சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. மைதானம் ஈரப்பதமாக இருந்ததால், 40 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டும் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி அசத்தல் துவக்கம் கொடுத்தது. 33 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா வெளியேறினார். பிறகு கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த தவான் அரைசதம் கடந்தார். இவர் 68 ரன்னுக்கு அவுட்டனார். மலிங்கா ஓவரில் இரு பவுண்டரி அடித்த கோஹ்லி, மெண்டிஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பி, ஒருநாள் அரங்கில் 23வது அரைசதத்தை கடந்தார். இறுதியில் ரெய்னா ஒரு கலக்கலான பவுண்டரி அடிக்க, இந்திய அணி 35 ஓவரில் 2 விக்கெட்டுக்கு, 182 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வரும் 23ல் பர்மிங்காமில் நடக்கும் இறுதிபோட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி சந்திக்கிறது.
|