்துள்ளவர் மருத்துவர் இளவரசன் அவர்கள் ஆவார். இவர் இந்திய ஜனாதிபதி மாளிகையில் ஆயுஷ் நல சிகிச்சையகத்தில் சித்த மருத்துவ ஆலோசகராக பணிபுரிகின்றார். இங்குள்ள ஆயுஷ் நல சிகிச்சையகம் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி, ஹோமியோபதி, யோகசிகிச்சை முதலியவற்றை ஒருங்கே கொண்டுள்ளது. இவ்வமைப்பு 2015 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியில் மருத்துவர் இளவரசன் அவர்கள் சேர்வதற்கு முன் டெல்லியில் மூத்த சித்த மருத்துவ ஆய்வாளராக பணிபுரிந்துள்ளார். இங்கு பணிபுரிந்த போது தமிழ்ச்சங்கங்கள் மற்றும் பிற தமிழ் அமைப்புகளின் மூலம் இவருக்குத் தமிழர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்குப் பின்பே குடியரசுத்தலைவர் மாளிகையில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். சிகிச்சை முறைகள்: ஆயுஷ் நல சிகிச்சையகத்தில் மருத்துவர் இளவரசன் அவர்கள் பத்திற்கும் மேற்பட்ட சித்த மருத்துவ புற மருத்துவ முறைகளைச் சிகிச்சை முறைகளாகப் பயன்படுத்துகின்றார். அவற்றில் வர்ம மருத்துவம், ஒத்தடம், தொக்கணம், மஞ்சள்கொம்புச்சுட்டிகை போன்றவை அடங்கும். மருத்துவர் இளவரசன் அவர்கள் இங்கு ஆண் நோயாளிகளுக்கான மருத்துவராக பணிபுரிகின்றார். சித்த மருத்துவத்தில் அக மருத்துவத்தைக் காட்டிலும் புற மருத்துவம் பரவலாக இங்கு மேற்கொள்ளப்படுகின்றது. பெரும்பாலும் வர்ம மருத்துவம், யோக முறைகள், ஆயுர்வேத பஞ்சகர்மா போன்றவை சிகிச்சை முறைகளாக உள்ளன. ஆயுஷ் நல சிகிச்சையகம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படுகின்றது. வெளி மருத்துவ நோயாளிகளுக்கான மருத்துவமனையாக அமைந்துள்ளது. மருந்துகள் இலவசமாகப் பெறுவதாகவும் சிகிச்சை முறைகள் மட்டும் கட்டணமுறையாகவும் உள்ளதைக் காணலாம். சிறப்பாகக் குடியரசுத்தலைவர் மாளிகையிலுள்ள நபர்களுக்காக மட்டும் இயங்கும் சிகிச்சையகமாக இம்மருத்துவமனை அமைந்துள்ளது. பிற சிகிச்சையகங்கள்: டெல்லி தமிழ்ச் சங்கம் பொது மக்களுக்கு சிகிச்சையளிக்க சித்த மருத்துவத்திற்குத் தனியிடம் ஒதுக்கியுள்ளது. இங்கு மாதம் இருமுறை சனிக்கிழமைகளில் பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது. இதைத்தவிர டெல்லியில் பிற இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சையகங்கள் உள்ளன. இங்கு அனைத்து இந்திய ஆயுர்வேத நிறுவனம் இயங்கிவருகின்றது. இந்நிறுவனத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சையகம் செயல்படுகின்றது. இச்சிகிச்சையகத்தில் வாரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9 முதல் 1 மணி வரை சித்த மருத்துவ சிகிச்சையளிப்பதைக் காணலாம். இங்குப் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கோவிட்-19 சிகிச்சை: முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் டெல்லியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் புலனக்குழுக்களின் வாயிலாக ஆலோசனைகளைத் தரத் தொடங்கியுள்ளார் மருத்துவர் இளவரசன் அவர்கள். பின்பு அங்குள்ள முதியோர்கள் மற்றும் ஆர்வமுடையோர்க்கும் யோகாசன முறைகள் போன்றவற்றின் மூலம் நோய் பயத்தை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும் குடியரசுத்தலைவர் மாளிகையிலுள்ள சிகிச்சையகத்திலும் பிற இடங்களிலும் நிலவேம்பு சூரணம், கபசுர சூரணம், ஆடாதொடை சூரணம் போன்றவற்றை மருந்துகளாகத் தந்துள்ளார். இதைத்தவிர டெல்லியில் நோய் தாக்குதலில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட இந்திரபுரி பகுதியில் தங்கி அம்மக்களுக்கு மருத்துவர் இளவரசன் அவர்கள் சிகிச்சை அளித்துள்ளார். இங்கும் சித்தமருத்துவ கஷாயங்களை மருந்தாகப் பரிந்துரைத்துள்ளார். டெல்லியில் தோட்டக்கலைத்துறை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எண்ணிச் செயலாற்றியுள்ளார். மருத்துவர் இளவரசன் அவர்களின் இத்தகைய நற்பணிகளுக்குப் பலரும் ஊக்கமளித்து உதவியுள்ளனர். ராஷ்ரபதி பவன் முதல் நிர்மால் பவன் வரை கபசுர குடிநீர் வழங்கியுள்ளது இவரின் பெருமைகளில் ஒன்றாகும். பிற தமிழ்ச்சங்கங்களில் சித்த மருத்துவம்: டெல்லி தமிழ்ச்சங்கம் சித்த மருத்துவத்திற்கு இடமளித்து உதவியது போல் உலகின் பிற தமிழ்ச்சங்கங்களும் சித்த மருத்துவத்தை வளர்க்க உதவ வேண்டும் என்பது மருத்துவர் இளவரசன் அவர்களின் நோக்கமாக உள்ளது. இதற்காக சமூக வலைத்தளங்களில் பல பதிவுகளைப் பதிவிட்டுள்ளார். இப்பதிவுகளைக் கண்ட முன்னாள் ஐதராபாத் தமிழ்ச்சங்க அலுவலர் ஒருவர் மருத்துவர் இளவரசன் அவர்களிடம் தங்கள் தமிழ்ச்சங்கத்திற்கு சித்த மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று தொலைபேசி வாயிலாக அணுகியுள்ளார். எனவே அங்கு கொரோனா காலத்தில் ஆலோசனைகளை மருத்துவர் இளவரசன் அவர்கள் தந்துள்ளார். இதைத்தவிர மும்பை தமிழ்ச்சங்கம், கல்கத்தா தமிழ்ச்சங்கம், குஜராத் போன்ற இடங்களிலும் சித்த மருத்துவத்தின் மூலம் மருத்துவர் இளவரசன் அவர்கள் கொரோனா விழிப்புணர்வு ஆலோசனைகளையும் கபசுர நீர் பயன்பாட்டினையும் வழங்கியுள்ளார். தெற்குச்சூடான் வரை கபசுரநீர் பயன்பாட்டை மருத்துவர் இளவரசன் அவர்கள் எடுத்துச்சென்றிருப்பது பாராட்டத்தக்கதாகும். தற்போது ஆப்பிரிக்காவிற்கு இந்திய அரசின் மூலம் கபசுர சூரணம் தரும் பணிகள் மருத்துவர் இளவரசன் அவர்கள் வாயிலாக நடைபெற்று வருகின்றன. கோவிட்-19 காலத்தில் மருத்துவர் இளவரசன் அவர்கள் பலருக்கும் உதவி சித்த மருத்துவத்தை முன்னெடுத்துச் சென்றிருப்பது சிறப்பு வாய்ந்த செயலாகும். மருத்துவர் இளவரசன் அவர்கள் இதனைக் கூட்டு முயற்சியின் வெற்றியாகக் கருதுவது இங்குக் குறிப்பிடத்தகுந்தது. பிறநாடுகளில் சித்த மருத்துவம்: சித்தமருத்துவம் இந்தியாவில் தோன்றி உலகளவில் வளர்ச்சியுறும் சிறப்பு வாய்ந்த தொன்மையான மருத்துவ முறைகளில் முக்கியமானதாக உள்ளது. துபாய், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பலநாடுகளில் தமிழர்கள் வசிக்கின்றனர். சுருங்கக்கூறின் தமிழர்கள் சென்று வசிக்காத நாடுகள் அரிதாக உள்ளன என்று கூறலாம். எனவே தமிழர்கள் தாம் வாழும் இடங்களில் தமிழின் கலைகளோடு மட்டுமில்லாமல் தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தையும் உலகின் அனைத்து இடங்களிலும் கொண்டுசெல்ல வேண்டும். அப்பொழுதே சித்த மருத்துவம் தழைத்தோங்கும். கோவிட்-19 காலத்தில் சித்த மருத்துவ கஷாயங்களின் மூலம் சித்த மருத்துவம் பிற நாடுகளிலும் அறியப்படத் தொடங்கியுள்ளது என்பது திண்ணமாகும். வர்ம மருத்துவ பயன்பாடு: மருத்துவர் இளவரசன் அவர்கள் கொரோனா சூழலில் வர்ம மருத்துவத்தையும் சிகிச்சைமுறையாகக் கையாண்டுள்ளார். வர்ம புள்ளிகளின் வாயிலாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளார். வர்மம் சித்த மருத்துவத்தின் புறமருத்துவ முறையோடு தொடர்புடையது. இவ்வாறு வர்மத்தில் சிகிச்சையளித்தலோடு சுகாதார செயல்பாடுகளையும் நோயாளிகளுக்குக் கற்றுத்தருகின்றார். மேலும் வர்ம மருத்துவத்தின் மூலம் ஆட்டிஸம் எனப்படும் மனவளர்ச்சி நோய் பாதித்த குழந்தைகளுக்கு மருத்துவர் இளவரசன் அவர்கள் சிகிச்சை அளித்துள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும். டெல்லி அரசின் உதவி: டெல்லி ஆயுஷ் அமைச்சகம் மூலம் சித்த மருத்துவ சிகிச்சையை கொரோனா சூழலில் மேற்கொள்ள டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்கீழ் ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி போன்றவையும் அடங்கியுள்ளது. இம்மருத்துவங்களோடு சித்த மருத்துவ முறையும் பயன்படுத்தப்படுகின்றது. டெல்லியில் சித்த மருத்துவம் வளர்ச்சியடைந்துள்ளது சிறப்பிற்குரியதாகும். |
||||||||
by Lakshmi G on 21 Jan 2021 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|