சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் அடுத்த மாதம் 6 ந்தேதி தொடங்க உள்ள சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் கடுமையான கட்டுபாட்டுகளை விதித்துள்ளது. அதன் படி கடந்த 2011 ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வென்றபோது மேலாளராக பணிபுரிந்த ரஞ்சிப் பிஸ்வால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றரை ஆண்டுகள் மேலாளர் பதவியில் இருந்த இவர் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், உள்ளதை உள்ளபடி அப்படியே அறிக்கையாக கொடுத்துவிடும் துணிச்சல் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வீரர்கள் இரவு பார்ட்டிகளுக்கு செல்ல தடை, நள்ளிரவில் வெளியே செல்ல அனுமதி கிடையாது.முன் அனுமதி இன்றி தங்கியிருக்கும் ஓட்டலை விட்டு வீரர்கள் வெளியே செல்லக் கூடாது. யாரிடம் இருந்தும் பரிசுப் பொருட்களை பெறக்கூடாது. வீரர்களின் மொபைல் எண்கள் முழுவதும் கண்காணிக்கப்படும். போன்ற நடைமுறைகளும் கடைபிடிக்கப்படும். இந்த விதிகள் ஏற்கனவே உள்ளது தான் என்றாலும், 2011ல் உலக கோப்பை வென்ற பின், யாரும் இதை ஒழுங்காக பின்பற்றவில்லை. இம்முறை, சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணிக்கு எந்த பிரச்னையும் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு, பிஸ்வாலை இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
|