மதுரை சித்திரைத் திருவிழாவில், தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் ஏப்ரல் 19-ந் தேதி இறங்குகிறார்.
சித்திரைப் பெருந்திருவிழா ஏப்ரல் 15- ந் தேதி தொடங்குகிறது. விழாவையொட்டி ஏப்ரல் 17- ந் தேதி மாலையில், அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்.
தொடர்ந்து 18-ந் தேதி மதுரை மூன்றுமாவடியில் அதிகாலையில் எதிர்சேவை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் பெருமாள் வைகையாற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் 19-ந் தேதி அதிகாலையில் இறங்குகிறார்.
20-ந் தேதி வைகை ஆறு தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்வும், அன்று இரவு தசாவதாரம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
21-ந் தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு அலங்காரத்தில் அழகர் காட்சி தருவார். அன்று அதிகாலையில் சுவாமி அழகர்மலை நோக்கிச் செல்வார்.
22-ந் தேதி இரவு அப்பன்திருப்பதி மண்டபங்களில் கள்ளழகர் காட்சி தருவார். 23-ந் தேதி காலை 11 மணிக்கு சுவாமி அழகர்கோவில் சென்று இருப்பிடம் சேருவார்.இதையொட்டி அழகர்கோவிலில் இருந்து மதுரை வண்டியூர் வரை சுமார் 445 மண்டபங்களில் கள்ளழகர் சென்று எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து திரும்புவார்.
உலக அளவில் பிரசித்திபெற்ற இந்த சித்திரை திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். அவர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக போலீஸ் பாதுகாப்புடன் 27 உண்டியல்பெட்டிகள் சுவாமி செல்லும் வழியாகவே சென்று கோவிலை வந்தடையும்.
இதற்காக இக்கோவிலின் திருக்கல்யாண மண்டப வளாகத்தில் உண்டியல்பெட்டிகள் தற்போது தயார்நிலையில் உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் பலர் செய்து வருகின்றனர்
|