|
|||||
அம்ருதபுரி ஸ்ரீ ராமானுஜ யோகவன சம்ரோக்ஷணம் நவம்பர் 14-ல் நடக்கிறது! |
|||||
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் இருந்து பறவைகளின் சரணாலயமான வேடந்தாங்கல் செல்லும் வழியில் படாளம் கூட்டு ரோட்டில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள வையாவூரில் அமைந்து உள்ளது பக்தர்களின் சரணாலயமான அம்ருதபுரி ஸ்ரீராமானுஜ யோகவனம். இந்த அம்ருதபுரியை உருவாக்கியவர் ஸ்ரீமத் சீதாராம் சுவாமிகள். இவர் காஞ்சிப் பெரியவரின் வழி நடப்பவர். அது மட்டுமல்ல ஸ்ரீ ராமானுஜரைப் பின்பற்றுபவர். ஸ்ரீ ராமானுஜரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. வைணவ மரபில் வந்தவர் என்றாலும், ஜாதி, மதம், இனம் பாராமல், "சேர வாரும் ஜகத்தீரே" என்று அனைவரையும் ஓரணியில் இணைத்து சமத்துவத்திற்கு வழிகாட்டியவர். ஸ்ரீமத் சீதாராம் சுவாமிகளின் ஆன்மீக அருட்பணிகளுக்கு தாராமாதா துணை நிற்கின்றார. "ஸ்ரீ ஸ்ரீநிவாச நிகேதனம்" என்கிற தொண்டு நிறுவனமும் சுவாமிகளால் நிறுவப்பட்டது ஆகும். இதன் சார்பில் மாதம் தோறும் இலவச மருத்துவ முகாமும், தொழு நோயாளர்களுக்கு உதவியும், இன்னும் பல சேவைகளும் வழங்கப்படுகின்றது. அம்ருதபுரியில் "கோசம்ரக்ஷணா" எனப்படும் "கோசாலை" அமைந்து உள்ளது. இங்கு கறவை நின்றுபோன பசுக்கள் பராமரிக்கப் படுகின்றன. கோசாலையில் பெருமாளின் சுதைச் சிற்பமும், கூப்பிய கரங்களுடன் ஆஞ்சநேயரும் உள்ளனர். அதுமட்டுமல்ல, சிவாம்சமான முனீஸ்வரன், முனீஸ்வரியும், சப்த மாதர்களும், துர்க்கையும் அருள்வது குறிப்பிடத்தக்கது. கோசாலைக்கு எதிர்ப்புறம் ஸ்ரீராமானுஜ யோகவனம் அமைந்து உள்ளது. அழகிய அலங்கார வளைவிலேயே ஸ்ரீனிவாசப்பெருமாள், மதுரவல்லித் தாயார் மற்றும் ஸ்ரீராமானுஜரையும் தரிசிக்க முடிகின்றது. முன்னும், பின்னுமாக பெரிய திருவடியாம் ஸ்ரீகருடாழ்வாரும், சிறிய திருவடியாம் ஸ்ரீ ஆஞ்சநேயரும் சன்னிதி கொண்டு அருள்வது வேறு எங்குமே காண முடியாதது. அது போலவே இங்குள்ள ஸ்ரீநவக்கிரக விநாயகர் குறிப்பிட வேண்டியவர். ஒன்பது கிரகங்களையும் தன்னுள் அடக்கி நல்லன புரிவது வேறு எங்கும் காண முடியாதது. இவரை வணங்க, நவக்கிரகங்களும் அருள்கின்றனர். தலையில் குருவையும்,நெற்றியில் சூரியனையும்,வலது மேல் கையில் சனியையும்,வலது கீழ்க்கையில் புதனையும்,வலது தொடையில் செவ்வாயையும்,நாபிக் கமலத்தில் சந்திரனையும்,இடதுகீழ்க்கையில் சுக்கிரனையும்,இடது மேல் கையில் ராகுவையும்,இடது தொடையில் கேதுவையும் கொண்டவராக விளங்குகின்றார். அது மட்டுமா, இவருக்குப் பின்புறம் ஸ்ரீ யோக நரசிம்மர் அருள்கின்றார். இத்தகைய அமைப்பு, இவர்களை வழிபடுவோருக்கு 'கஜகேசரி யோகம்' தருகின்ற அமைப்பாகும். காஞ்சி மஹா பெரியவர் கூறிய படியே அமைக்கப்பட்டு இருப்பது பெரும் சிறப்பு ஆகும். தியான மண்டப மேற்புறம் சித்தர் பெருமக்களும், சித்தராகவே திகழ்ந்து மறைந்த கர்மயோகி அப்துல் கலாம் சிலையும் அமைந்து இது சர்வ சமய பிரார்த்தனைக்கூடம் என்ற பெயருக்குப் பெருமை சேர்க்கின்றது. நுழைவு வாயிலின் மேலே நடுநாயகமாக, ஸ்ரீஸ்ரீனிவாசப் பெருமாளை வணங்கும் சுவாமிகளும், தாரா மாதாவும் சுதைச்சிற்ப வடிவில் வண்ணமயமாக அருள்கின்றனர். உள்ளே நுழைந்ததும் வலது புறம் சமீபத்தில் கும்பாபிசேகம் செய்யப்பட்ட சித்தர் சன்னிதி அமைந்து உள்ளது. உள்ளே நுழைந்தால் சுவாமிகளின் பெற்றோர் சன்னிதியும், ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சன்னிதியும் அமைந்துள்ளது. கூப்பிய கரங்களுடன் பெரிய திருவடியாம் கருடனின் சிறிய தோற்றம். அவரை வணங்கினால் எதிரில் ஸ்ரீஸ்ரீனிவாசப் பெருமாளின் அழகிய திருக்கோலம். இட வலமாக திருச்சுற்று பிரகாரம் வந்தால் ஸ்ரீ மதுரவல்லித் தாயார் முதலில் காட்சி தருகின்றார். கோதை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் தனிச் சன்னிதியில் அருள்கின்றார். அடுத்ததாக எம்பெருமானுக்கே கடன் வழங்கிய குபேரன் சன்னிதி.அவருக்கு மேற்புறம் கற்பக விருட்சமும், காமதேனுவும் காட்சி தருகின்றனர். விஷ்வக்சேனர் அடுத்துக் காணப்படுகின்றார். எல்லா பெருமாள் ஆலயங்களும் போலவே இங்கும் பரமபத வாசல் அமைந்துள்ளது. வைகுண்ட ஏகாதசி இங்கே சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. நாகர் கூட்டம் சன்னிதியும், ஸ்ரீ அனந்தாழ்வார் சன்னிதியும், ஸ்ரீகாலபைரவர் சன்னிதியும் அமைந்து உள்ளது. ஒவ்வொரு மாதமும் வருகிற சிரவண தீபம் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. எம்பெருமானுக்கு உகந்த திருவோண நட்சத்திர நாளில் ஸ்ரீமத் சீதாராம் சுவாமிகள் நாவில் கற்பூர தீபம் ஏற்றி, ஆலய வலம் வந்து அருள்வாக்கு அருள்கின்றார். உலக அமைதிக்காக பாத யாத்திரை செல்வது ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நடக்கிறது. சென்னை நுங்கம்பாக்கம் நிகேதனில் இருந்து அம்ருதபுரி நோக்கி சுவாமிகள், தாராமாதா தலைமையில் ஆண், பெண், குழந்தைகள் என பக்தர்கள் செல்கின்றனர். இந்த ஆண்டு அடாத மழையிலும் விடாது சென்றது குறிப்பிடத் தக்கது. பாத யாத்திரைக்கு முன்னதாக 18 இடங்களில் திருக்குடைப் பவனி நடைபெறுகின்றது. ஆண்டு தோறும் திருவிளக்குப் பூஜை நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தி, கருட பஞ்சமி, கருட ஸ்வாதி, ஆடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி, அனுமத் ஜெயந்தி என அனைத்து விசேஷங்களும் குறைவின்றி நடக்கின்றன. ஸ்ரீராமானுஜ யோகவனத்தைச் சுற்றிலும் உள்ள மதில் சுவர்களில் ஆயிரத்தெட்டு வித விதமான அனுமன்களைப் பிரதிஷ்டை செய்யும் திருப்பணி தொடங்கி நடந்து வருகின்றது. பிற்காலத்தில் அனுமன் கோட்டையாக இதுபோல் வேறெங்குமே காண முடியாததாக அமையும் என்பது சிறப்பு!. அம்ருதபுரி ஸ்ரீராமானுஜ யோகவனத்தில் உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் சன்னிதி மகா கும்பாபிஷேகம் 14-11-2018 புதன்கிழமை எம்பெருமானின் திருநட்சத்திரமான திருவோண நாளில் காலை 9 மணி முதல் 10-30 மணிக்குள் நடைபெறுகிறது. அனைவரும் பங்கு பெற்று அருள் பெறலாமே! |
|||||
by Mani Bharathi on 26 Oct 2018 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|