|
||||||||
‘மக்களைக் காக்கும் சித்த மருத்துவம்’- டாக்டர் ஜே. ஜோசப் தாஸ் |
||||||||
‘மக்களைக் காக்கும் சித்த மருத்துவம்’- டாக்டர் ஜே. ஜோசப் தாஸ் சித்தர் மொழி: பதினெண்சித்தர்கள் பல வாழ்வியல் முறைகளையும் உணவு முறைகளையும் வலியுறுத்தியுள்ளனர். இவர்களுள் தேரையர் சித்தரும் ஒருவராவார். இவர், “வாழையிளம் பிஞ்சொழிய கனியருந்து செய்யோன்” என்று கூறியுள்ளார். அதாவது வாழைப்பழத்தை விட அதனுடைய பிஞ்சான வாழைக்காயே உடலுக்கு நல்லது என்று கூறுகின்றார் தேரையர். இதே பொருளினை குணப்பாடம் மூலிகைப் புத்தகத்தில் காண முடிகின்றது. அதன்படி வாழைப்பிஞ்சினை சமைத்துச் சாப்பிடுவதன் மூலமாக மூலக்கடுப்பு, வயிற்றுப்புண், நீரிழிவு போன்ற நோய்கள் குணமாகும் என்பதைக் காணலாம். இக்கருத்து தேரையச் சித்தரின் கருத்தோடு ஒப்புமையாக உள்ளது. வாழைப்பிஞ்சிலுள்ள நார்ச்சத்து நன்மை பயக்கும் என்பதால் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே தேரையர் சித்தரின் வாய்மொழியாக உள்ளதைக் காணலாம். அறிமுகம்: டாக்டர் ஜோசப் தாஸ் அவர்கள் சிறந்த சித்த மருத்துவராகவும் மருத்துவ பேராசிரியராகவும் உள்ளார். இவர் அல்லோபதி மருத்துவத்தில் மருத்துவப் பட்டமும் சித்த மருத்துவத்தில் மருத்துவப் பட்டமும் முனைவர் பட்டமும் உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் பாளையங்கோட்டை மாணவர்களிடத்திலும் மக்களிடத்திலும் மிகவும் பரிச்சயமானவராக உள்ளார். சித்த மருத்துவத்தின் மீது மிகவும் ஈடுபாடு கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகள் புரிந்து மாணவர்கள் பலருக்கும் முன்னோடியாகத் திகழ்கின்றார். இவர் ஆங்கில அல்லோபதி மருத்துவத்தில் பட்டம் பெற்து பின் சித்த மருத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டு சித்த மருத்துவராக உயர்ந்துள்ளார். சித்த மருத்துவத்தில் ஈடுபாடு: ஜோசப் தாஸ் அவர்கள் 1970 ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அங்கு இரண்டு ஆசிரியர்கள் முன்னோடியாகவும் பக்கபலமாகவும் அமைந்திருந்தனர். டாக்டர் குருசாமி என்பவரும் நாவலர் சோம சுந்தர பாரதியின் மகள் டாக்டர் லலிதா என்பவரும் இவருடைய ஆசான்களாக அமைந்திருந்தனர். இவ்விருவரும் ஜோசப் தாஸ் அவர்களுக்கு ஊக்கம் தருபவர்களாக இருந்தனர். இவர்களுள் டாக்டர் லலிதா அவர்களிடம் ஜோசப் தாஸ் அவர்கள் ஆராய்ச்சி உதவியாளராக பணிபுரிந்தார். பணிபுரிந்த சமயத்தில் பல வியக்கத்தக்கச் சோதனைகளைச் செய்து கொண்டிருந்தார். ஜோசப் தாஸ் அவர்கள் ஆராய்ச்சி உதவியாளராக பணிபுரிந்த சமயத்தில் அவருக்குப் பல நல்ல வேலைவாய்ப்புகள் வந்தன. எனினும் தன் ஆசிரியருக்கு பணிபுரிவதையே அவர் விரும்பினார். இச்சமயத்தில் ஜோசப் தாஸ் அவர்களுக்குச் சித்த மருத்துவத்தில் ஆர்வமும் புரிதலும் வரத் தொடங்கின. தன் குடும்பச்சூழல் காரணமாகப் பாளையங்கோட்டை கல்லூரியில் பணிபுரியத் தொடங்கினார். ஆய்வு உதவியாளராக இருந்த அனுபவத்தினால் இப்பணி இவருக்கு ஆர்வமாகவும் எளிதாகவும் அமைந்தது. இன்றைய காலத்தில் மிகப் பிரபலமான சித்த மருத்துவர் பலருக்கும் ஆசிரியராக அமைந்த பேற்றினை ஜோசப் தாஸ் அவர்கள் இதன்மூலமாகப் பெற்றார். இங்கு பணியாற்றியபோது இவருடன் பணியாற்றிய பேராசிரியர்கள் பலரும் திறன் வாய்ந்தவர்களாக இருப்பதைக் கண்டார். இவருடைய சித்த மருத்துவ அறிவு இங்கு மேலும் விரிவடையத் தொடங்கியது. தனக்குச் சிறந்த மாணவர்கள் கிடைத்த காரணத்தினால் மட்டுமே சித்த மருத்துவத்தில் முழு ஈடுபாடும் ஆற்றலும் தனக்கு ஏற்பட்டது என ஜோசப் தாஸ் அவர்கள் விவரிக்கின்றார். ஆராய்ச்சிக்கு உதவுதல்: டாக்டர் ஜோசப் தாஸ் அவர்கள் 1977 ஆம் ஆண்டில் அவருடைய ஆசிரியர் லலிதா காமேஷ்வரன் அவர்களிடம் ஆராய்ச்சி உதவியாளராக பணிபுரிந்துள்ளார். அப்போது இவருடைய ஆசிரியர் லலிதா அவர்கள் புரிந்த உதவிகள் ஏராளமானவை ஆகும். குறிப்பாகப் பொருளாதாரத் தேவையில் இவருடைய உதவி மிகவும் அளப்பரியதாகும். பொய் கூறி பணம் கேட்டாலும் லலிதா அவர்கள் புன்முறுவலுடன் பொய்யெனத் தெரிந்தாலும் காட்டிக்கொள்ளாமல் உதவிசெய்வார். அன்றைக்கு அவசரத் தேவைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய டாக்டர் லலிதா அவர்களை ஜோசப் தாஸ் அவர்கள் இன்றளவும் நன்றியுடன் எண்ணுபவராக உள்ளார். தன்னுடைய ஆசிரியர் தனக்குத் தேவைகளின் போது உதவியதைப் போல இன்று தன்னிடம் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஜோசப் தாஸ் அவர்கள் பெரும் உதவிகளைச் செய்கின்றார். மேலும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பவராகவும் உள்ளார். தங்கப்பதக்கம் பெறுதல்: ஜோசப் தாஸ் அவர்கள் ஆராய்ச்சி உதவியாளராக இருந்த சமயத்திலேயே ஆய்வுக்கட்டுரைகளைத் தனியாக வெளியே அனுப்பும் செயல்களையும் செய்துள்ளார். அதன்படி ஜோசப் தாஸ் அவர்கள் ஆயுர்வேத மாணவர்களுக்காகவும் மருத்துவர்களுக்காகவும் அறிவிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவ ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு அனுப்பானம் குறித்த ஆய்வுக்கட்டுரையை எழுதி அனுப்பியுள்ளார். இதில் முதலிடத்தில் தங்க பதக்கத்துடன் வெற்றிபெற்றுள்ளார். ஜாம்நகரியிலுள்ள ஹரிஉமாச்சனத்தில் பரிசினை பெற்றுக்கொள்ள இவருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றையச் சூழலில் அவ்விடம் செல்லக் கூட கடன்வாங்கும் நிலையில் ஜோசப் தாஸ் அவர்கள் இருந்தார். எனினும் சென்று பதக்கத்தைப் பெற்றமை தன் வாழ்வில் மறக்கமுடியாததாக உள்ளது என்று ஜோசப் தாஸ் அவர்கள் கூறுகின்றார். சித்த மருத்துவம் அறிந்த ஒருவர் ஆயுர்வேத மருத்துவ ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் கலந்து முதலிடம் பெறுவது மிக அரிய செயலாகும். பாம்புக்கடி வைத்திய ஆய்வு: டாக்டர் ஜோசப் தாஸ் அவர்கள் பாம்புக்கடி வைத்தியம் குறித்துப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அதில் வெற்றிபெற்றுக் காட்டியவர் என்றால் அது மிகையாகாது. 1984 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாள் அன்று பிரதமர் அலுவலகத்திலிருந்து இவர் பணிபுரியும் இடத்திற்குக் கடிதம் ஒன்று வந்தது. அன்றைய பாரத பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி அம்மையார் ஆவார். இவருடைய அலுவலகத்திலிருந்து வந்த கடிதம் என்பதால் மிகவும் முக்கியமான பணி என்பதை டாக்டர் ஜோசப் தாஸ் அவர்கள் புரிந்துகொண்டார். இவருடைய கல்லூரி முதல்வர் இப்பணியினை தாஸ் அவர்களே செய்யவேண்டும் என்ற வேண்டுகோளும் விடுத்தார். அப்பணி யாதெனின் மேலூரைச் சேர்ந்த நபர் ஒருவரின் பாம்புக்கடி விஷமுறிவைப் பற்றிய ஆய்வினைக் குறித்ததாக இருந்தது. இதற்குமுன் டாக்டர் ஜோசப் தாஸ் அவர்களுக்கு விஷமுறிவு பற்றிய அனுபவங்கள் பெரிதாக இல்லை என்றாலும் துணிவுடன் பாம்புக்கடி விஷமுறிவு குறித்த ஆராய்ச்சியை விரிவுபடுத்தச் சம்மதம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஜோசப் தாஸ் அவர்கள் நாகம் போன்ற சிலவகை பாம்புகளின் நஞ்சுகளைக் கேட்டுக்கொண்டதன்படி சில விஷங்கள் இவருக்கு வழங்கப்பட்டன. ஜோசப் தாஸ் அவர்களின் தலைமையில் குழுக்களாகப் பிரிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு ஆராய்ச்சிகள் தோல்விகளைச் சந்தித்தன. எனினும் மனம்தளராமல் அடுத்தடுத்த முயற்சிகளில் ஈடுபட்டார். இறுதியாக நீலி எனப்படும் தாவரத்தினை பயன்படுத்தி நல்ல முடிவுகளைப் பெறத்தொடங்கினார் ஜோசப். 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதியில் பத்திரிகைகள் இவரின் வெற்றியை வெளிப்படுத்தின. இவ்வாறு சித்த மருத்துவத்தில் அளப்பரிய சாதனை புரிந்துள்ள பெருமையை உடையவராக ஜோசப் தாஸ் அவர்கள் அமைந்துள்ளார். |
||||||||
by Lakshmi G on 28 Dec 2020 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|