வணக்கம்.
தென்தமிழகமாம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகா சொக்கநாதன்புத்தூர் கிராமத்தின் எல்லையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ போத்திராஜா திருக்கோவில் பற்றிய சிறுதொகுப்பு தான் இது.
கோவில் உருவான வரலாறு: திருநெல்வேலி மாவட்டம் (தற்போதைய தென்காசி மாவட்டம்) கடையநல்லூர் நகராட்சியில் ஒரு காட்டுக்குள்ளே எங்கள் குலதெய்வமான ஸ்ரீ போத்திராஜா மண்புற்று போல வளர்ந்து வந்ததாம். வருடத்திற்கு இரண்டு நாட்கள் (மாசி மஹா சிவராத்திரி & சர்வ அமாவாசை [மாசிப்படைப்பு]) மட்டும் எங்கள் குலதெய்வ வகையறாவைச் சேர்ந்த உறவினர்கள் வழிபட்டு வந்தார்களாம்.
புற்று வளர்ந்த இடத்தின் உரிமையாளரோ 'எந்த நம்பிக்கையில் இந்தப்புற்றை வணங்குகிறார்கள்' என்ற நோக்கோடு புற்றை இடித்ததாகக்கூறப்படுகிறது. உடனே நம் தெய்வமோ வயதான கிழவன் வடிவம் பூண்டு இடம் தேடி சொக்கநாதன்புத்தூர் கிராமம் வந்தாராம். சுமார் 60 முதல் 70 வருடங்களுக்கு முன்பு, கிராம எல்லையிலே பனைமரமும் வேப்பமரமும் சேர்ந்து வளரும் இடத்தில் தான் குடிகொள்ளப்போவதாக மருளாளி (சாமியாடி) மூலமாக அருள்வந்து எம் வகையறா மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் கடையநல்லூரில் அய்யன் குடியிருந்த இடத்திலிருந்து பிடிமண் எடுத்துவந்து பீடம் அமைத்து வழிபட்டுக்கொண்டிருக்கிறோம்.
முதலில் மண்பீடம் அமைத்துதான் வழிபட்டோம், அதன்பின்னர் சிமெண்ட் சிலை, 2011ல் கற்சிலை அமைத்து குடமுழுக்கும் நடத்தினோம். தற்போதும் கொடைநாளில் அய்யன் முதலில் நிலையம் பெற்றிருந்த கடையநல்லூர் காட்டுக்குள்ளே ஒரு ஊற்றில் தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அபிசேகம் செய்யப்படுகிறது. இன்றளவும் அந்த பனைமரம் பாதிமுறிந்த நிலையில் கோவில் கருவறையை ஒட்டி இருக்கத்தான் செய்கிறது. மூலவருக்கு படைக்கப்படும் அத்தனையும் பனைமரத்துக்கும் படைக்கப்படுகிறது. கோவிலில் மூலவர் போத்திராஜா குதிரை வாகனத்தோடும் லாடசன்னாசி என்ற தவமுனியும் ஒரே கருவறையில் இருப்பது தனிச்சிறப்பு. அதுபோக விநாயகர், சங்கிலிபூதத்தான், பேச்சியம்மன் மற்றும் கருப்பசாமி போன்ற பரிவார தெய்வங்களுக்கு தனி சன்னதிகளும் உண்டு. போத்திராஜா & லாடசன்னாசிக்கு உடையாத்தேங்காய், நனையாப்பச்சரிசி & பழங்கள் படையலாகப் படைப்பது வழக்கம். உடையா முக்கண்தேங்காயை படைக்கவேண்டி சிவபெருமானிடம் வரம் வாங்கினாராம் அய்யன் போத்திராஜா. காவல் தெய்வங்களான பேச்சியம்மன் & கருப்பசாமிக்கு கிடாய் வெட்டி, முட்டை, முருங்கை & கருவாடோடு படையல் போடுவதுண்டு மாசிக்கொடை நாளில்.
கொடைவிழா & விசேச நாட்கள்:
மாசி மகா சிவராத்திரி மற்றும் அதற்கு அடுத்தநாள் வரக்கூடிய அமாவாசை தினங்களில் கொடைவிழா சிறப்பாக நடைபெறும். ஊரிலிருந்து மேளதாளங்களோடு தீர்த்த,பால் குடங்கள் வந்து சிறப்பு அபிசேகங்கள் செய்யப்பட்டு சாமக்கொடை எனும் பெரும்படைப்பு நடைபெறும். அது தவிர சித்திரை மாதப்பிறப்பு, ஆனி முப்பழம், திருக்கார்த்திகை தீபம், ஆங்கில வருடப்பிறப்பு, தைப்பொங்கல் மற்றும் பிரதி மாதந்திர வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தலைக்கட்டு வரிதாரர்கள் மற்றும் பெண்ணடி மக்களை சேர்த்து கிட்டத்தட்ட நூறு குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும் காவல்தெய்வமாகவும் இருந்து எங்களைக் காத்துவருகிறார். மண்தரையாய் இருந்த கோவில் இன்று ஓரளவிற்கு உருப்பெற்றுள்ளது. சிறு சிறு திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.
-
Murugan KM
|