ஆசிய கோப்பை ஹக்கி தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே, இந்திய வீரர்கள் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் இந்தியாவுக்கு "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய ரகுநாத், முதல் கோல் அடித்தார். இதற்கு மலேசிய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் இந்தியா 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் அசத்திய இந்திய அணிக்கு, 60வது நிமிடத்தில் மலேசிய கோல்கீப்பரை ஏமாற்றி ராமன்தீப் "பாஸ்' செய்த பந்தை மன்தீப் சிங் கோலாக மாற்றினார். சாமர்த்தியமாக விளையாடிய இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், மலேசிய வீரர்களின் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை தடுத்து, கோல் அடிக்கும் முயற்சியை முறியடித்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஏழாவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதி போட்டியில், இந்திய அணி, நடப்பு சாம்பியன் தென் கொரியாவை சந்திக்கிறது. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில், அரையிறுதியில் தோல்வி கண்ட மலேசியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
|