கேரளாவில் தோட்ட வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் தனது இனிமையான குரலினால் விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்ற "உன்னை காணாத..." பாடலை பாடும் வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்த பாடலை பாடிய ஷங்கர் மகாதேவன் இந்த வீடியோவை பார்த்து விட்டு, அந்த தொழிலாளியை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், இவரை கண்டுபிடிக்க யாராவது உதவுங்கள் என டுவிட்டரில் பதிவிட்டார்.
இதையடுத்து அந்த இளைஞர் கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ராகேஷ் உன்னி நூரநாடு என்பது தெரியவந்தது. ராகேஷை ஷங்கர் மகாதேவன் போனில் அழைத்து பாராட்டினார். இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் சாம் சிஎஸ், தனது படத்தில் ராகேஷை பாட வைப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ராகேஷை கமல் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். தனது ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு அவரை வரவழைத்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பாராட்டியதோடு, அவரை பாடவும் வைத்தாராம் கமல்.
|